Skip to main content

ரயில் புழு






வெளியிலிருந்து, கட்டை மேல் சுத்தியலால் அடிக்க வரும் ‘டொப் டொப்’பென்ற சத்தம் கேட்டே எழுந்தேன். அலாரம் எழுப்ப இன்னும் அரை மணி நேரம் இருந்தது. கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றால் சத்தம் வருவது நிற்கவில்லை. பொங்கல் விடுமுறை முடிந்து அன்றுதான் அலுவலகம் திரும்ப வேண்டும். நான்கு நாட்கள் தொடர் விடுமுறை. வெளியில் எங்கும் செல்லவில்லை. சோபாவிலிருந்து படுக்கைதான் நான் இந்த நாட்களில் அதிகம் நடந்த தொலைவு. சுகமாய்ச் சோம்பிக் கிடந்தேன். நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் என்றே மூன்று நாட்களைக் கடத்திவிட்டேன். ஊருக்குப் போக முடியாது. இங்கே நண்பர்களைப் பார்த்தாலும் அவர்களுடைய கேள்வி என்னவாக இருக்கும் என்பதை அறிவேன். இன்றும்கூட அலுவலகம் போனதும் எல்லோரும் விசாரிப்பார்கள். பொய் சொல்ல வேண்டும். சலிப்பாக இருந்தது.

மொபைலை எடுத்தேன். பார்ப்பதற்கு எதுவுமிருக்கவில்லை. பேஸ்புக், இன்ஸ்டா என அனைத்துச் சமூக ஊடகங்களிலிருந்து வெளியேறிவிட்டேன். படுக்கையிலிருந்து எழுந்து கையில் பிரஷை எடுப்பதற்கு என்னை நானே பிடித்துத் தள்ள வேண்டியதாக இருந்தது. முந்தைய நாள் இரவு வரவேற்பறையின் ஜன்னல்களைச் சாத்தாமலேயே உறங்கிப் போய்விட்டேன். சாப்பிட்டுவிட்டுப் போட்டிருந்த தட்டைச் சுற்றிப் பழப்பூச்சிகள் பறந்துகொண்டிருந்தன. அதைப் பார்த்ததும் குமட்டியது. 

வாயில் பிரஷை வைத்துக்கொண்டே அன்றைக்கு அணிவதற்குத் தேவையான சட்டை, பேன்ட்டை எடுத்து வைத்தேன். கட்டையில் ஆணி அடிப்பது, ரம்பத்தால் வறவறவென அறுப்பது, கம்பியைச் சுழற்சக்கரத்தில் கொடுத்துத் துண்டிப்பது என விதவிதமாகப் புதிய சத்தங்கள் வெளியிலிருந்து வரத் தொடங்கின. இன்னும் சில மாதங்களுக்கு இச்சத்தங்களுக்குப் பழகித்தான் ஆக வேண்டும். 

வாய் கொப்பளித்துவிட்டு கதவைத் திறந்து வெளியே வந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தேன். எங்கள் வீட்டை ஒட்டி புதிதாக ஒரு குடிசை எழும்பி நின்றது. அதன் வாசல், தெருவைப் பார்த்து இல்லாமல் என் படுக்கையறை ஜன்னல் பக்கமாக இருந்தது. அக்குடிசைக்குக் கதவு என்ற ஒன்று இல்லை. காடாத் துணியாலான திரையிட்டு அதன் வாசல் மூடப்பட்டிருந்தது. 

இந்த இடத்துக்குப் பூமி பூஜை போட்ட நாளன்றுதான் நிவேதினி இரண்டு நாட்கள் ஊருக்குப் போய் வருவதாகச் சொல்லிவிட்டு பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினாள். முந்தைய நாள் சண்டையோ வாக்குவாதமோ எங்களுக்குள் எதுவும் ஏற்படவில்லை. கிளம்பிய அன்று காலையில்கூட வழக்கம் போலப் பாலை எடுத்துக் காய்ச்சி வைத்திருந்தாள். கிச்சனை ஒதுக்கி பாத்திரங்களைக் கழுவி அடுக்கியிருந்தாள். அவளுடன் இருந்த அந்த எட்டு மாதங்களில், அதற்கு முன்பும்கூட ஒரு முறை இப்படித் தனியே கிளம்பிப் போயிருக்கிறாள். அப்போது என்னையும் உடன் வரச் சொல்லி அழைத்தாள். நான் மறுத்துவிட்டேன். இந்த முறை அதை மனதில் வைத்தோ என்னவோ என்னிடம் ஒரு வார்த்தையும் கேட்கவில்லை போல என்றுதான் நினைத்தேன்.        

