Skip to main content

ஆயிரம்முறை



ந்த அழைப்பு வந்தபோது அலுவலகத்தின் ஓய்வகப் பகுதியிலிருந்தேன். காஃபி மெசினிலிருந்து கிளம்பிய சத்தத்தில் முதலில் மொபைல் ஒலித்தது கேட்கவில்லை. சர்க்கரை வில்லைகளைப் போட்டுக் கலக்கும்போது பீங்கான் கோப்பையில் கரண்டி பட்டு எழும் ஒலியோடு இணைந்து மொபைலும் அடித்தது. 

மறுபக்கம் அனு. 

“எங்க இருக்க?”

“ஆஃபிஸ்ல”

“சரி.. ரொம்ப வேலையா?”

“அப்படிச் சொல்ல முடியாது. ஆனா இருக்கு. சொல்லு பரவாயில்ல. பேச முடியும்.”

“இல்ல, இப்போ நீ கிளம்பி வர முடியுமா?”

“ஏன் ஏதாவது பிரச்சினையா?”

“தெரியல.”

“தெரியலன்னா என்ன அர்த்தம்?”

“தெரியல்லன்னா தெரியலன்னு அர்த்தம்.” அழுதிருப்பாள் போல. குரல் கனத்திருந்தது. 

“ஏன்ட்டி இப்படி சிடுசிடுன்னு இருக்க?”

“கவின் ஸ்கூல்லருந்து கால் பண்ணிருந்தாங்க.”

“ஓ.. என்னாச்சாம்?”

“நீ நேர்ல வா சொல்றேன்.”

“சரி, பத்து நிமிசத்துல கிளம்புறேன். ஒரு மெயில் அனுப்பனும். முடிச்சுட்டுக் கிளம்புறேன்.”

“சரி. சீக்கிரம் வா!”


O


ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பிவந்து இரண்டு மாதங்கள்கூட ஆகியிருக்கவில்லை. அங்கே எடுக்காமல் வைத்திருந்த விடுமுறை மட்டுமே முப்பது நாட்கள் கையிலிருந்தது. இடையிடையே வந்த சனி ஞாயிற்றோடு சேர்த்து கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நாட்கள் அலுவலகம் பக்கமே போகவில்லை. எல்லாம் தீர்ந்து அலுவலகத்துக்கு வர ஆரம்பித்து இரண்டு வாரங்கள்தான் ஆகின்றன. புதிதாகத் தொடங்கவிருக்கும் பிராஜெக்ட் ஒன்றுக்கான ஆயத்த வேலைகள் மட்டுமே நடைபெறுவதால் அனுமதி கேட்டுவிட்டுக் கிளம்பி வருவது பெரிய பிரச்சினையாக இல்லை. அங்கிருந்த இரண்டு வருடங்களில் ஒருமுறைகூட இந்தியா வரவில்லையாதலால் கிடைத்த விடுமுறையில் அவள் வீட்டில் இரண்டு வாரம் சொந்த ஊரில் இரண்டு வாரம் பின்பு சென்னை வந்து வீடு தேட கவினுக்குப் பள்ளி தேட ஒரு வாரம் என்று எப்படிக் கரைந்துபோனது என்றே தெரியவில்லை. மொத்தத்தில் ஓரிடத்தில் தங்கவில்லை. 

வீட்டு காலிங் பெல்லை தான் அணைத்து வைத்திருப்பதாகவும் எனவே வந்ததும் அவளுடைய மொபைலுக்கு அழைக்குமாறும் வாட்சப்பில் செய்தி அனுப்பியிருந்தாள். எனக்குப் புரிந்தது. பெல்லை அழுத்தினால், சட்டென்று நடு மண்டையில் விழும் சுத்திபோல ஒலிக்கும் நாற்பது வருடப் பழைய வீடு. தனி வீடு. சின்னச் சின்ன அறைகள். வீட்டைச் சுற்றி துளசி, ஓமம், கற்றாழை, செம்பருத்தி, மருதாணிச் செடிகள் நிரம்பிய சிறிய தோட்டம், கொல்லையில் இரண்டு மாமரங்கள், ஒரு தென்னை, தளும்பி நிற்கும் ஒரு கிணறு என்று சென்னையில் இப்படி ஒரு வீடு அமையப் பெறுவது ரொம்பவும் அரிது. ஈரம் ஊறி நிற்கும் சுவர்கள், தூசு தெரியாத மொசைக் தரை என்பதைத் தவிர பெரிய குறை ஒன்றுமில்லை. சிட்னியிலிருந்த வீட்டில் பெரிய வரவேற்பு அறையும் அதற்குப் பொருத்தமாய் ஐம்பது இஞ்ச் டிவியும் இருந்தது. அதை ஒப்பிட இவ்வீட்டின் வரவேற்பு அறை மிகவும் சிறியது. வெளியிலிருந்து மூன்று பேர் வந்தாலே அறை நிறைந்துவிடும். அதனால் சிறிய டிவி மட்டுமே வைக்க முடிந்தது. அனுவுக்கு அதில் கொஞ்சம் வருத்தமிருந்தாலும் காற்றும் வெளிச்சமும் பரவ தோட்டம் பார்த்தபடியிருந்த சமையற்கூடம் அவளுக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. எனக்கு இங்கிருந்து அலுவலகத்துக்கு வெறும் இருபது நிமிடப் பயணம். ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பியதும் சரியான வீடும் கவினுக்குப் பொருத்தமான பள்ளியும் கிடைக்க வேண்டுமே என்பதுதான் பெரிய கவலையாக இருந்தது. தற்செயலாக எல்லாமும் அதுவாக வந்து அமைந்துவிட்டது.

