Skip to main content

பெயரெச்சம்




அன்றுதான் ஷிஃப்ட் மாறியிருந்தது. முதல் நாள் பகலிரவு முடித்துவிட்டு உடனடியாக மறுநாள் அதிகாலை ஷிஃப்ட் எடுக்க வேண்டும். ஒரே ஷிஃப்ட் மூன்று மாதங்களுக்கோ, குறைந்த பட்சம் ஒரு மாதத்துக்கோ தொடர்ந்தால்கூட சற்று பரவாயில்லாமலிருக்கும். வாரத்துக்கு ஒரு முறை மாறுவதும் ஆட்பற்றாக்குறையின் பொருட்டு ஒருவர் வராது போனாலும் அதையும் சேர்த்து எடுத்துப் பார்ப்பதும் உடலின் இயங்குவிதிகளுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம். ஆனால், வேறு வழியில்லை. பிழைப்பு இப்படி. ஷிஃப்ட் மாற்றத்தால் அதிகாலை சீக்கிரம் எழுந்துகொள்ள வேண்டும் என்ற பரபரப்பிலேயே தூக்கம் சரியாககூடவில்லை.  கண்களை இறுக மூடிக்கொண்டு ஒன்றிலிருந்து எண்ண ஆரம்பித்தேன். கவனத்தை எண்களில், அவற்றின் வளைந்து நெளிந்த வடிவங்களில் குவிப்பதன் மூலம் சலனத்தைக் கட்டுப்படுத்தித் தூக்கத்தை வரவழைக்கும் உத்தி. பெரும்பாலான சமயங்களில் சரியாகவே வேலை செய்யும். சில நேரங்களில் ஆயிரங்களைத் தாண்டி எண்ணிக்கை மட்டும் ஓடிக்கொண்டிருக்கும். அன்று, அது சரியாக ஒத்துழைக்க, அப்போதுதான் சற்று கண்ணயர்ந்திருப்பேன். அழைப்பு மணி அடித்தது. பக்கத்திலிருந்த புவனாவை முழங்கையால் மெதுவாக இடித்தேன். 


 அவள் “உச்” என்றாள்.


 “ஏய்.. போய் என்னனு பாரேன்டி”


“நீங்களேப் போய் பாருங்க. நான்தான் பொழுதனைக்கும் பாக்குறேனே.”


“யேய்.. நாளைக்கு மார்னிங் ஷிஃப்ட்டுடி. ஃபேக்டரில நிக்க முடியாது. போய்ப் பாரு ப்ளீஸ்."


இரண்டு நிமிடங்கள் கழித்து மறுபடியும் மணி அடித்தது. அவள் காதிலேயே வாங்கிக்கொள்ளாதவாறான பாவனை காட்டித் திரும்பிப் படுத்துக்கொண்டாள். 


எழுந்து உடையைச் சரிசெய்துகொண்டேன். படுக்கையறைக் கதவை சாத்திவிட்டு மாடியிலிருந்து கீழே இறங்கும் முன்னர் மறுபடியும் மணி அடித்தது. “தோ.. வரேன் சித்தப்பா” என்று எரிச்சலில் கத்தினேன். மணியை அழுத்துவதில் ஒரு நாசூக்கு இருக்கிறது. சித்தப்பாவுக்கு அதுவும் தெரியாது. நேராக நடு மண்டையில் சுத்தி வைத்து அடிப்பதைப் போல அழுத்தி அழுத்தி அடிப்பார். அத்தனைக்கும் அவ்வளவு முக்கியமான காரியமாக இருக்காது. தண்ணீர் தீர்ந்திருக்கும். கொசுவத்தி வேண்டும். ‘கிச்சன் குழாயில் தண்ணீர் சொட்டுகிற சத்தம் கேட்கிறதே’ என்பார். அரிதாகச் சில சமயங்களில் அகோரப் பசி என்பார், அரை வாழைப்பழம் சாப்பிடுவார். இப்படியான சின்னச் சின்ன கோரிக்கைகள். 


சமீப காலமாகத்தான் வீட்டோடு முடங்கிப் போய்விட்டார். தனி ஆள். இருப்பதெல்லாம் எளிய தேவைகள். அதிலும் பெரும்பான்மை அனாவசியத் தேவைகள். சிறு வயதிலிருந்து என் அம்மா அப்பாவிடம் வளர்ந்து, இப்போது எங்களோடு தங்கிவிட்டார். நடுவில் ஒரு நாள் இரவில் சரியாக மூடப்படாத தண்ணீர் குழாயை மூடுவதற்காக அடுப்படிக்கு வந்தவர் அங்கேயே தலைசுற்றிக் கீழே விழுந்துவிட்டார். எஞ்சியிருந்த நிதானம், மாடியிலிருந்த எங்களை அழைக்கும் வரை தாங்கவில்லை போலும். முட்டியில் நல்ல அடி. ஆப்பரேசன் என்றால் பயம். இருக்கும் பிக்கல் பிடுங்கல்களில் அவரைக் கவனித்து ஹாஸ்பிடலில் சேர்க்க நேரமில்லை. மனமில்லை என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். ஒருவேளை அம்மா இருந்திருந்தால், இப்படியே விடச் சம்மதித்திருக்கமாட்டார். அதற்கு பின், சித்தப்பாவால் சேர்ந்தாற்போல பத்தடிகள்கூட நடக்க முடியாது. தேவையென்றால், அவரது அறையிலிருந்தபடியே எங்களை அழைக்கும் அழைப்பு மணியை  அவர் கட்டிலின் தலைமாட்டில் பொருத்திக் கொடுத்தோம். 