“கொண்டு வந்து டிராப் பண்ணவா?”

“பரவால்ல.. ஓலா புக் பண்ணிருக்கேன்.” அவள் குரல் கட்டிப் போயிருந்தது. ஜலதோசம் பிடித்ததைப் போல முகம் சிவந்து கனத்திருந்தது. அவள் என் முகத்தைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்த்ததைப் போலத் தோன்றியது. 

அதை உறுதி செய்துகொள்ளும் நோக்கில், “வீட்டுச் சாவி?” என்று கேட்டேன்.

கைப்பையினுள் எதையோ தேடியபடி, “என்கிட்ட ஒண்ணு இருக்கு. மிச்ச இரண்டு ஹால்ல தொங்குது” என்றாள். உறுதிசெய்துகொண்டேன்.

அதற்குமேல் கேட்பதற்கு எதுவுமிருக்கவில்லை. திருமணம் முடிந்து எட்டு மாதங்கள் ஆகியும் எங்களிருவருக்குமிடையே அன்யோன்யம் கூடிவரவில்லை. தேவைப்படும்போது பற்பசையுடன் பரஸ்பரம் உடல்களையும் பகிர்ந்துகொள்ளும் அறைவாசிகளைப் போலவே பழகி வந்தோம். சண்டைகள்கூடப் போட்டுகொண்டதில்லை. ஒருவருக்குப் பிடிக்காத ஏதாவது ஒன்றை மற்றொருவர் செய்தால் அதை வேறு ஒருவருக்கு எடுத்துக்கூறி எச்சரிப்பது போலச் சொல்லிவிட்டுப் போய்விடுவோம். பல நேரங்களில் அந்த முனைப்புகூடக் காட்டாமல் அனுசரித்துக்கொள்வதும் உண்டு. வெளியில் பார்ப்பவர்கள் வித்தியாசமாகக் கேட்கிறார்கள் என்பதற்காகவே ஒருவரை ஒருவர் பன்மையில் விளிப்பதை நிறுத்திக்கொண்டோம்.

முப்பது வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்டால் பிள்ளை பெறுவதில் சிக்கல் வரலாம், பணிவிடுப்பை விரைவுபடுத்த முடியாது என்றெல்லாம் எச்சரித்த யாரும் இதைப் பற்றி ஒரு வார்த்தை கூறவில்லை. திருமணத்தின்போது எனக்கு முப்பது மூன்று அவளுக்கு முப்பத்திரண்டு. 

இரண்டு நாட்களில் திரும்பி வருவதாகச் சொன்னவள் இரண்டு மாதங்களாகியும் வரவில்லை. இடையில் வாட்ஸப்பில் குறுந்தகவல் அனுப்பிக் கேட்டபோது ஒரு வாரத்தில் வருவதாகப் பதில் வந்தது. இடையில் ஒருமுறை அழைத்தபோது பிறகு தானே கூப்பிடுவதாகச் சொல்லித் துண்டித்துக்கொண்டாள். அதன் பின் விடுக்கப்பட்ட அழைப்புகளுக்கும் அனுப்பப்பட்டக் குறுஞ்செய்திகளுக்கும் பதில் இல்லை. அப்போதே எனக்கு அவள் திரும்பமாட்டாள் என்று உறுதியாகத் தோன்றியது. 


O


அலுவலகத்துக்குக் கிளம்பத் தயாராகி வெளியே வந்தபோதுதான் கவனித்தேன். வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த என்னுடைய கார் சுத்தமாகத் துடைத்து வைக்கப்பட்டிருந்தது. நான் யாரையும் துடைத்து வைக்கச் சொல்லவில்லை. எங்கள் தெருவிலேயே சிலர் இதற்கென்று தனியாக ஆள் அமர்த்திச் சுத்தம் செய்கிறார்கள். என்னுடைய காரைத் தோன்றும்போது நானே துடைத்துக்கொள்வதே வழக்கம். புதிதாக வந்திருக்கும் யாராவது கார் மாற்றித் துடைத்திருக்கக் கூடும்.  