அனுவுக்கு இந்தியாவுக்குத் திரும்புவதில் பெரிய இஷ்டமில்லை. எங்களோடு ஒன்றாக ஆஸ்திரேலியா வந்த பலரும் அங்கே நிரந்தரக் குடியுரிமை வாங்குவதற்கான முயற்சிகளில் இருந்தபோது நான் மட்டும் ஊர் திரும்பிவிடலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். இதைக் கேட்டு என்னை அசட்டுப் பைத்தியமாகப் பார்த்த முதல் கண்கள் அனுவுடையவை. எனக்கும்கூட முதலில் அந்த ஊர் பிடித்திருந்தது. இயற்கை பொழியும் வெளியும், நெருக்கடியும் பரபரப்புமுமற்றச் சூழலும் இந்தியா போன்ற வளரும் நாட்டிலிருந்து வரும் யாரொருவரையும் பிடித்து நிறுத்திவிடும். ஆனால், ஒரு கட்டத்தில் அங்கிருந்த சலனமற்ற அமைதியும் செய்ததையே கிரமம் தவறாமல் திரும்பச் திரும்பச் செய்வதிலிருக்கும் சலிப்பும் எனக்கு ஒப்பவில்லை. அங்கே இருந்த இரண்டு வருடங்களின் எந்த ஒரு நாளின் கிழமையைச் சொன்னாலும் என்னால் மிகச்சரியாக அந்த நேரத்தில் எங்கே என்ன செய்துகொண்டிருந்திருப்பேன் என்று சொல்ல முடியும். அத்தனை துல்லியமான வழமைகள். ஒரு கட்டத்தில் மொத்த வாழ்வுமே ஏதோ ஒரு மாயச் சுருளில் சிக்கித் திரும்பத் திரும்ப நிகழ்வதான தோற்றத்தைத் தர ஆரம்பித்தது. கிளம்பிவிட்டேன். கவினுடைய கல்வி வாய்ப்புகள், வளரக் கிடைக்கும் சூழல் எல்லாவற்றையும் கருத்தில்கொண்டு பார்த்தாலும் அங்கேயேயிருப்பதில் நன்மைகளுக்கு நிகராக இக்கட்டுகளும் இருந்தன. அனுவைத்தான் கொஞ்சம் கொஞ்சமாக பேசிக் கரைக்க வேண்டியிருந்தது. 

முதல் அழைப்பில் கவனிக்காதவள், அடுத்த அழைப்பைத் துண்டித்தாள். பழைய கதவு. கவனமெடுத்து ஓசையெழாதவாறு திறந்தாள். வீட்டுக்குள் வந்ததும் சத்தமெழுப்ப வேண்டாம் எனச் சைகை செய்தாள். கவின், யூனிஃபார்மைக்கூட மாற்றாமல் சோபாவில் தூங்கிக்கொண்டிருந்தான். அவன் கீழே விழுந்துவிடாதபடி அணைப்பாகத் தலையணைகளை வைத்து, புரண்டாலும் கீழே விழாமலிருக்க பக்கத்திலேயே பீன் பேக்கை இழுத்து சோபாவை ஒட்டிப் போட்டிருந்தாள்.

படுக்கையறைக்குள் சென்று, அறைக் கதவை முழுவதுமாய்ச் சாத்தாமல் கவின் கண்ணுக்கு எதிரில் இருக்கும்படி ஒருக்களித்துச் சாத்திக்கொண்டாள். அவளின் செய்கை ஒவ்வொன்றும் விசித்திரமாகவும் சற்று அதீதமாகவும் இருந்தது. அழுதிருக்கிறாள் என்பது பொங்கியிருந்த கண்களில் தெரிந்தது. அவளே ஆரம்பிக்கட்டும் என்று அமைதியாக இருந்தேன். வீடு வந்து சேர்வதற்குள் நடந்துவிடக்கூடாதே என்றஞ்சிய எதுவும் நடந்துவிடவில்லை என்பது மட்டுமே கொஞ்சம் ஆசுவாசமளித்தது.

மதிய உணவு இடைவெளியின்போது கவினுடைய பள்ளியிலிருந்து அழைத்திருக்கிறார்கள். கொண்டுவந்த உணவை அவன் சாப்பிடவில்லை என்றிருக்கிறார்கள். அவன் அப்படிச் செய்வதொன்றும் புதிதில்லை ஆனால் அவர்கள் அப்படி அழைப்பது புதிது. கவின் என்றில்லை, மற்ற பிள்ளைகளும் இப்படிச் செய்வது சாதாரணம்தானே! அப்படியிருக்கையில், இதன் பொருட்டு அவர்கள் அழைத்ததே இவளுக்கு உறுத்தியிருக்கிறது. சாப்பிடாவிட்டால் பரவாயில்லை விட்டுவிடுங்கள், தான் இரண்டு மணிக்குக் கூப்பிட வரும்போது பார்த்துக்கொள்கிறேன் என்றிருக்கிறாள். 

“நீ போனியா?”

“பின்ன, பதறியடிச்சுட்டுப் போயி நின்னேன். அவன் கிளாசுக்குப் போக முன்னாடியே அவங்க கிளாஸ் மிஸ் என்னை ஸ்டாஃப் ரூமுக்குக் கூட்டிப் போனாங்க. இவன் காலையிலயே கிளாஸ் உள்ள போனதும் எல்லாப் பசங்ககிட்டயும் லஞ்ச் பேக்கை வாங்கி பின்னாடி வரிசையா வைக்கிற மாதிரி வைக்க இவன்கிட்டயும் கேட்டிருக்காங்க. இவன் வழக்கம்போல தர மாட்டேன்னு சொல்லிருக்கான்.”