தாழிடப்படாத கதவைத் திறந்து உள்ளே போனேன். மெல்லிய நீல நிற வெளிச்சம் அறையில் ஒளிர்ந்துகொண்டிருந்தது.


அவர் படுக்கைக்கு அருகில் போய், “சித்தப்பா” என்றேன்.


சலனமில்லை. அதற்குள் தூங்கிவிட்டார் போல. மறுபடியும் சற்று அழுத்தி, “சித்தப்பா, என்ன வேணும்?” என்றேன்.


“துரை.. துரை.. வந்துட்டியா? அந்த பேனை ஆஃப் பண்ணிடேன்டா”, 


“ஏன், குளிருதா?” 


“இல்லயில்லடா.. குருவி.. குருவி அடிபட்டுடப் போகுது.”


அந்த மெல்லிய நீல வெளிச்சத்தில் அறையை நோட்டமிட்டபடி“குருவியா? எந்தக் குருவி? அதெங்க இருக்கு?” என்றேன்.


“அதோ அந்தக் குருவிதான். எப்படியோ ஜன்னல் வழியா வந்துடுச்சு. அதுக்கு இப்போ வெளியேப் போகத் தெரியல. பார்த்தா பாவமாயிருக்கு.”


விளக்கைப் போட்டு சுற்றிலும் பார்த்தேன். சற்றுக் கடினமேறிய குரலில், “சித்தப்பா, சும்மா எதுனா உளறாதீங்க. இங்க குருவியும் இல்ல காக்காவும் இல்ல. கனவு எதுனா கண்டுருப்பீங்க. பேசாம படுங்க.” என்றேன்.


“அடேய் துரை! ரூம்ல இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமா அலையுதுடா. சுவத்துல போய் முட்டிக்குது. என் தலைக்கு மேலே சுத்துது. நீ உள்ளே வந்ததும் இப்போ சாதுவா ஜன்னல் மேல உக்கார்ந்திருக்கு.” 


ஜன்னலைப் பார்த்தேன். நன்றாக மூடியிருந்தது. அங்கு எதுவுமிருக்கவில்லை. மூச்சை இழுத்துவிட்டேன். பாதித் தூக்கத்தில் எழுந்து வந்ததில் தலை வலித்தது. 


“சரி, உனக்குத் தெரியலனாக்கூட பரவாயில்லை. அந்த ஃபேனை மட்டும் நிறுத்திடு. பாவம்டா அது. ஃபேன்ல அடி பட்டுடப் போகுது”


அதுக்கு மேல் அவரிடம் பேசிப் பிரயோஜனமில்லை. அவர் பிடித்த பிடியில் இருப்பார். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வார். அறையின் அத்தனை ஜன்னல்களும் இறுகச் சாத்தப்பட்டிருந்தன. ஃபேன் சுற்றியும்கூட அறையில் வெக்கை கிளம்பிப் புழுங்கியது. இதற்கிடையில் அதையும் நிறுத்திவிட்டால் வியர்வை ஆளை நனைத்துவிடும். வியர்வையின் ஈரம் தாங்காமல் அவர்தான் மறுநாள்  தலைவலியால் துடிப்பார். ஆனால், இதையெல்லாம் அப்போது அவருக்குச் சொல்லிப் புரிய வைக்கும் மனநிலையில் நானோ, சொன்னாலும் சரியென்று கேட்டுக்கொள்ளும் பக்குவத்தில் அவரோ இல்லை. 


அவர் கேட்டபடி ஃபேனையும் விளக்கையும் அணைத்துவிட்டு, அவர் படுக்கைக்கு அருகிலிருந்த பாட்டிலில் தண்ணீர் பிடித்து நிரப்பினேன். அங்கிருந்து கிளம்பும் முன்னர் ஒரு முறை மொபைல் டார்ச்சை எடுத்து அறை முழுவதும் அடித்துப் பார்த்தேன். 


அங்கு எந்தக் குருவியுமில்லை.