பொருட்களை வாங்கி, அவற்றைத் துடைத்துத் துடைத்து வைத்துக்கொள்ளும் ஆட்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். நிவேதினி அப்படித்தான். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து வைத்துக்கொள்வாள். சின்னத் தூசுத் துணுக்கு கண்ணில்படக் கூடாது. அவள் துணிமேல் என் துணி கிடக்கும்போது அதைத் தனியேத் தன் விரல் நக நுனியால் தூக்கி எடுத்துப் போடுவதை நானே பார்த்திருக்கிறேன். கோபம் வரும். காட்டிக்கொண்டதில்லை.

சுத்தம் செய்வதிலேயே இந்தப் பெண் தன் ஆயுளைக் குறைத்துக்கிறாள் என்று நினைத்துக்கொள்வேன். இரவில் உறவுகொண்ட பின்பு, அது எத்தனை மணியாக இருந்தாலும் குளித்துவிட்டே வந்து படுப்பாள். அதுவும் குளித்த பிறகு என் கால் பக்கத்தில் அவள் தலைப்பக்கம் இருக்குமாறு வந்து படுத்துக்கொள்வாள். முதல்முறை அதைப் பார்க்கும்போது ஏனோ சட்டென்று எரிச்சல் படர்ந்தது. ஒவ்வொருமுறையும் மறுநாள் அதைப் பற்றிக் கேட்க வேண்டும் என்று நினைப்பேன். தயக்கம் மேலிட அப்படியே விட்டுவிடுவேன்.

அவள் கிளம்பிப் போனதற்கு முந்தைய நாள் இரவும் நாங்கள் உறவுகொண்டிருந்தோம். அன்றும் வழக்கம்போல எல்லாம் முடிந்ததும் குளிக்கக் கிளம்பினாள். நான் அவள் திரும்புவதற்குள் தூங்கிப் போயிருந்தேன். இடையில் விழிப்பு தட்டியபோதுதான் அவள் கட்டிலுக்குக் கீழே போர்வையை விரித்துப் படுத்துக்கொண்டிருந்ததைக் கவனித்தேன். 

கையால் தொட்டதும் சுருண்டுகொண்டுவிடும் ரயில்புழுவைப் போல, அறையில் கசிந்த மெல்லிய நீல வெளிச்சத்தில் அவள் தன் கால்களுக்கு இடையே கைகளை நுழைத்துப் படுத்திருந்த காட்சி மனத்தில் அப்படியே ஒரு புகைப்படம் போலப் பதிந்துபோயிருக்கிறது. 


O


மறுநாளும் கார் துடைத்து வைக்கப்பட்டிருந்தது. பறவை எச்சமிட்டிருந்த முன்பக்கக் கண்ணாடி தண்ணீர்விட்டுத் துடைக்கப்பட்டதுபோல பளிச்சென்று மின்னியது. பக்கத்திலிருந்த மின்சாரக் கம்பத்தில் சாய்ந்தபடி அவன் நின்றுகொண்டிருந்தான். வட இந்தியன். எண்ணெய் காட்டப்படாத தேங்காய்ப் பத்தைத் தலை, அழுக்கேறியது என்றோ சுத்தமானது என்றோ கூறிவிட முடியாத கோலத்தில் ஒரு சட்டை, வெட வெடக்கும் பூஞ்சையான உடல் என்று பரிதாபகரமானத் தோற்றத்திலிருந்தான். என்னைப் பார்த்ததும் தோளைக் குறுக்கி முதுகைச் சற்று முன்னால் வளைந்து சல்யூட் வைத்தான்.

“நீதான் துடைச்சதா?” 

“ஆமா சார், பில்டிங்ல வேலை பாக்றன்” என்று வீட்டுப் பக்கத்துக் கட்டடத்தைக் காட்டினான்.

பர்ஸைத் திறந்து இருபது ரூபாயை எடுத்து நீட்டினேன். அதை வேகமாக வாங்க மறுத்தவன் கொச்சைத் தமிழில் காரைக் காட்டி கட்டட வேலை ஆரம்பமாகிவிட்டதால் தூசு அதிகமாகப் படிகிறது என்றான். 

நான் மறுபடியும் அந்த ரூபாயைப் பெற்றுக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தினேன். சிரித்துக்கொண்டே பரவாயில்லை என்று சொல்லி மறுத்தான். குச்சி குச்சியாக, நரம்போடும் கைவிரல்கள். முழுதாக ஐம்பது கிலோ தேறமாட்டான். 