கவின் சிட்னியிலிருந்தபோது அங்கிருந்த ஒரு விளையாட்டுப் பள்ளிக்குப் போய்க்கொண்டிருந்தான். அவனை இந்தியா வந்து நேரடியாக எல்.கே.ஜி.யில் விடும்போது கொஞ்சமாவது பழக்கமாயிருக்கட்டும் என்று நாங்கள் தங்கியிருந்த ஹோம்புஷ் பகுதியிலிருந்து சில கிமீ தொலைவிலிருக்கும் ஸ்ட்ராத்ஃபீல்ட் நூலகத்தில் நடைபெறும் இலவச வகுப்புகளுக்கு அனு அவனை அழைத்துச் செல்வாள். அந்தப் பள்ளி கவினுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அதே போன்றதொரு சூழலை இங்கே எதிர்பார்த்திருந்த கவின் சற்று ஏமாற்றமடைந்திருந்திருக்கிறான். முதல் நாள் அத்தனை குதுகலமாய்ப் பள்ளிக்குச் சென்றவனிடத்திலிருந்த உற்சாகம் அடுத்த நாள் சுத்தமாக இல்லை. முதல் ஒரு வாரம் அங்கு அவனுக்களிக்கப்பட்ட இருக்கையில் அமராமல் சுற்றிக்கொண்டிருந்திருக்கிறான். சொல்லிச் சொல்லி இப்போதுதான் அமர்ந்து கவனிக்க ஆரம்பித்திருக்கிறான். அவனுடைய புத்தகப் பையை எப்போதும் மார்போடு சேர்த்து அணைத்தபடியே இருப்பான் போல. சில பிள்ளைகள் ஆரம்பத்தில் இப்படிச் செய்வது வழமைதான் என்று அங்கிருக்கும் ஹெட் மிஸ் சொன்னதும் நாங்கள் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.

அனுவே தொடர்ந்தாள். 

“அவங்க புதுசா வந்த மிஸ் போல. திரும்பத் திரும்ப கேட்டிருக்காங்க. அப்பவும் மாட்டேன் சொல்லி பேக்கை மாரோட இறுக்கி கட்டிப் பிடிச்சுட்டு இருந்திருக்கான். மத்த மிஸ்களுக்குத் தெரியும் இவன் புதுசுன்னு. இவங்க மிரட்டியிருக்காங்க. அப்பவும் பேக்கைத் தரவேயில்ல போல. அடிக்கிற மாதிரி கை ஓங்கிப் பாத்திருக்காங்க. அடிக்கமாட்டங்கல்ல. அப்பவும் இவன் கொடுக்கல ஆனா அழுதிருக்கான். சரி போன்னு விட்டுட்டு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுருக்காங்க. அப்போதான் பிரச்சனை ஆரம்பிச்சிருக்கு. கிளாஸ் நடக்குற எதுக்குமே இவன் ரெஸ்பாண்ட் பண்ணல போல. ஜன்னல் வழியே வெளிய வேடிக்கை பார்த்துட்டே இருந்திருக்கான். மிஸ் கூப்பிட்டாலும் திரும்பல. வச்ச கண் மாறாம வெளியவே பார்த்திட்டு இருந்திருக்கான். சரி கண்டுக்காம விட்டா சரியாகிடுவான்னு அவங்கபாட்டுக்குப் பாடம் எடுக்க ஆரம்பிச்சுருக்காங்க. அரைமணி நேரம் கழிச்சும் வெளியவே பார்த்திட்டு இருந்திருக்கான். முகமும் ஒரு மாதிரி இருக்கவே. உடம்பு ஏதாவது சரியில்லையோன்னு நினைச்சு பக்கத்துல வந்து சமாதானப்படுத்தி, குடிக்கத் தண்ணிலாம் கொடுத்து, என்ன ஏதுன்னு கேட்டிருக்காங்க. அதுக்கும் பதிலே சொல்லல போல. என்ன என்னவோ கேட்டும் எதுக்கும் அசையல. இதெல்லாம் வித்தியாசமா இருக்கவே இவனுக்கு எல்.கே.ஜி.க்கு வகுப்பெடுக்கிற அத்தனை மிஸ்களும் வந்து பேசியிருக்காங்க. அவனுக்குப் பிடிச்ச செல்வி மிஸ் சொல்லியும் அவன் கேட்கலை. கடைசியா ஹெட் மிஸ் வந்து பார்த்துட்டு எனக்கு கால் பண்ணிருக்காங்க.”

“இதெல்லாம் நம்புற மாதிரியில்ல. இவங்க பையனப் போட்டு அடிச்சுருப்பாங்க இல்ல ரொம்பத் திட்டியிருப்பாங்க.”

“நானும் அதே மாதிரி சந்தேகத்தோடதான் அவன் கிளாசுக்குப் போனேன். அவன் டெஸ்க்கைவிட்டு நகரவேயில்லை. லஞ்ச் டைம்ன்னாலே கிளாஸே கலகலன்னு இருக்கு. இவன் மட்டும் ஜன்னல் வழியா வெளியவே வேடிக்கைப் பார்த்துட்டு இருந்தான். பத்து நிமிசம் வாசல்லயே நின்னு கவனிச்சேன். அவன் அசையவேயில்ல. அப்புறம் பக்கத்துல போனேன். என்னை பார்த்தும்கூட அவன் எங்கிட்ட வரல.”

“என்னடி சொல்ற?”

“ஆமா, நான் பக்கத்துல போயி நிக்கிறேன். ஏதோ மூணாவது மனுஷியப் பாக்கிற மாதிரி பாக்குறான்.” இதைச் சொல்லும்போதே அனு விசும்ப ஆரம்பித்தாள்.