O



இன்று நேற்று என்றில்லை. எனக்கு விவரம் தெரிந்த காலம்தொட்டு அவர் இப்படித்தான் இருக்கிறார். அதற்கு முன்பும்கூட. அதுவும் அம்மா தவறியதிலிருந்து இன்னும் அதிகமாகத்தான் ஆகிவிட்டது. அம்மாவுக்குச் செல்லப் பிள்ளை. சொல்லப் போனால் சித்தப்பாதான் அவளுக்கு முதல் பிள்ளை. அம்மா இந்த வீட்டுக்கு வரும்போது சித்தப்பாவுக்கு பத்து வயதாம்.


அம்மாவுக்கும் அப்பாவுக்கும் திருமணமாகி எட்டு வருடங்கள் கழித்தே நான் பிறந்தேன். அதனால், அவர்களிடையேயான பிணைப்பு அப்படி அமைந்திருக்கலாம். அம்மா திருமணமாகி வந்த நாள்தொட்டு ‘அண்ணி அண்ணி’ என்று வளைய வந்திருக்கிறார். சித்தப்பாவுக்கு இயல்பிலேயே பயந்த சுபாவம். அப்பா எதற்காவது சற்று அதிர்ந்து பேசினால்கூட நாள் முழுவதும் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாராம். அம்மா துணையின்றி வெளியே கடைக்குக்கூட போக மாட்டார். அவர் வயதொத்த பிள்ளைகளோடு விளையாட்டும் கிடையாது. பள்ளி விட்டால் வீடு. வீட்டுக்குள் அம்மா. அவ்வளவுதான் அவர் உலகம்.


அப்படி இருந்தவர், முதன்முதலில் வீட்டைவிட்டு, ஊரைவிட்டு வெளியேறியது நான் பிறந்த நான்காவது நாள். அப்பாவும் அவரால் முடிந்த வரை தேடிப் பார்த்திருக்கிறார். கண்டுபிடிக்க முடியவில்லை. அம்மா, நாட் கணக்கில் வாரக் கணக்கில் அழுதிருக்கிறாள்.  


முப்பதாவது நாள் எனக்கு அவருடைய பெயரையே வைத்து மனத்தைச் சற்றுத் தேற்றிக்கொண்டாளாம்.


பின்னர், சரியாக என்னுடைய ஆறாவது பிறந்தநாளின்போது வெற்றிலை வாசம் கமழ வீட்டுக்கு வந்த நபரை அம்மாதான் சித்தப்பாவென்று அறிமுகப்படுத்தி வைத்தார். அதுவரை தெரு முக்குக்கே துணையில்லாமல் போகப் பயந்தவர் நடு ராத்திரியில் மசானத்துக்குச் செல்லுமளவுக்கு மாறிப் போயிருக்கிறார். வாய் எப்போதும் எதையாவது முணுமுணுப்பதும் கைகள் காற்றில் எண்களை எழுதி அழிப்பதுமாய் இருந்திருக்கிறார். அத்தனை வருடங்களுக்குப் பிறகும் மாறாத ஒன்றே ஒன்று அம்மாவிடத்தில் அவருக்கு இருந்த பாசம் மட்டுமே. 



O



ஒரு முறை வீட்டைவிட்டு வெளியேறியவர்களால் அவ்வளவு சுலபமாக வீட்டில் தங்க முடியாது. வெளி அழைக்கும். வீடு விரட்டும். அதுவும் சித்தப்பாவைப் போன்ற ஒருவருக்கு வீடு தங்கல் என்பது அசாத்தியப் பெருஞ்செயல். எல்லாவற்றையும் மீறி அவரை வீட்டோடு பிணைக்கும் ஒரு சக்தியாக அம்மா மட்டுமே இருந்திருக்கிறாள். அவருடைய அத்தனை பைத்தியக்காரத்தனங்களையும் அவள் ஒருத்தியால் மட்டுமே முகச் சுழிப்பின்றி பொறுத்துக்கொள்ள முடிந்திருக்கிறது.


பேசிப் பேசி, அவரை வடித்துத் திருத்தி ஓர் ஆண் பிள்ளையாக மாற்றி அப்பாவினுடைய கடையில் நிறுத்தினாள். அப்பாவுக்கு அதில் அவ்வளவு இஷ்டமில்லை என்றபோதும் அம்மாவை மீறிப் பேச அப்பாவிடம் ஒரு சொல் கிடையாது.


சித்தப்பா வந்தவுடன் அம்மாவுக்கு என் மேலேயிருந்த கவனிப்பு குறைந்துவிட்டது. அது குறித்து அப்போது அதிகம் வருத்தமிருந்தாலும் சித்தப்பாவை எனக்கும் பிடித்திருந்தது. இருவருக்கும் ஒரே பெயர். அவரும் என்னைப் போலவே இடதுகைக்காரர். எல்லாவற்றுக்கும் மேல் மற்றவர்கள் எதையெல்லாம் அவரிடம் பைத்தியக்காரத்தனமாக பார்த்துச் சிரித்தார்களோ அவையெல்லாம் எனக்கு அப்போது பெரும் கவர்ச்சியாக தெரிந்தது. 