அவனைப் பார்த்து நன்றி சொல்லிவிட்டு சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தேன். அவன் மெதுவாகப் பக்கத்தில் வந்து தலையைச் சொறிந்தபடி சிகரெட்டைப் பார்த்துக் கைக்காட்டினான். பாக்கெட்டிலிருந்து ஒன்றை உருவிக் கொடுத்தேன். சிரித்துக்கொண்டே வாங்கினான். மறுபடியும் ஒரு சல்யூட் வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

சலூன், ஓட்டல், கட்டட வேலைகள் என்று ஒவ்வொரு இடத்திலும் இவர்கள்தாம் வேலைக்கு இருக்கிறார்கள். மிகச் சொற்பமான சம்பளத்துக்கு இரவு பகலாக கடினமான வேலைகள் பார்க்கிறார்கள். அவனுக்கு நான் கொடுத்த இருபது ரூபாய் ஒன்றும் சிறிய தொகை கிடையாது. பிறகு ஏன் அதை மறுத்துவிட்டு சிகரெட் வாங்கினான்? ஏதாவது நீண்ட நாள் ஆசையாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். அதே நேரத்தில் நான் சிகரெட் குடிப்பதை அவன் முன்பே கவனித்திருக்கிறான். அதன் பொருட்டே ரூபாயை வேண்டாமென்று சொல்லி சிகரெட் கேட்டிருக்கிறான். கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் நினைத்துக்கொண்டேன். 

ஆனால், அது அன்றோடு நிற்கவில்லை. அனுதினம் வாடிக்கையாகிப் போனது. கார் சுத்தம் பண்ணுவதற்குத் தினம் ஒரு சிகரெட். அவன் தரும் அதீத மரியாதை எனக்குப் பிடித்திருந்தது. ஒருமுறை கையில் சிகரெட் குறைவாக இருந்தபோது அவனிடம் ரூபாய் கொடுத்து வாங்கி வரச் சொன்னேன். எவ்வளவு வற்புறுத்திக் கொடுத்தும் மிச்ச காசை வாங்க மறுத்துவிட்டான்.

ரூபாய் இல்லாமலாவது வெளியே கிளம்பியிருக்கிறேன். சிகரெட் இல்லாமல் வெளியே வருவதில்லை. நிவேதினிக்கு அந்த வாடையே ஆகாது. அவளிருந்த நாட்களில் வெளியே வந்து தெரு முக்கு வரை நடந்து போய் சிகரெட் குடித்துவிட்டு வருவேன். அவள் கிளம்பிப்போனது எனக்கு என் சுதந்திரத்தை மீட்டெடுத்ததைப் போல இருந்தது. 

அந்தக் குடிசையில் அவன் தனியாக இல்லை. அவனுடன் ஒரு பெண்ணும் தங்கியிருக்கிறாள். அவள் அவனுடைய மனைவியாக இருக்க வேண்டும். அவளுக்கு நிச்சயமாகப் பதினெட்டு வயதுகூட இருக்காது. ஒரு நாள் குடிசைக்கு வெளியில், சிமெண்ட் பையின் மேல் அமர்ந்து, தெருவிளக்கு வெளிச்சத்தில் காய் நறுக்கிக்கொண்டிருந்தபோதுதான் அவளை முதன்முதலில் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் வாஞ்சையாகச் சிரித்தாள். பதிலுக்கு நானும் சிரித்தேன்.

நல்ல அழகி. அந்த வயதுக்கே உரிய பளபளப்பு ஏறிய லட்சணமான முகம். நிவேதினியும் அழகிதான். இவள் வயதில் இன்னுமேகூடக் கவர்ச்சியாகவும் வாளிப்பாகவும் இருந்திருப்பாள். இவளைப் பார்த்ததும் நிவேதினியை நினைத்துக்கொள்வதன் வழியே மனம் எந்த இருளுக்குள் என்னை இழுத்துச் செல்கிறது என்பது எனக்குப் புரியாமல் இல்லை. அதற்குமேல் அங்கு நிற்பது நல்லதல்ல என்பதை உணர்ந்து வீட்டுக்குள் சென்றேன்.