“சரி இதுக்கேன் அழற. ஸ்கூல்ல இருந்ததால அப்படிப் பண்ணிருப்பான். வீட்டுக்கு வந்ததும் சரியாகிடுச்சா இல்லையா?”

கண்களைச் சுரிதாரின் ஷாலை எடுத்துத் துடைத்தாள். தண்ணீர் கொடுத்தேன். வேண்டாம் என்று மறுத்துவிட்டு, “இரு சொல்றேன். அவன் பேசவேயில்லை. அங்கயிருந்து வெளியே வந்ததும் வாசல்லயே நிறுத்தி, மிஸ் யாராவது அடிச்சாங்களாம்மா அம்மாகிட்ட பயப்படாம சொல்லுடா தங்கம்ன்னு கேட்டேன். அவன் நான் சொல்ற எதையுமே கேட்கல. அவன் பேக்கை மட்டும் இறுக்கி கட்டிப் புடிச்சுட்டு நிக்கிறான். சரி வீட்டுக்குப் போனா சரியாகிடுவான் நினைச்சேன்.” 

“ஸ்கூட்டில வரும்போது நானும் ஏதேதோ பேசிட்டு வரேன். நடு ரோடுன்னுகூட பாக்காம பாட்டுப் பாடுறேன். ஜோக் பண்றேன்.  எதையுமே அவன் கண்டுக்கல. அந்த பெப்பா பிக் மாதிரி பேசினா எப்படி சிரிப்பான். கண்டுக்கவேயில்ல! சரி, வீடு வரட்டும்ன்னு விட்டுட்டேன். திடீர்ன்னு பேசினான். ‘நோ கவின் ஹவ்ஸ்’ அப்படின்னான். வண்டிய நிறுத்தி முன்னாடி வந்து ஏதோ பேசினானேன்னு என்னடான்னு கேட்டேன். திரும்பவும் ‘நோ கவின் ஹவ்ஸ்’ சொல்றான். அவ்ளோ நேரம் பேசாதவன் ஸ்கூல் பத்தி ஏதாவது சொல்வான் பார்த்தா, வீட்டுக்குப் போக வேணாம்கிறான். சரி முதல்ல அவனைப் பேசவிடுவோம்ன்னு லாலி பாப், சாக்லேட்லாம் வாங்கிக் கொடுத்திட்டு கொஞ்சம் அப்படியே நம்ம ஏரியாவ வண்டில சுத்திட்டு வீட்டுக்கு வண்டிய விடுறேன். அப்பவும் திரும்பத் திரும்ப ‘நோ கவின் ஹவ்ஸ் நோ கவின் ஹவ்ஸ்’ மட்டும் சொல்றான். அப்புறம் யோசிச்சுப் பார்த்தா, அவ்ளோ நேரமா அந்த ஒன்னைத் தவிர அவன் வேறெதுவுமே பேசல. பரவால்லன்னு அவனைக் கண்டுக்காம வீட்டுக்கு கூட்டி வந்தேன். உள்ள வர வேணாம் சொல்றான். அடம் பிடிச்சு அழ ஆரம்பிச்சுட்டான். எப்படியோ உள்ள அழைச்சுட்டு வந்துட்டேன். ‘அம்மா நோ கவின் ஹவ்ஸ் நோ கவின் ஹவ்ஸ்’ன்னு சொல்லிட்டே இருக்கான். அவனை அதட்டினேன். மிரட்டினேன். ஒரு கட்டத்துல கோபம் வந்து, நல்லா நாலு அடிகூட அடிச்சுட்டேன். அப்பவும் அவன் கேக்கல. இன்னும் சத்தமா அழுதிட்டே அதையே திரும்பத் திரும்பச் சொன்னான். ஒரு ஆயிரம்முறை சொல்லிருப்பான். சலிக்காம சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்றான். பாவமா அழுதிட்டே சொல்றதப் பார்த்து எனக்கும் அழுகை வந்துடுச்சு. அழுதுட்டே அவங்கிட்ட கெஞ்சிகூடப் பார்த்தேன், தெரியுமா?” என்று உதட்டைப் பிதுக்கி அவள் இதைச் சொல்லும்போது அவள் கண்ணில் நீர் திரண்டுப் பொங்கியது. 

“அதுக்கு மேல என்னால பொறுத்துக்க முடியல. ரொம்ப பயமாகிடுச்சு. அவனை மெதுவா மடியில படுக்க வைச்சு அவன் மனசை மாத்துறதுக்கு என்னென்னவோ சொல்லிப் பார்த்தேன். ஆனா, நான் சொன்ன எதுவும் அவன் காதுக்குள்ள போன மாதிரியே தெரியல. அடிச்சதுல தேம்பி அழுதவன் அப்படியே சோபால படுத்துத் தூங்கிட்டான். அதுக்குப் பிறகுதான் உனக்குக் கால் பண்ணேன். எனக்கு என்ன பண்ணன்னு சுத்தமா புரியல ஹரி. எனக்கு ரொம்ப பயமாயிருக்கு. என் புள்ளைக்கு என்னமோ ஆயிடுச்சு.” என்று என்னைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

எனக்கு அன்று மதியம் வரை நடந்திருப்பதைக் கிரகிப்பதற்கே நீண்ட நேரம் தேவைப்பட்டது. பள்ளியில் ஏதோ நடந்திருக்கிறது. அதில் பயந்திருப்பான். நாளை பள்ளிக்குப் போய் தெளிவாக விசாரித்தால் விளங்கிவிடும். ஆரம்ப நாட்களில் பள்ளியில் அவன் பேசிய ஆங்கிலம் மற்ற பிள்ளைகளுக்கும் அவர்கள் பேசிய தமிழ் இவனுக்குப் புரியாமல் அந்நியமாக இருந்தான். இது பள்ளி என்றில்லை சொந்த ஊர்களுக்குப் போகும்போதே நடந்தது. மேலும் ஆட்கள் சுத்தியிருந்து பழகாதவனுக்கு இங்கே எங்குத் திரும்பினாலும் கும்பல் கும்பலாக ஆட்கள். ஊரில் தாத்தா பாட்டியைத் தவிர யாருடனும் ஒட்டவில்லை. 