மனிதர்களைத் தவிர்த்து மற்ற உயிர்களிடத்தே பேசுவதும் பழகுவதும் அவருக்கு உவப்பாக இருந்தது. நாய்கள், பூனைகள், தெருவில் திரியும் பசுக்கள். அவ்வப்போது செடி, கொடி, மரங்கள். அவரைத் தேடி நாள் தவறாமல் மஞ்சள் நிறப் பூனை ஒன்று வரும். உரிமையோடு கத்தி அழைக்கும். அதற்கு பாலில் குழைத்துச் சாதம் வைப்பார். 


அவ்வப்போது, அவர் என்னைக் கூப்பிட்டு கையை நீட்டச் சொல்லுவார். ஒரு நிமிடம் ரேகையை உற்றுப் பார்த்துவிட்டு அண்ணாந்து பார்த்து எதையோ முணுமுணுப்பார். 


“டேய் துரை துரை” என்று விளித்துச் சிணுங்கும் தருணங்களில் அவர் உண்மையில் என்னிடம்தான் பேசுகிறாரா இல்லை தன்னைத்தானே விளித்துப் பேசிக்கொள்கிறாரா என்று குழம்பிப்போவேன்.


எப்படியாவது அவருக்கு ஒரு பெண் பார்த்து திருமணம் செய்துவிட வேண்டும் என்று அம்மா விரும்பினாள். இவர் குணமறிந்த யாரும் பெண் தர முன்வரவில்லை. அப்பாவும் ‘அவன் போக்கில் அப்படியே விட்டுவிடு’ என்றார். அம்மா, விடாப்பிடியாக இருந்தாள். ஒரு பெண் வந்து நின்றால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று திடமாக நம்பினாள்.


அவளே வருடக் கணக்கில் தேடி அலைந்து தூரத்திலிருந்து ஒரு சம்பந்தத்தைக் கொண்டுவந்து நிறுத்தினாள். பெண் வீட்டுக்குச் சென்று நிச்சயம் செய்வது என்று முடிவான நாளுக்கு அடுத்த நாள் சித்தப்பா மறுபடியும் வீட்டிலிருந்து காணாமல் போனார். அம்மா, தன்னால்தான் சித்தப்பா வெளியேறிவிட்டார் என்றுணர்ந்தபோது அம்மா ஒடிந்துவிட்டாள். இந்த முறை அப்பா தேடுவதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.


அம்மா தனியாக இருக்கும்போது சித்தப்பாவின் நினைவு வரும் தருணங்களில், “பிடிக்கலனா வேண்டாம்ன்னு எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே” என்று அரற்றுவாள். அவ்வப்போது நினைத்து நினைத்து ஆற்ற மாட்டாமல் அழுவாள். சித்தப்பா வீட்டைவிட்டு வெளியேறியது அவளிடத்தே ஆறாத வடுவாய் நிலைத்துவிட்டது. 


சித்தப்பாவின் பிறந்தநாளின்போது கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்வாள். சாதுக்களை அழைத்து அன்னமிடுவாள். அப்படி ஒரு நாளில் சுவரில் சாய்ந்து விசும்பிக்கொண்டிருந்தாள். “ஒவ்வொரு முறையும் நாந்தானே உன்னை விரட்டிவிட்டேன் தொரெ” என்று தரையோடு இழைந்த குரலில்தான் புலம்பினாள் என்றாலும் எனக்கு நன்றாகவே கேட்டது.


சித்தப்பா போன பின்பு அந்த மஞ்சள் நிறப் பூனை எங்கள் வீட்டுப் பக்கம் வரவேயில்லை.



O



அம்மாவின் உள்ளத்தில் கிடந்து அரித்த சோகம் மெல்ல மெல்ல அவளுடலில் புற்றாக வளர்ந்து நின்றது. அது வளர வளர இவள் ஆள் பாதியாகச் சுருங்கிப் போனாள். அவளால் பெரிய காரியங்கள் எதையும் செய்ய முடியாமல் போனது. சமையலுக்கே அம்மாவினுடைய சித்தியின் துணை தேவைப்பட்டது. 


சித்தப்பாவின் மற்றொரு பிறந்த நாளின்போது என்னை அழைத்து சிவன் கோவில் பக்கம் போய் யாரேனும் சாது இருந்தால் சாப்பிட அழைத்து வரச் சொன்னாள்.