ஒரு ஆள் படுத்தால் காலும் தலையும் இடிக்கும் அளவுதான் அந்தக் குடிசையின் பரப்பு. அதற்கு இன்னும் மின்சாரம் இழுக்கப்படவில்லை. எமர்ஜென்ஸி விளக்கு ஒன்று இருக்கிறது போலும். இருட்டிலும் சென்னையின் புழுக்கத்திலும் எப்படித் தூங்குகிறார்கள் என்று யோசித்தால் பாவமாக இருக்கும். பழைய போர்வைகள், தலையணைகளை எடுத்துக்கொடுத்தேன். வாங்கிக்கொண்டான். அப்போதுதான் ஜீதேந்திரா என்று பெயரைச் சொல்லித் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். 

அவ்வப்போது வீட்டு வாசலில் வந்து நிற்பான். எவ்வளவு நேரமாக அப்படி நின்றுகொண்டிருந்தான் என்று தெரியாது. தவறியும் அழைப்பு மணியை அடிக்கவோ, சார் என்று குரல் கொடுக்கவோ மாட்டான். நானாகப் பார்த்தால்தான் உண்டு. மிகுந்த கூச்சத்துடன் டீத்தூள், சக்கரை என்று ஏதாவது கேட்பான். நானாகத்தான் வெளியில் வாங்கியதில் மிஞ்சிப் போகும் உணவுகளை அவனுக்குக் கொடுத்துப் பழக்கப்படுத்தியிருந்தேன். உணவுப் பொருட்களை மட்டும் அவன் மறுத்ததில்லை. எப்போது கொடுத்தாலும் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிவைத்துக்கொள்வான். குடும்பமாக இல்லாமல் தனியனாக இருந்திருந்தால் இந்த அளவுக்கு நான் அவன் மேல் கருணையோ நம்பிக்கையோ கொண்டிருந்திருப்பேனா தெரியாது. 

அந்தப் பெண் எப்போதும் குடிசைக்கு வெளியில் வைத்துதான் சமைப்பாள். சுள்ளிகளையும் உடைந்த கட்டைகளையும் எடுத்துப் பொறுக்கி அடுப்புக்குத் தீமூட்டுவாள். என்ன பிரமாதமான பொருட்கள் அவளிடம் இருக்கக்கூடும்? ஆனால், இரவில் ரொட்டியை அடுப்பில் வைக்க எழும் அதன் வாசம் என் பசியைக் கிளறும். ஒரு வகையில் அந்த வாசனையாவது வயிற்றுப் பசியைக் கிளர்த்துவதோடு நின்றுவிடும். 


O


அன்று இரவு, அப்போதுதான் நல்ல மழை பெய்து சற்று வெறித்திருந்தது. மெல்லிய குளிர் சுவர்களின் வழியே ஊடுருவி அறைக்குள் பரவியது. ஜன்னலின் கதவுகளை லேசாகத் திறந்துவிட்டேன். சாரலைத் தூறியபடி மென்குளிர்க் காற்று அறைக்குள் வீசியது.

தூக்கம் வரவில்லை. நள்ளிரவு ஆகிவிட்டது. இடையில் போன மின்சாரமும் திரும்பியிருக்கவில்லை. என்னை இருளும் நிசப்தமும் சூழ்ந்திருந்தன. கண்களைத் திறந்தாலும் மூடினாலும் வித்தியாசம் தெரியவில்லை. அறையில் நிலவிய அதீத அமைதி என்னுடைய சமநிலையைக் குலைத்தது. 

அப்போதுதான் அந்தச் சத்தம் கேட்டது. தூரத்திலிருந்து வருவதைப் போல ஒலித்தது. முதலில் பூனையொன்றின் அழுகுரல் என்றுதான் நினைத்தேன். உற்றுக் கேட்டபோதுதான் பூனையுடையதல்ல என்பது புரிந்தது. அது ஒரு பெண்ணின் முனகல். ஜன்னல் பக்கமாக இருந்து வந்தது. பக்கத்துக் குடிசைப் பெண். அவளேதான். முதன்முறையாக அவள் குரலை இப்படியாகக் கேட்கிறேன். அந்தச் சத்தம் என்னை என்னவோ செய்தது. உடல் குறுகுறுத்தது. அந்தக் குளிரிலும் சட்டென்று உடலெங்கும் வெம்மை ஏறியது. 