நாங்கள் அவனைச் சேர்க்கும்போது பள்ளி ஆரம்பித்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்தன. முதலில் ஒட்டாமலிருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் பிள்ளைகளுடன் பழக ஆரம்பித்துவிட்டான். புதிதாக யாரோ சாய் என்று ஒரு பையனைப் பற்றியெல்லாம்கூட முந்தைய நாள் சொல்லிக்கொண்டிருந்தான். ஒருவேளை, பள்ளி பிரச்சினையாக இருந்தால் ஏன் வீட்டுக்கு வர வேண்டாம் என்கிறான்? அனு சொல்வதை வைத்து என்னாலும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. இவன் விசயத்தில் அனுவுடைய தர்க்க அறிவை தாய்ப்பாசம் மழுங்கடிப்பதைப் பலமுறை நேரில் கண்ட அனுபவம் உண்டு. இவள்தான் ஒரு சாதாரண நிகழ்வை மிகைப்படுத்திக் கூறுகிறாள் என்று தோன்றியது. இப்போது நன்கு தூங்கி எழுந்தான் என்றால் முற்றிலுமாக அதிலிருந்து விடுபட்டு விடுவான் என்ற நம்பிக்கையிருந்தது. ஆனாலும் அவன் இப்படி நடந்துகொள்வதற்குப் பின்னால் இருக்கக்கூடிய சாத்தியங்களையே மனம் சுற்றிச் சுற்றி வந்தது. அவனுடைய புத்தகப் பையைத் திறந்து பார்த்தேன். இரண்டு மாதங்களாக எப்பவும் எடுத்துப் போகும் அதே புத்தகப் பைதான். ஒரு வித்தியாசமும் இல்லை. கூடுதலாகவோ குறையாகவோ எதுவுமிருக்கவில்லை. அவன் விழித்தபின்பு அவனை ஏதாவது மாலுக்கோ இல்லை பீச்சுக்கோ அழைத்துப் போகலாம் என்று மனதுள் நினைத்துக்கொண்டேன்.

அனுவும் அழுதழுது சோர்ந்து போயிருந்தாள். அவளை அங்கேயே சற்று நேரம் தூங்கச் சொல்லிவிட்டு நான் வரவேற்பறையில் கவினுக்குப் பக்கத்தில் பீன் பேக்கை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்துகொண்டேன். பிள்ளை அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். அம்மா தூங்குகிற பிள்ளையை உற்றுப் பார்த்தாலே திட்டுவாள். 

ஒரு அரைமணி நேரம் கழித்து எழுந்தவன் என்னை அந்நேரத்தில் அங்கு எதிர் பார்த்திருக்கவில்லை. சிரித்தபடி கால்களைக் கட்டிக்கொண்டான். மெதுவாக என்னை அண்ணாந்து பார்த்து, “அப்பா நோ கவின் ஹவ்ஸ்” என்றான்.

“கவின் குட்டிக்கு என்ன பிரச்சினை?”

“அப்பா.. நோ கவின் ஹவ்ஸ்”

“ஸ்கூல்ல யாரும் அடிச்சாங்களா?”

“அப்பா.. நோ கவின் ஹவ்ஸ்”

“ஸ்கூல்ல மிஸ் யாரும் திட்டுனாங்களா சொல்லு?”

“அப்பா.. நோ கவின் ஹவ்ஸ்”

“இல்ல அம்மாதானே திட்டுனா உன்னை. அவளை அடிப்போமா?”

“அப்பா.. நோ கவின் ஹவ்ஸ்”

“என்னடா தங்கம் ஆச்சு?”

“அப்பா.. நோ கவின் ஹவ்ஸ்”

“டேய் கவின், நான் சொல்றது உனக்குக் கேக்குதா இல்லையா? இங்க பாரு. அப்பா கண்ணைப் பாரு.”

“அப்பா.. நோ கவின் ஹவ்ஸ்”

அனு தூக்கத்திலிருந்து எழுந்தவள் நிலைமையை யூகித்துவிட்டாள். ஓடி வந்து என்னைக் கட்டிக்கொண்டவள், “பாத்தியா.. பாத்தியா ஹரி.. இவன் என்ன பண்றான் பாரு”. அவளை அணைத்து அமைதிப்படுத்திவிட்டு, கவினைத் தூக்கி மடியில் வைத்தேன். நெற்றியில் வியர்த்திருந்தது. உள்ளங்கையால் துடைத்து, அவன் நெற்றியில் முத்தமிட்டேன். கைகளையும் முதுகையும் வாஞ்சையாக வருடினேன். மெதுவாக அவனை என் நெஞ்சில் சாய்த்தவாறு, “கவின் குட்டிக்கு அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமா?” என்று எங்களிருவர் விளையாட்டின் வழக்கமான கேள்வியைக் கேட்டேன். 

அவன் எதிரேயிருந்த அனுவைப் பார்த்தான். மெதுவாக என்னைத் திரும்பிப் பார்த்தான். பிறகு ஒன்றும் பேசாமல் தலையைக் குனிந்தபடி, “நோ கவின் ஹவ்ஸ்” என்றான். இதில் அவன் அவனாகவேயில்லை. வழக்கமாய் கண்களில் மின்னும் குறும்போ முகத்தில் மலரும் புன்னகையோ இல்லை. அதுவரை அவனை அப்படிப் பார்த்ததேயில்லை.