பைரவர் சன்னதியில், சிலைக்குப் எதிரேயிருந்த தூணில் சாய்ந்தபடி அரை தூக்கத்திலிருந்தார். அவரைக் கேட்டேன். உடனே ஒப்புக்கொண்டார். அவரை அதற்கு முன் அங்கு பார்த்த நினைவில்லை. அங்கே நிரந்தரமாக இருப்பவர்கள் யாரும் அன்று கண்ணில் தென்படவில்லை.  


சாதம், சாம்பார், வாழைக்காய்ப் புட்டு, புளிக் கூட்டு, புடலங்காய்ப் பொறியல், பருப்புப் பாயாசம் என்று சித்தப்பா விரும்பியுண்ணும் உணவுகளால் இலையை நிரப்பியிருந்தாள். ஒரு ரசம் வைக்கவே மூச்சிளைத்துத் தள்ளாடும் உடலை வைத்துக்கொண்டு அன்று மட்டும் அவளால் அத்தனை செய்ய எப்படி முடிந்தது?


சாது, சாப்பாட்டுக்கு முன் அமர்ந்து “அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்” என்று தொடங்கிய  பாடலை ஊணோடு உள்ளமொன்றப் பாடினார். அடி வயிற்றிலிருந்து எழும்பிய அக்குரல் ஆளரவமற்ற அம்மதிய வேளையை முற்றிலும் வேறொன்றாக மாற்றியது.  


சாப்பிட்டுக்கொண்டிருந்தவர் இடையில் நிறுத்தி, “சீக்கிரம் வந்துடுவான். நீ சற்று பொறு” என்று அம்மாவைப் பார்த்து ஆசிர்வதிக்கும் தொனியில் உள்ளங்கையை உயர்த்தினார். அம்மாவின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. அப்படியே அவருக்கு முன்னால், தரையில் விழுந்து அவரை வணங்கினாள். 


அப்பா, என்னைப் பார்த்தார். நான் கீழே கிடந்த அம்மாவைத் தூக்கி நிறுத்தினேன். அவள் என் கன்னத்தை வழித்து முத்தமிட்டு “தொரே” என்றாள். அது என்னையல்ல என்பது மட்டும் எனக்குத் தெரிந்தது.



O



சித்தப்பா மீண்டும் வீட்டுக்கு வந்தார். மிகச் சரியாக அம்மா இறந்த இரவு புலர்ந்த சாம்பல் வெளிச்சத்தோடு வீட்டுக்கு உள்ளே நுழைந்தார். அவருக்கு எப்படித் தெரிந்தது? எங்கிருந்தாவது எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தாரா? இல்லை, ஆதி விலங்கொன்றின் அடங்கியிராத உள்ளுணர்வின் மிச்சமா? எனக்கு கேள்விகள் மேல் கேள்விகளாகத் திரண்டு வந்தன. 


அவரை ‘வா’ என்றெழைக்கவும் ‘போகாதே’ என்று தடுக்கவும் அங்கிருந்த ஒரே ஜீவனையும் நடு வீட்டில் கிடத்தியிருந்தார்கள். அப்பாவுக்கும் எனக்கும் அம்மா இந்த மட்டில் தன் துயரை நிறுத்திக்கொண்டதில் சற்று ஆசுவாசம். 


துரை சித்தப்பா எதுவும் பேசவில்லை. அழவில்லை. கீழே கிடத்தப்பட்டிருந்த அம்மாவையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்பாவின் வேட்டிக் கிழிசலால் விரல்கள் கட்டப்பட்டிருந்த பாதங்களை மெதுவாகத் தடவிக்கொடுத்தார். தலைச்சன் பிள்ளை செய்ய வேண்டிய கிரியைகள் அத்தனையையும் அதற்காகவே கிளம்பி வந்ததைப் போல அவரே செய்தார். நானோ அப்பாவோ அவரைத் தடுக்கவில்லை. 


அதன்பின் அவர் இந்த வீட்டைவிட்டு வெளியேறவேயில்லை. எங்களுடனே தங்கிவிட்டார். அம்மா போன பிறகு சமையலை அவர் எடுத்துக்கொண்டார். அவருக்கு அவ்வளவு சுவையாகச் சமைக்க வரும் என்பதே எங்களுக்கு அப்போதுதான் தெரிய வந்தது. சின்னச் சின்ன பிறழ்வுகளைத் தவிர அவரால் எனக்கோ அப்பாவுக்கோ பெரிய தொந்தரவு எதுவுமிருக்கவில்லை. அப்பா, நாள் தவறாமல் வெற்றிலையும் சீவலும் வாங்கிக்கொடுத்துவிடுவார். அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் 16 வருட வித்தியாசம், ஆனால், அவர் பார்வைக்கு அப்பாவைவிட முதியவராகத் தோற்றமளித்தார். 



