Skip to main content

ஒளிரும் பச்சைக் கண்கள்







1


அன்று மதியம் நன்கு தூங்கிவிட்டிருந்தேன். கண் விழித்துப் பார்க்கும்போது இரவாகியிருந்தது. சட்டென்ற ஒரு கணத்தில் இது இரவா பகலா என்றொரு குழப்பம். மெல்ல நிதானித்து நினைவுக்கு மீண்டேன். இரவு, பகல், கிழமை என்று மொத்த காலமும் கிளை பற்றித் தொங்கும் இருட்டு வவ்வாலைப் போல தலைகீழாய்ப் போயிருந்தது. உணவு பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. காலை உணவு மதியத்துக்கும் மதிய உணவு மாலைக்கும் இரவுணவு நள்ளிரவுக்கும் தள்ளிப் போயிருந்தது. சில நாட்களில் இரு வேளைகள், அரிதாக சில பொழுதுகளில் ஒரே வேளை என்றும் சுருங்கிற்று. அன்றாடத்தின் சகல ஒழுங்குகளும் கலைக்கப்பட்டுவிட்டன. இரவாகியிருந்தபோதும் ஹாலில் விளக்கேதும் போடப்பட்டிருக்கவில்லை. கையிலிருந்த மொபைலில் டார்ச்சினை ஒளிரவிட்டு கவனமாக அடியெடுத்து படுக்கையறையிலிருந்து வரவேற்பறைக்குச் சென்றேன். 

கண்கள் மெதுவாக வெளிச்சத்துக்குப் பழகின. சுவரில் மாட்டப்பட்டிருந்த தூசு படிந்த திருமணப் புகைப்படத்துக்குப் பின்னால் பல்லியொன்றின் வால் மட்டும் துடித்துக்கொண்டிருந்தது. டி.வி இருக்கும் டேபிளின் மேலே மீராவின் ஒற்றைக் கம்மல் கழற்றி வைக்கப்பட்டிருந்தது. ஸ்கூட்டி சாவி மரத்தால் செய்யப்பட்ட கிட்டார் வடிவச் சாவி மாட்டியிலிருந்து கீழே விழுந்து தரையில் கிடந்தது. பல நாட்களாக அவ்வப்போது அது கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கின்றது. முன்பு போல் இருந்தால், மீராவிடம் ஒரு வார்த்தை சொல்லலாம். “சொல்ற நேரத்துல எடுத்து வைக்கலாமே” என்றே பதில் வரும். இப்போது அதுவும்கூட இல்லை. கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. ஒரு வார்த்தை பேசவில்லை. வீடடங்கு ஆரம்பித்த முதல் வாரத்தில் வந்த சண்டைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. ஒரே வீட்டில் ஆளுக்கொரு அறை என்று பிரிந்து கிடக்கிறோம். இதைவிடக் கடுமையான சண்டைகளைக்கூட திருமணமான மூன்று ஆண்டுகளில் சாதாரணமாகக் கடந்து வந்திருக்கிறோம். ஒரு பெண்ணைப் பார்த்து எந்தவோர் ஆணும் எக்காரணத்தை முன்னிட்டும் பேசக் கூசும் வார்த்தைகளை எல்லாம் தாட்சண்யமேயில்லாமல் அவளிடத்தே கொட்டித் தீர்த்திருக்கிறேன். அவற்றோடெல்லாம் ஒப்பிட இது ஒன்றுமேயில்லை. அதே நேரத்தில் இந்த மூன்று ஆண்டுகளில் எங்கள் இருவரையும் கரைகளாக்கி நடுவில் வெறுமை ஒரு சலமனற்ற நதி போல ஓடிக்கொண்டிருக்கிறது. வெறுமையும் தனிமையும் ஒன்றாகச் சேர அனுமதிக்கக் கூடாது என்பது மட்டும் புரிந்தது. 

ஆப்பிள் நறுக்கிய கத்தியுடன் சீவிய ஆப்பிள் தோல்களும் விதைகளும் தட்டுடன் அப்படியே சோபாவின் மரக் கைப்படி ஓரத்தில் வைக்கப்பட்டிருந்தது. கத்தியின் கூர்மையான பகுதியின் மேல் இழுவியிருந்த ஆப்பிள் துணுக்குகளை விரல்களால் கவனமாய் தடவி எடுத்தேன். அப்போதுதான் என் முதுகின் மேல் துளைத்து வெளியேற முயலும் விழிகளை உணர்ந்தேன். நான் அமர்ந்திருந்த சோபாவிலிருந்து வலப் பக்கமாய்த் திரும்பிப் பார்த்தேன். படுத்திருந்த நிலையில் தலையை மட்டும் மெதுவாக உயர்த்தி எச்சரிக்கும் பாவனையில் அது என்னை முறைத்துப் பார்த்தது. 