மெதுவாகக் கீழ் ஜன்னலின் கொக்கியைச் சத்தம் வராமல் எடுத்துவிட்டேன். லேசாகக் கதவைத் திறந்தேன். அந்தக் குடிசையின் வாசல் காடாத்துணியாலான திரையால் மூடியிருந்தது. ஆனால், உள்ளே மண்ணெண்ணய் விளக்கு எரிந்துகொண்டிருக்க வேண்டும். திரையில் நிழல்களின் முயக்கம் தெரிந்தது. அதைப் பார்த்ததும் என் உள்ளங்கைகள் வியர்த்துவிட்டன. முயக்கப் பெருக்கில் சுற்றிலுமிருந்த நிசப்தத்தை அவர்கள் கருத்தில் கொண்டிருக்கவில்லை. ஜன்னல் கதவைத் திறந்ததில், அந்தச் சத்தத்தின் துல்லியம் கூடியது. எனக்கு உடல் பற்றி எரிந்தது. நெஞ்சம் படபடவென அடித்துக்கொண்டது. கைகளைக் தொடையிடுக்கில் புதைத்துக்கொண்டேன். 

அப்படியொரு முனகலை, விரகதாபத்தின் ஒலிக்கூச்சலை அதற்கு முன்பு கேட்டதேயில்லை. பார்ன் படங்களில் எழுப்பப்படும் சத்தமெல்லாம் வேண்டுமென்றே கிளர்ச்சியூட்டப் புனையப்பட்டவை என்றே அதுவரை நம்பிக்கொண்டிருந்தேன். அதைப் பொய்யாக்கி திரையில் தெரிந்த நிழல்களின் இயக்கம் உச்சத்தைத் தொட்டு நின்றபோது நானும் தளர்ந்து போய்ப் படுக்கையில் விழுந்தேன். 

பொதுவாக உறக்கம் சுழற்றிவிடும். மாறாக, அன்று சுத்தமாக உறக்கம் கூடவில்லை. உடல் கதகதவென்றிருந்தது. புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன். மனத்துள் ஏதோ ஒன்று தொந்தரவு செய்துகொண்டிருந்தது. அது என்னவென்று என்னால் பிரித்தறிந்துகொள்ள முடியவில்லை. நடுவில் சற்று நேரம் தூங்கியதைப் போல இருக்கும். சுய நினைவு வந்து மறுபடியும் விழித்துக்கொள்வேன். ஏதோ ஒரு அமைதியின்மை உள்ளுக்குள் கிடந்து குடைந்தது.

அப்படி ஒருமுறை விழிப்பு வந்தபோதுதான் கீழே திறந்துவைத்திருந்த ஜன்னல் கதவை மெதுவாக இழுத்துச் சாத்தினேன். நான் கேட்டதும் பார்த்ததும் கனவா நினைவா என்று ஒரு கணம் குழம்பிப் போனேன். 

ந்டுவில் மின்சாரம் திரும்பி மெல்லிய நீல வெளிச்சம் அறையெங்கும் பரவியது. அப்போதுதான் சட்டென்று அந்தப் பிம்பம் மனத்துள் எழுந்து வந்தது. சுருண்டு கிடக்கும் ரயில் புழு. படுக்கைக்குக் கீழே எட்டிப் பார்த்தேன். ரயில் புழுவைப் போல நிவேதினி சுருண்டு படுத்துக்கிடந்தாள். வேகமாக எழுந்து விளக்கைப் போட்டேன். அறையில் என்னைத் தவிர யாருமில்லை. விளக்கை அணைக்காமல் அப்படியே படுக்கையில் விழுந்தேன்.

அலாரம் அடித்து விழித்தபோது கண்கள் எரிந்தன. அன்று அலுவலகத்துக்கு விடுப்பு சொல்லிவிடலாமா என்று ஒரு கணம் யோசித்தேன். ஆனால், அங்கிருந்து வெளியேறுவதுதான் நான் உடனே செய்ய வேண்டியது என்று தோன்றியது. குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு அலுவலகத்துக்குக் கிளம்பத் தயாரானேன். 

அலுவலகப் பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்து வீட்டுக் கதவைப் பூட்டினேன். எக்காரணம் கொண்டு அந்தக் குடிசைப் பக்கமாகப் பார்த்துவிடக்கூடாது என்று மனத்துக்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேன்.