O



எனக்குத் திருமணமான பின், வீட்டுக்கு மாடியெடுத்து அப்பா எங்களை அங்கே எங்களைக் குடியேற்றினார். கீழே இருந்த இரண்டு அறைகளில் ஒன்றை அப்பாவும் மற்றொன்றை சித்தப்பாவும் எடுத்துக்கொண்டார்கள். அப்பா இருந்த வரை சித்தப்பாவை கவனித்துக்கொள்வதில் புவனாவுக்கு எந்தச் சிரமும் இருந்ததாய் அவள் காட்டிக்கொள்ளவேயில்லை. அப்பாவின் மறைவுக்குப் பின் சித்தப்பாவின் இருப்பு அவளுக்கு உறுத்த ஆரம்பித்தது. குழந்தைகள் வளர வளர, புவனாவின் ஆதிக்கம் வீட்டைச் சுற்றி கொடிபோல படர்ந்து எழும்பியது. 


அவரை அங்கிருந்து வெளியேற்ற காரணங்களைத் தேடிக்கொண்டிருந்தாள். அவரை பக்கத்தில் எங்காவது தனியாகக் குடி வைத்துவிடலாம் என்பது அவள் எண்ணம். உண்மையில் எங்களுக்கு இருப்பதைவிட அவருக்குத்தான் அந்த வீட்டில் அதிக பாத்தியதை இருந்தது. அது எங்களின் பூர்வீக வீடு. ஆனால், அவரை அங்கிருந்து வெளியேற்றினால்கூட அவர் அதைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள மாட்டார். அதுதான் அவர் சுபாவம். வெற்றிலையும் சீவலும் இருந்தால் போதும். ‘அவரை இவ்வீட்டிலிருந்து வெளியேற்றுவதை அம்மாவோ அப்பாவோ விரும்ப மாட்டார்கள், அவர்பாட்டுக்கு இருந்துவிட்டுப் போகட்டும்’ என்று சொல்லி அவள் கோரிக்கையை மறுத்துச் சண்டையிட்டதொரு நாளில், “ரெண்டுக்கும் பேரு மட்டும் ஒன்னில்ல.” என்று முணுமுணுத்தப்படி வெளியேறினாள்.


நடமாட்டம் இருந்த பொழுதுகளில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சிவன் கோவிலுக்குப் போவார். அவர் தெருவில் இறங்கி நடந்தால் அங்கங்கே இருக்கும் பத்துப் பதினைந்து நாய்கள் திரண்டு அவர் பின்னால் தொடர்ந்து வாலாட்டியபடி ஓடி வரும். வீட்டுக்கு வெளியில் திடீரென்று ஏழெட்டு நாய்கள் சூழ்ந்திருக்க அதனுடன் எதையாவது பேசிக்கொண்டிருப்பார். ஒரு நாள், தெருவில் ஒருவரை வெறி நாய் கடித்துவிட, இதைக் காரணம் காட்டி புவனா பிள்ளைகளை சித்தப்பாவோடு அனுப்புவதை நிறுத்திவிட்டாள். 


விசேஷ நாட்களில் பரதேசிகள் சிலரை அழைத்து வந்து உணவிடுவார். அப்போதெல்லாம் அவரைப் பார்த்தால் அம்மாவின் நகலைப் போலிருக்கும். நான் எதுவும் சொல்லிக்கொள்வதில்லை. “காலம் இருக்கிற நிலைமைல, கண்டவனையெல்லாம் நம்பி வீட்டுக்குள்ள விடலாமா?” என்று புவனாதான் அங்கலாய்ப்பாள்.


அதுவரை அவரைப் பற்றி என்னிடம் புகார் அளிப்பது, உச்சுக்கொட்டி முகம் சுளிப்பது, விருப்பமில்லாமல் காரியங்களைச் செய்வது என்றுதான் இருந்தாள். ஒருமுறை வீட்டு முற்றத்து குழாயில் காலைக் கழுவிவிட்டு குழாயைச் சரியாக மூடாமல் வந்திருக்கிறார். மேல் தொட்டியிலிருந்த தண்ணீர் மொத்தமும் வெளியேறி முற்றத்தில் குளம்போல் தேங்கிவிட்டது. அப்போது கோடைக் காலம். சற்று தண்ணீர் பஞ்சம் வேறு. புவனா குழந்தைகளைத் திட்டும் சாக்கில் அவரைத் திட்டிவிட்டாள். அதன் பின் ஒரு நாளைக்கு நூற்றுக் கணக்கான தடவைகள் தண்ணீர் குழாய் சரியாக மூடியிருக்கிறதா என்பதைச் சரி பார்ப்பார். இரவு, பகல் என்றில்லை. சொட்டுச் சொட்டாய் வடியும் நீரைக் கண்டால் அவருக்குப் பொறுக்காது. சாப்பிட்டுக்கொண்டிருப்பார். அதைப் பாதியில் நிறுத்திவிட்டு ஓடிப்போய் எங்கோ சொட்டிக்கொண்டிருக்கும் குழாயை மூடிவிட்டு வருவார். அவருடைய இந்தப் பிறழ்வு புவனாவை என்னவோ செய்துவிட்டது. அதன்பின் அவரைப் பற்றிய புகார்களைக் குறைத்துக்கொண்டாள். 