மோக்கா – என்று பெயர் வைத்திருக்கிறாள். ஆட்காட்டி விரலுக்கும் சுட்டு விரலுக்கும் இடையில் வைத்துச் சுழற்றி விளையாட உதவும் ஃபிட்ஜெட் கருவியின் மிகச் சரியான வடிவத்தில் முகத்தில் படர்ந்த கருமையும், உடல் முழுவதும் வெள்ளையும் சாம்பலும் கலந்து பரவிய நிறமும் கொண்ட பூனைக்குட்டி. முகத்தின் கருப்பு நிறத்துக்கு நடுவில் ஒளிரும் பச்சை நிறக் கண்களின் வழியே அதனால் ஒரே நேரத்தில் தேவனையும் சாத்தானையும் தருவிக்க முடியும். இப்போது சாத்தானை வரித்துக் கொண்டுவந்து முறைத்தபடி நிற்கிறது.

குட்டியாக இருந்தபோதும் அதன் கண்களில் தென்பட்ட வன்மத்தின் தீவிரத்தால் என் மயிர்க்கால்கள் சிலிர்த்து நின்றன. உற்று பார்ப்பது அதன் ஆக்ரோஷத்தை மேலும் கிளறிவிடக்கூடும். மீன் முள்ளைப் போன்று கூர்மையாக வளைந்து நின்ற அதன் நகங்களைப் பார்த்தேன். அனிச்சையாக என் கெண்டைக் கால்களை ஒருமுறை தடவி விட்டுக்கொண்டேன். பார்வையை வேறு பக்கம் திருப்பினேன். ஒரு சின்ன பூனைக்குட்டிக்கு அஞ்சுவது பற்றி உள்ளுக்குள் வெட்கமாயிருந்தது. 

தொலைக்காட்சி அணைக்கப்பட்டிருக்கிறது. மற்றொரு அறையிலிருந்தும் எந்தவிதச் சத்தமும் வரவில்லை. மீராவும் தூங்கிக்கொண்டிருப்பாளாயிருக்கும். சமீப நாட்களில் அவளின் இருப்புக்குச் சத்தங்கள் மட்டுமே சாட்சியாகியிருக்கின்றன. அவள் விழித்திருக்கும் நேரங்களில் எப்போதும் அவளைச் சுற்றி ஏதாவது ஒன்று ஒலித்துக்கொண்டிருக்கும். சமையலறையில் நின்று சமைத்துக்கொண்டிருக்கும்போது பழைய டி.வி. நிகழ்ச்சிகள், பலதரப்பட்ட யூ-ட்யூப் சானல்கள், திரைப்படங்கள், சமையல் குறிப்புகள், பிரபலங்களின் பேட்டிகள், பாடல்கள், சமீப காலமாக செய்திகள், மருத்துவர்களின் அறிவுரைகள் என்று மொபைலில் இப்படி ஏதேனுமொன்று ஓலித்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் ஹாலில் டி.வி.யிலும் தன்போல ஏதாவதொன்று ஓடிக்கொண்டிருக்கும். இல்லையென்றால் அம்மா, அப்பா, பள்ளித் தோழிகள், பழைய அலுவலக சகாக்கள் என்று யாருடனாவது சலிக்காமல் பேசிக்கொண்டிருப்பாள். இதற்கு முன்பு அவள் இப்படியிருக்கவில்லை. அகமும் புறமும் ஒடுக்கப்பட்டிருக்கும் இந்நாட்களின் தொடக்கத்தில் ஆரம்பித்தது. இப்போது பிரிக்க முடியாத பழக்கமாய் அவளுள் வேரூன்றிப் போயிருந்தது. 