வாசலில், வழக்கம்போல கார் சுத்தமாகத் துடைத்துவைக்கப்பட்டிருந்தது. அவன் எப்போதும் நிற்கும் மின்சாரக் கம்பத்தில் சாய்ந்தவாறு நின்றுகொண்டிருந்ததைக் கவனித்துவிட்டேன். அவனைக் கண்டுகொள்ளாமல் மொபைலை எடுத்து நோண்டிக்கொண்டே காரில் ஏறினேன். அவன் முன்னேறிப் பக்கத்தில் வந்தபோது பட்டென்ற சத்தம்வர காரின் கதவை வேகமாக அடித்துச் சாத்திக்கொண்டேன். காரைக் கிளப்பி முன்னால் சென்று கண்ணாடியில் பார்த்தேன். அவன் கார் போகும் திசையைப் பார்த்தபடி நடுவீதியில் நின்றுகொண்டிருந்தான்.

நன்றி : உயிர்மை, ஓவியர் கருப்பன்.


 








Comments

Popular posts from this blog

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம்

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம் -- குள்ளச்சித்திரன் சரித்திரம், வெளியேற்றம் நாவல்களை முன்வைத்து -- “சொல்லித் தீர்ந்துவிட்டன எல்லாக் கதைகளும். மறு கூறலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் புனைவு, சொல்லலின் நூதனத்தில் மட்டுமே  தன் உயிரை வைத்திருக்கிறது” – பகடையாட்டம் பின்னுரையில். இங்கே உள்ள கதைகள் அத்தனையும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன; புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை, சொல்லும் விதத்தில் மட்டுமே இனி புதிதாக ஏதேனும் ஒன்றைச் செய்ய முடியும் என்பதை யுவன் தீவிரமாக நம்புகிறார் என்பதை அவரின் புனைவுகளை தொடர்ந்து வாசிப்பதன் வழியே புரிந்துகொள்ள முடிகிறது. அப்படிப் புதிதாக தன் கதைகளைச் சொல்வதற்கான ஓர் உத்தியாக மாற்றுமெய்மையைக் கையாள்கிறார். அவரின் முதல் நாவலான குள்ளச்சித்திரன் சரித்திரமும், வெளியேற்றமும் அத்தளத்தில் எழுதப்பட்ட  அவரின் முக்கியமான படைப்புகள் எனலாம்.  எது மாற்றுமெய்மை? முதலில் எது மெய்மை? மெய்மை என்பதை எளிமையான புரிதலுக்காக யதார்த்தம் என்று கொள்வோம். பெளதீக ரீதியாக, அறிவியலின் தர்க்கத்திற்கு உட்பட்டு நிகழும் யாதொன்றையும் யதார்த்தம் அல்லது மெய்மை என்று வரைய

கேண்மை

  தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் கலை இலக்கிய மாத இதழ் ஒன்றுக்காக நேர்காணல் வேண்டுமென்று அழைத்திருந்தார்கள். அழைத்தவர் தமிழின் முக்கியமான கவி. பக்கத்து மாநிலம் ஒன்றில் வசிக்கிறார். நேர்காணலுக்காக மாநிலம் விட்டு மாநிலம் வரவேண்டும். சிரமப்பட வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் விடாப்பிடியாக வருவதாகக் கூறிவிட்டார். முந்தைய சந்திப்பில் அவர் குறிப்பிட்டுப் பேசிய புத்தகம் ஒன்றை அவருக்குப் பரிசாக அளிப்பதற்காகப் புத்தக அடுக்கில் தேடிக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் தடித் தடியான புத்தகங்களை எடுத்துத் தூக்கவும் அவற்றை இடம் மாற்றி வைப்பதுமே அயர்ச்சியாக இருக்கிறது. கவனமாகக் கையாள வேண்டியிருக்கிறது. மூப்பின் காரணமாக விரல்களில் வலுவில்லை. அப்போதுதான் புத்தக அலமாரியில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் படத்துக்குப் பின்னாலிருந்த அந்தக் கடிதம் கண்ணில் பட்டது.   அப்பாவின் ஸ்நேகிதரும் என்னுடைய பழைய முதலாளியுமான வரதராஜன் சாரிடமிருந்து வந்த கடிதம் அது. நேரடியாக என் பெயர் போட்டே வந்திருந்தது. அப்பாவுக்கும் அவருக்கும் ஒரே பூர்விகம். மாயவரம் பக்கத்தில் சிறு கிராமம். பால்யகால ஸ்நேகிதம். இருவரும் பிற்கால