O



அதிகாலையில் அலாரம் அடிக்கும் முன்னரே எழுந்துகொண்டேன். வழக்கமாக குளித்துவிட்டே மற்ற வேலைகளைப் பார்ப்பேன். அப்போதுதான் தூக்கம் தொலையும். ஆனால், ஏதோ ஒன்று உந்தித் தள்ள நேரே கீழே சித்தப்பாவின் அறைக்கு வந்தேன்.


அதே நீல நிற மெல்லிய வெளிச்சம். கதவு சாத்தப்பட்டு மின் விசிறியும் நிறுத்தப்பட்டிருந்ததால் கதவைத் திறந்ததும் வெக்கை முகத்தில் அறைந்தது. 


தூக்கத்தைக் கலைத்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுணர்வுடன், அறை வாசலில் நின்றபடி உற்றுப் பார்த்தேன். அவரிடத்தில் எந்தச் சலனமும் இல்லை. பக்கத்தில் போய் அவர் மூக்குக்கு அருகில் ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் இணைத்து நீட்டினேன். என்னையறியாமல் கை விரல்கள் நடுங்கின. சுவாசமேயில்லை. உள்ளங்கையை எடுத்து நெஞ்சில் வைத்துப் பார்த்தேன். உடல் குளிர்ந்து போயிருந்தது. அப்போதுதான் அதைக் கவனித்தேன். அவருடைய வலது மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில், சாம்பலும் வெண்மையும் கறுப்பும் கலந்த வண்ணத்தில் குட்டிக் குட்டி இறகுகள். அவை ஒரு குருவியுனுடையவை. உடலின் மயிர்க்கால்கள் அத்தனையும் குத்திட்டு நின்றன. அன்னிச்சையாக அறையின் ஜன்னல்களைப் பார்த்தேன். அவை இறுகச் சாத்தப்பட்டிருந்தன.


அவர் தலைமாட்டிலிருந்த அழைப்பு மணியை வேக வேகமாக நாசூக்கின்றி பல முறை அழுத்தினேன். விறுவிறுவென அறைக்குள் வந்த புவனாவுக்கு நிலைமையை யூகிக்க சில நொடிகளே போதுமாயிருந்தது. 


“அச்சோ” என்று சொல்லி வாயைக் கை வைத்துப் பொத்திக் கொண்டாள்.


ஜன்னலுக்கு வெளியே நாய் ஒன்று குரைத்து ஊளையிட்டது. ஒன்று தொடங்கி அடுத்தடுத்த நாய்கள். சில குரைத்தன. சில அழும் குரலில் ஊளையிட்டன. மெதுவாக ஆரம்பித்த சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. என்னால் அந்த நேரத்தில் அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வேக வேகமாக சித்தப்பாவின் மேசையைத் திறந்தேன். அங்கு பழைய பவுண்டைன் பேனா மற்றும் பேப்பர்களுக்குப் பக்கத்தில் எப்போதும் போல சில பிஸ்கட் பாக்கெட்டுகளும் இருந்தன.


அவற்றில் இரண்டை எடுத்துப் பிரித்தேன். அருகில் நின்ற புவனாவை அழைத்து, “இந்தா இந்தா இதைப் பிரிச்சு அந்த நாய்களுக்குப் போடு. பாவம் பசி போல. கத்துதுங்க. சத்தம் தாங்கல.” என்று ஒரு கையால் காதை இறுக்க மூடிக்கொண்டேன்.


புவனா, அவள் நின்றுகொண்டிருந்த இடத்திலிருந்து நகராமல் என் கண்களை உற்றுப் பார்த்தவாறு, “எந்த நாய்க, எங்க சத்தம் கேக்குது?” என்றாள்.