O


2


வீடடங்கைப் பலரும் விடுமுறையைப் போல கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் நாளை நேரக்கூடிய விளைவுகள் குறித்த அச்சமேதுமற்ற சுத்தப் பைத்தியக்காரத்தனம் இது எனவும், மறுபக்கம் நிற்க நேரமில்லாமல் எப்போதும் ஏதேனுமொன்றை துரத்திக்கொண்டு சென்றவர்கள் அத்தனைபேரும் நிறுத்தி நிதானித்து கொஞ்சம் ஆசுவாசம் கொள்ளட்டுமே, இப்போது என்ன ஆகிவிடப் போகிறது எனவும் தோன்றுகிறது. இதெல்லாம் முடிவுறும் ஒரு நாளில் மறுபடியும் பழையபடி இன்னுமின்னும் முன்பைக் காட்டிலும் வேகமாக ஓடத்தானே போகிறார்கள். 

ஒருவகையில் இதன் பொருட்டு இப்படியாக நிதானித்துக் களிப்பவர்களைப் பார்க்கப் பொறாமையாக இருக்கிறது. என்னுடைய வேலையைப் பார்ப்பதற்கு எனக்கு இருக்கும் அதிகபட்ச தேவையெல்லாம் ஒரு கணினியும் தடையற்ற இணையத் தொடர்பும் மட்டுமே. இவை மட்டும் இருக்குமெனில் எந்த ஒரு குக்கிராமத்திலிருந்தும் என்னால் எவ்வித பிசகுமின்றி என் வேலையைத் தொடர முடியும். 

இப்போது நினைத்துப் பார்க்கையில், தினம் தினம் போக பதினைந்து கி.மீ. வர பதினைந்து கி.மீ. என்று வெயில் மழை பாராது முதுகு நோக பயணம் செய்து அலுவலகம் போய்வந்ததுக்கு எல்லாம் என்ன பொருள் என்பது புரியவில்லை. எல்லோரும் போகிறார்கள் என்பதற்காக, கண்களை மூடிக்கொண்டு நிறைவேற்றப்படும் அர்த்தமறியாதொரு பழைய சடங்கைப் போல அலுவலகம் சென்று வந்திருக்கிறேன். அதற்குமேல் அப்படிப் போனதற்கு ஓர் அர்த்தமில்லை. அலுப்பும் சலிப்பும் மிக்க பயணத்தைத் தவிர்த்ததைத் தவிர இன்று என்னுடைய அன்றாடத்தில் துளி மாற்றமில்லை. சொல்லப் போனால் பயணத்தில் மிச்சமாகும் நேரத்தையும் சேர்த்து அலுவலக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.  நான் பார்க்கும் வரைகலை வடிவமைப்பு அதீத கவனத்தையும் உழைப்பையும் கோருவது. கற்பனையும் தருக்கமும் நுணுக்கமும் தகுந்த அளவில் கூடி முயங்கி எழுந்து வரவேண்டும். அதுவும்கூட இந்தப் பத்து வருடப் பயிற்சியில் வண்டியோட்டுவதைப் போன்ற அனிச்சை செயலாகிப் போயிருந்தது. 

அன்று வரைபடத்துக்கான தனித் தனி பாகங்களை வரைந்து முடித்துவிட்டு கடைசியாக அனைத்தையும் ஒன்றிணைத்துச் சேர்க்கும் வேலையையும் முடுக்கிவிட்டு பாதியில் நிறுத்திவைத்திருந்த அசோகமித்திரனின் ஒற்றன் நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். தனித்தனியாக செய்த துண்டுப் படங்களை இணைத்துக் கட்டும் வேலை இரண்டரை மணி நேரம் வரை நடைபெறும். மிகச் சரியாக மீதம் மூன்று நிமிடங்கள் இருக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பத்து நிமிடங்களில் மின்சாரம் திரும்பிவிட்டது. ஆனால், இப்போது மறுபடியும் இணைப்பு வேலையை முதலிலிருந்து தொடங்க வேண்டும். அது தானாகப் பிரச்சனையின்றி இணைத்துக் கட்டப்பெற்ற பிறகே வேலை முடியும். திரும்பச் செய்வது குறித்த சலிப்பைவிட ஒருவேளை இடையில் மீண்டும் மின்சாரம் தடைபட்டால் என்ன செய்வது என்பது குறித்த எரிச்சலே அதிகமாக இருந்தது. கணினியை உயிர்ப்பித்து மறுபடியும் தடைப்பட்ட வேலையை முதலில் இருந்து முடுக்கிவிட்டு நாவலைக் கையில் எடுத்தேன். அப்போதுதான் மீரா அடுப்படியிலிருந்து அழைத்தாள். 