அவன் நான் எதுவும் கேட்காத போதும் ‘நோ கவின் ஹவ்ஸ்’ என்பதை மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கே அடுத்து என்ன செய்வது என்பது விளங்கவில்லை. அனு வீட்டிலிருந்து ஆள் வந்தால் அவனுக்குச் சற்று மாறுதலாயிருக்கும் என்று முடிவு செய்தோம்.

விசயத்தைச் சொன்னதும் அனுவின் அப்பா சிரித்தார். “குழந்தைகள் என்றால் அடம் பிடிக்கத்தானே செய்வார்கள். அனுவும் விக்கியும் பிடிக்காத அடமா?” என்றார். எனக்கு எரிச்சலாக வந்தது. அடுத்து இரண்டு மூன்று நாளில் கிளம்பி வருவதாகச் சொன்னபோதே அவருக்கு நிலைமையின் தீவிரம் விளங்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அதற்குமேல் நான் அவரிடம் சொல்லி அவர்களைப் பதற்றப்படுத்த விரும்பவில்லை. இதைப் பற்றி திரும்பப் பேசுவதும் நினைப்பதுமே அதீத அழுத்தத்தைக் கொடுப்பதாயிருந்தது.

ஒன்றே ஒன்றை மட்டும் கவனித்தோம். வீட்டைவிட்டு வெளியே சென்றால் அமைதியாக இருக்கிறான். அமைதியாக என்றால் ஓர் ஊமைக் குழந்தையைப் போல் எதுவுமே பேசமாட்டான். வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு ஒரு பொம்மையைப் போல் வருவான். வேண்டுமென்றே செய்தால்கூட ஒருவரால் இதை அத்தனை கச்சிதமாகச் செய்ய முடியாது. பக்கத்திலிருந்த ஆஞ்சநேயர் கோவிலுக்குக் கூட்டிச் சென்றோம். அவனுக்குப் பிடித்த டாமினோஸ் பீட்ஸா கடை, ஐபாக்கோ ஐஸ் க்ரீம் பார்லர் என்று கூட்டிப் போனோம். எல்லாம் சுற்றிவிட்டு வீட்டுக்குப் போகும்போது ‘நோ கவின் ஹவ்ஸ்’ என்பான். அதையே சலிக்காமல் திரும்பத் திரும்பச் சொல்வான். ஒரு கட்டத்தில் கோபத்தில் நானே அவனை அடிக்க கை ஓங்கினேன். அவனுக்கு என்ன பிரச்சினை என்று அவனுக்கே விளங்காதபோது அவனை அடிப்பது எத்தனை பெரிய முட்டாள்தனம் என்பதை உணர்ந்தபோது எனக்கே என் மேல் வெட்கமாகயிருந்தது. 

முதலில் அம்மாவிடம் இதைப் பற்றிச் சொல்லி அவளைப் பதற்றப்படுத்த வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால், அவளிடம் சொன்னேன். நான் நினைத்ததைவிட நிதானமாக அவள் இதை எதிர்கொண்டாள். பக்கத்திலிருக்கும் மசூதிக்குப் போய் ஓதிவிட்டு வரச் சொன்னாள். அவள் சொன்னபடி அங்குப் போய்த் திரும்பும் வழியில் அனு, “ஏன் ஹரி, இப்போ நாம இருக்கிற இந்த வீட்டுல ஏதாவது பிரச்சனை இருக்குமோ?” என்று கேட்டாள். 

“சும்மா பைத்தியம் மாதிரி பேசாத” என்றேன். இப்படி ஆரம்பித்து வீட்டை மாற்றலாம் என்பதில் நிற்பாள். வீட்டை மாற்றுவதென்றால் எத்தனை பெரிய விசயம் என்பது புரியாமல் பேசுகிறாள். அதுவும் பள்ளிகள் தொடங்கியிருக்கும் நேரம். எங்கும் டூலெட் இருக்காது. அட்வான்ஸில் பாதி பிடித்துக்கொள்வார்கள். 

அவள் முகம் ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்தது போல தீவிரமாயிருந்தது. “இல்லல்ல.. அங்க ஏதோ தப்பாயிருக்கு. அதான் அவன் வீட்டுக்குப் போக வேணாம் சொல்றான். ஆமாமா வீட்லதான் ஏதோ பிரச்சனை. என்னவோ தப்பிருக்கு.” என்றாள்.

“அப்போ வெளியே வந்தா அவன் நார்மலா இருக்கணும்ல. ஏன் ஒரு வார்த்தை பேச மாட்டுறான்? அப்படிப் பார்த்தா இதெல்லாம் ஆரம்பிச்சது ஸ்கூல்லதானே. சும்மா, நீ தேவையில்லாம யோசிக்காத. நாளைக்கு டாக்டரைப் போயிப் பார்ப்போம்.”

“இதென்ன ஜலதோசமா காய்ச்சலா டாக்டரைப் பார்க்க?”

“நான் சொல்றது சைல்ட் சைக்கியாட்ரிஸ்ட்டை. சந்தோஷ்கிட்ட பேசியிருக்கேன். அவன் ஒரு காண்டாக்ட் கொடுத்திருக்கான்.”