O


நன்றி : வனம் மின்னிதழ் 


Comments

  1. Good one sir. Why title given as Peyarecham. Please clarify.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம்

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம் -- குள்ளச்சித்திரன் சரித்திரம், வெளியேற்றம் நாவல்களை முன்வைத்து -- “சொல்லித் தீர்ந்துவிட்டன எல்லாக் கதைகளும். மறு கூறலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் புனைவு, சொல்லலின் நூதனத்தில் மட்டுமே  தன் உயிரை வைத்திருக்கிறது” – பகடையாட்டம் பின்னுரையில். இங்கே உள்ள கதைகள் அத்தனையும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன; புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை, சொல்லும் விதத்தில் மட்டுமே இனி புதிதாக ஏதேனும் ஒன்றைச் செய்ய முடியும் என்பதை யுவன் தீவிரமாக நம்புகிறார் என்பதை அவரின் புனைவுகளை தொடர்ந்து வாசிப்பதன் வழியே புரிந்துகொள்ள முடிகிறது. அப்படிப் புதிதாக தன் கதைகளைச் சொல்வதற்கான ஓர் உத்தியாக மாற்றுமெய்மையைக் கையாள்கிறார். அவரின் முதல் நாவலான குள்ளச்சித்திரன் சரித்திரமும், வெளியேற்றமும் அத்தளத்தில் எழுதப்பட்ட  அவரின் முக்கியமான படைப்புகள் எனலாம்.  எது மாற்றுமெய்மை? முதலில் எது மெய்மை? மெய்மை என்பதை எளிமையான புரிதலுக்காக யதார்த்தம் என்று கொள்வோம். பெளதீக ரீதியாக, அறிவியலின் தர்க்கத்திற்கு உட்பட்டு நிகழும் யாதொன்றையும் யதார்த்தம் அல்லது மெய்மை என்று வரைய

ரயில் புழு

வெளியிலிருந்து, கட்டை மேல் சுத்தியலால் அடிக்க வரும் ‘டொப் டொப்’பென்ற சத்தம் கேட்டே எழுந்தேன். அலாரம் எழுப்ப இன்னும் அரை மணி நேரம் இருந்தது. கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றால் சத்தம் வருவது நிற்கவில்லை. பொங்கல் விடுமுறை முடிந்து அன்றுதான் அலுவலகம் திரும்ப வேண்டும். நான்கு நாட்கள் தொடர் விடுமுறை. வெளியில் எங்கும் செல்லவில்லை. சோபாவிலிருந்து படுக்கைதான் நான் இந்த நாட்களில் அதிகம் நடந்த தொலைவு. சுகமாய்ச் சோம்பிக் கிடந்தேன். நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் என்றே மூன்று நாட்களைக் கடத்திவிட்டேன். ஊருக்குப் போக முடியாது. இங்கே நண்பர்களைப் பார்த்தாலும் அவர்களுடைய கேள்வி என்னவாக இருக்கும் என்பதை அறிவேன். இன்றும்கூட அலுவலகம் போனதும் எல்லோரும் விசாரிப்பார்கள். பொய் சொல்ல வேண்டும். சலிப்பாக இருந்தது. மொபைலை எடுத்தேன். பார்ப்பதற்கு எதுவுமிருக்கவில்லை. பேஸ்புக், இன்ஸ்டா என அனைத்துச் சமூக ஊடகங்களிலிருந்து வெளியேறிவிட்டேன். படுக்கையிலிருந்து எழுந்து கையில் பிரஷை எடுப்பதற்கு என்னை நானே பிடித்துத் தள்ள வேண்டியதாக இருந்தது. முந்தைய நாள் இரவு வரவேற்பறையின் ஜன்னல்களைச் சாத்தாமலேயே உறங்கிப் போய்விட்டேன். சாப்பிட்டுவிட்ட

கேண்மை

  தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் கலை இலக்கிய மாத இதழ் ஒன்றுக்காக நேர்காணல் வேண்டுமென்று அழைத்திருந்தார்கள். அழைத்தவர் தமிழின் முக்கியமான கவி. பக்கத்து மாநிலம் ஒன்றில் வசிக்கிறார். நேர்காணலுக்காக மாநிலம் விட்டு மாநிலம் வரவேண்டும். சிரமப்பட வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் விடாப்பிடியாக வருவதாகக் கூறிவிட்டார். முந்தைய சந்திப்பில் அவர் குறிப்பிட்டுப் பேசிய புத்தகம் ஒன்றை அவருக்குப் பரிசாக அளிப்பதற்காகப் புத்தக அடுக்கில் தேடிக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் தடித் தடியான புத்தகங்களை எடுத்துத் தூக்கவும் அவற்றை இடம் மாற்றி வைப்பதுமே அயர்ச்சியாக இருக்கிறது. கவனமாகக் கையாள வேண்டியிருக்கிறது. மூப்பின் காரணமாக விரல்களில் வலுவில்லை. அப்போதுதான் புத்தக அலமாரியில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் படத்துக்குப் பின்னாலிருந்த அந்தக் கடிதம் கண்ணில் பட்டது.   அப்பாவின் ஸ்நேகிதரும் என்னுடைய பழைய முதலாளியுமான வரதராஜன் சாரிடமிருந்து வந்த கடிதம் அது. நேரடியாக என் பெயர் போட்டே வந்திருந்தது. அப்பாவுக்கும் அவருக்கும் ஒரே பூர்விகம். மாயவரம் பக்கத்தில் சிறு கிராமம். பால்யகால ஸ்நேகிதம். இருவரும் பிற்கால