“என்னது சைக்கியாட்ரிஸ்ட்டா? லூசு மாதிரி பேசுற. அதெல்லாம் அவனுக்கு ஒன்னுமில்ல. நாளண்ணிக்கு அப்பா அம்மா வந்தா அவன் நார்மலாகிடுவான். நீ சும்மாயிரு.” என்று கத்தினாள். அதுவரையிருந்த அவனுக்கு என்னவோ பிரச்சனை என்று கதறிக்கொண்டிருந்தவள். அதெல்லாம் ஒன்றுமேயில்லை என்பதுபோல அசட்டு பாவனை செய்தாள். உண்மையில் அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

“இங்க பாரு. இது ஒரு சாதாரண கன்சல்டேஷன்தான். அவங்க இந்த மாதிரி வேறு சிலரைப் பாத்திருக்கலாம். அவங்க அனுபவத்துலருந்து ஏதாவது நல்ல ஐடியா கொடுப்பாங்க. உங்க வீட்லருந்து வர்ற வரை இவனை அப்படியே வச்சிட்டிருக்க முடியுமா?” என்றேன்.

அவள் முடியவே முடியாது என்று காருக்குள்ளேயே கத்த ஆரம்பித்துவிட்டாள். பொதுவாக எங்கள் சண்டைகளின்போது கதறி அழும் அவன் அன்று அப்படியொன்று நடப்பதையேப் பொருட்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். மறுநாள் பொறுமையாகப் பேசிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

அன்றிரவு இரண்டு மணி போல கவின் திடீரென்று தூக்கத்திலிருந்து எழுந்து, “நோ கவின் ஹவ்ஸ்” என்று சொல்லி அழ ஆரம்பித்தான். அனு தன்னால் இயன்ற சமாதானங்களைச் சொல்லித் தூங்க வைக்க முயன்றாள். ஆனால் அவன் எதையுமே கேட்கவில்லை. திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கொண்டிருந்தாள். தூக்கம் கலைந்த ஆத்திரமும் ஒன்றுமே செய்யவியலாத கையாலாகாதத்தனத்தால் எழுந்த கோபத்திலும் அவனைப் போட்டு அடி அடியென்று அடிக்க ஆரம்பித்துவிட்டாள். உயிராய் நேசிக்கும் இரண்டுபேரும் ஆளுக்கொரு பக்கமாய் அழுதுகொண்டிருக்க எதுவுமே செய்யவியலாத மரம்போல் அமர்ந்திருந்தேன். எனக்குள்ளே ஏதோ உடைந்து நொறுங்கியதைப் போலிருந்தது.

“இதுக்குத்தான் நான் ஆஸ்திரேலியாவுலயே இருந்திடலாம் சொன்னேன். நீ தான் ஊரு மயிறு மட்டைன்னு என்னை இந்த ஊருக்குக் கூட்டி வந்த. அதுவும் இப்படி ஒரு பாழடைஞ்ச வீட்டுக்குள்ள. அய்யோ அய்யோ அய்யோ” என்று சொல்லி படீர் படீரென்று தன் தலையில் அடித்துக்கொண்டாள். எனக்கேகூட அங்கிருந்து கிளம்பி வந்தது பெரிய தவறோ என்று தோன்ற ஆரம்பித்தது. இப்போது அந்த இடம் காலியாக இருக்காது. பிராஜெக்ட்டும் மாறியாகிவிட்டது. இனி, நினைத்தாலும் கிளம்பிப் போக முடியாது. 

அவன் அழுவதை நிறுத்தவேயில்லை. அன்று இரவு மூன்று மணிக்கு காரை எடுத்துக்கொண்டு வெளியே வந்தோம். வெளியே வந்ததும் சற்று அமைதியானான். வழியில் பெட்ரோல் நிரப்பினேன். அங்கிருந்து தூரம் போனபிறகுதான் பெட்ரோல் போடுமிடத்தில் கொடுத்த கார்டை திரும்ப வாங்கினேனா என்ற சந்தேகம் வந்தது. காரை நிறுத்தி பர்ஸைப் பார்த்தேன். கார்ட் இல்லை. மறுபடியும் காரைத் திருப்பி பங்க் வந்தேன். அங்கே இரண்டேபேர்தான் வேலையில் இருந்தனர். எனக்கு யார் பெட்ரோல் போட்டார்கள் என்பதுகூட நினைவிலில்லை. பெட்ரோல் போட்டவருக்கு என்னை மட்டுமல்ல நான் கார்டை வாங்கி டேஷ்போர்டில் வைத்ததுவரை நினைவிலிருந்தது. கார்ட் உள்ளேதான் இருந்தது. 

மறுபடியும் ஜி.எஸ்.டி. சாலையில் வண்டியைவிட்டேன். அவன் முகத்தில் காற்றுபடும்படி காரின் ஜன்னல் கதவுகளைத் திறந்து வைத்துவிட்டு ஒரு மணிநேரம் ஊரைச் சுற்றி வந்ததும் களைத்துப்போய் அவன் தூங்கிவிட்டான். 

அனு கோபித்துக்கொண்டு ஒரு வார்த்தை பேசாமல் வந்தாள். அவளைப் பார்க்கவும் பாவமாக இருந்தது. எனக்கு யாரைச் சமாளிப்பது என்று தெரியவில்லை. அவன் நன்றாக அயர்ந்துவிட்டதால் வீட்டுக்குக் காரைக் கிளப்பினேன்.

படுக்கையில் எங்களிருவருக்கு நடுவில் அவனைப் போட்டுவிட்டு இரண்டுபேரும் விட்டத்தைப் பார்த்தபடி படுத்திருந்தோம். இருவருக்கும் துளித் தூக்கமில்லை. இரண்டு நாட்களில் புயல் வந்து புரட்டிப் போட்டதைப் போலிருந்தது வீடு. நடந்த ஒவ்வொரு நிகழ்வாக யோசித்துப் பார்த்தேன். 

அனு மெள்ளமாய்க் கெஞ்சும் குரலில் “இந்த வீட்டைவிட்டுப் போய்டலாம்ப்பா ப்ளீஸ்” என்றாள். அதையே திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தாள். நான் ஆயிரமாவதுமுறையாக “சரி போய்டலாம்” என்றபோது அவள் தூங்கிப்போயிருந்தாள். 


O


 நன்றி : தினகரன் தீபாவளி மலர் 2022

Comments

Popular posts from this blog

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம்

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம் -- குள்ளச்சித்திரன் சரித்திரம், வெளியேற்றம் நாவல்களை முன்வைத்து -- “சொல்லித் தீர்ந்துவிட்டன எல்லாக் கதைகளும். மறு கூறலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் புனைவு, சொல்லலின் நூதனத்தில் மட்டுமே  தன் உயிரை வைத்திருக்கிறது” – பகடையாட்டம் பின்னுரையில். இங்கே உள்ள கதைகள் அத்தனையும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன; புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை, சொல்லும் விதத்தில் மட்டுமே இனி புதிதாக ஏதேனும் ஒன்றைச் செய்ய முடியும் என்பதை யுவன் தீவிரமாக நம்புகிறார் என்பதை அவரின் புனைவுகளை தொடர்ந்து வாசிப்பதன் வழியே புரிந்துகொள்ள முடிகிறது. அப்படிப் புதிதாக தன் கதைகளைச் சொல்வதற்கான ஓர் உத்தியாக மாற்றுமெய்மையைக் கையாள்கிறார். அவரின் முதல் நாவலான குள்ளச்சித்திரன் சரித்திரமும், வெளியேற்றமும் அத்தளத்தில் எழுதப்பட்ட  அவரின் முக்கியமான படைப்புகள் எனலாம்.  எது மாற்றுமெய்மை? முதலில் எது மெய்மை? மெய்மை என்பதை எளிமையான புரிதலுக்காக யதார்த்தம் என்று கொள்வோம். பெளதீக ரீதியாக, அறிவியலின் தர்க்கத்திற்கு உட்பட்டு நிகழும் யாதொன்றையும் யதார்த்தம் அல்லது மெய்மை என்று வரைய

ரயில் புழு

வெளியிலிருந்து, கட்டை மேல் சுத்தியலால் அடிக்க வரும் ‘டொப் டொப்’பென்ற சத்தம் கேட்டே எழுந்தேன். அலாரம் எழுப்ப இன்னும் அரை மணி நேரம் இருந்தது. கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றால் சத்தம் வருவது நிற்கவில்லை. பொங்கல் விடுமுறை முடிந்து அன்றுதான் அலுவலகம் திரும்ப வேண்டும். நான்கு நாட்கள் தொடர் விடுமுறை. வெளியில் எங்கும் செல்லவில்லை. சோபாவிலிருந்து படுக்கைதான் நான் இந்த நாட்களில் அதிகம் நடந்த தொலைவு. சுகமாய்ச் சோம்பிக் கிடந்தேன். நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் என்றே மூன்று நாட்களைக் கடத்திவிட்டேன். ஊருக்குப் போக முடியாது. இங்கே நண்பர்களைப் பார்த்தாலும் அவர்களுடைய கேள்வி என்னவாக இருக்கும் என்பதை அறிவேன். இன்றும்கூட அலுவலகம் போனதும் எல்லோரும் விசாரிப்பார்கள். பொய் சொல்ல வேண்டும். சலிப்பாக இருந்தது. மொபைலை எடுத்தேன். பார்ப்பதற்கு எதுவுமிருக்கவில்லை. பேஸ்புக், இன்ஸ்டா என அனைத்துச் சமூக ஊடகங்களிலிருந்து வெளியேறிவிட்டேன். படுக்கையிலிருந்து எழுந்து கையில் பிரஷை எடுப்பதற்கு என்னை நானே பிடித்துத் தள்ள வேண்டியதாக இருந்தது. முந்தைய நாள் இரவு வரவேற்பறையின் ஜன்னல்களைச் சாத்தாமலேயே உறங்கிப் போய்விட்டேன். சாப்பிட்டுவிட்ட

கேண்மை

  தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் கலை இலக்கிய மாத இதழ் ஒன்றுக்காக நேர்காணல் வேண்டுமென்று அழைத்திருந்தார்கள். அழைத்தவர் தமிழின் முக்கியமான கவி. பக்கத்து மாநிலம் ஒன்றில் வசிக்கிறார். நேர்காணலுக்காக மாநிலம் விட்டு மாநிலம் வரவேண்டும். சிரமப்பட வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் விடாப்பிடியாக வருவதாகக் கூறிவிட்டார். முந்தைய சந்திப்பில் அவர் குறிப்பிட்டுப் பேசிய புத்தகம் ஒன்றை அவருக்குப் பரிசாக அளிப்பதற்காகப் புத்தக அடுக்கில் தேடிக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் தடித் தடியான புத்தகங்களை எடுத்துத் தூக்கவும் அவற்றை இடம் மாற்றி வைப்பதுமே அயர்ச்சியாக இருக்கிறது. கவனமாகக் கையாள வேண்டியிருக்கிறது. மூப்பின் காரணமாக விரல்களில் வலுவில்லை. அப்போதுதான் புத்தக அலமாரியில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் படத்துக்குப் பின்னாலிருந்த அந்தக் கடிதம் கண்ணில் பட்டது.   அப்பாவின் ஸ்நேகிதரும் என்னுடைய பழைய முதலாளியுமான வரதராஜன் சாரிடமிருந்து வந்த கடிதம் அது. நேரடியாக என் பெயர் போட்டே வந்திருந்தது. அப்பாவுக்கும் அவருக்கும் ஒரே பூர்விகம். மாயவரம் பக்கத்தில் சிறு கிராமம். பால்யகால ஸ்நேகிதம். இருவரும் பிற்கால