“நித்தில்..” 

அவள் அழைத்தது எனக்கு காதில் கேட்டும் பதில் சொல்லும் மனநிலை இல்லை. ‘அதை எடு, இதைச் செய்’ என்று ஏதாவது வேலை ஏவுவதற்காகவே அழைக்கிறாள் என்பதை அவள் அழைக்கும் தொனியிலிருந்தே அறிவேன். 

“ நித்தில்..”

“சொல்லு மீரா”

“வேலை முடிஞ்சதா? கொஞ்சம் ஹெல்ப் வேணும்.” 

“இல்ல மீரா.. வேலை இன்னும் முடியல.”

“பொய் சொல்லாத.. சும்மா உக்காந்து புக்தானே படிச்சுட்டு இருந்த. இப்போ ஒரு ஹெல்ப்ன்னு கேட்டதும் வேலை அது இதுங்கிற பாத்தியா?”

“ஹே.. சத்தியமா இன்னும் வேலை முடியலடி”

“நான் ஏதாவது சொன்னா மட்டும் உனக்கு வேலை வந்துடும். நேரம் இருக்காது. அதுவே படம் பார்க்க புத்தகம் படிக்கன்னா மட்டும் நேரம் தனியா முளைச்சு வந்திரும் இல்ல?”, அவள் என்னவோ இதை மெல்லிய புன்னகை இழையோடும் கேலியாகச் சொன்னதுபோல்தான் இருந்தது. என்னால்தான் அன்று அதைச் சிரித்துக் கடந்துசெல்ல இயலவில்லை. 

“ஐயோ ப்ளீஸ் ஆரம்பிக்காதே.. இப்போ நான் என்ன பண்ணனும் மட்டும் சொல்லு” கட்டுக்குள் நிற்காமல் என் குரல் உயர்ந்தது. 

“நீ ஒண்ணும் பண்ண வேண்டாம் விடு.. போ போய் உன் வேலையப் பாரு. அவனவன் பொண்டாட்டிக்கு எப்படி ஹெல்ஃப் பண்றான் போய் பாரு. தீபக்கெல்லாம் சனி ஞாயிறு மொத்த சமையலும் அவனே பண்றான். எங்க அண்ணி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் முழுக்க வரிசையா போட்டாவா போட்டுத் தள்ளுறாங்க. நீதான் என்னமோ ஓவரா பண்ற” 

“சும்மா கடுப்பேத்தாத மீரா. உங்க அண்ணனுக்கு ஆபிஸ் கிடையாது. வீட்டில இருந்து வேலை பார்க்க வேண்டிய அவசியமும் இல்ல. அப்போ இதுவும் செய்வான். இதுக்கு மேலயும் செய்வான். எனக்கு அப்படியா? காலைல பத்து மணிக்கு வேலை செய்ய உட்கார்ந்தேன். இதோ இப்போ நைட்டு எட்டு மணியாச்சு. இன்னமும் இரண்டு மணி நேரம் வேலை இருக்கு. இதுக்கு நடுவுல நீ வேற ஊர் உள்ளவன் ஸ்டேட்டஸ் எல்லாம் மேஞ்சுட்டு வந்துட்டு சும்மா நச்சு நச்சுன்னு படுத்துற” 

போகிற போக்கில் அவள் அண்ணனை அவன் இவன் என்று சொன்னதை இப்போது அவள் கவனித்ததுபோல் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் என்றாவது ஒரு நாள் கண்டிப்பாய் இதை எடுப்பாள் என்பது எனக்குத் தெரியும். ஒரு சண்டையில் தவறவிட்ட வார்த்தைகள் ஒவ்வொன்றும் அடுத்தடுத்த சண்டைகளில் எனக்கெதிரான ஆயுதமாய்த் திரும்புவதைக் கவனித்திருக்கிறேன். இப்போது அவள் முகம் சிறுக்க ஆரம்பித்தது. ஏவிய குரலுக்கு வந்து நிற்கும் நாய்க்குட்டிபோல கண்களில் நீர் தேங்கி நின்றது. 

“நீ வேலை பார்த்துட்டு இருக்கும்போது ஒண்ணும் நான் கேக்கலியே. காலைல இருந்து உன்ன எதாவது கேட்டனா? மூணு வேலை சமையல், இரண்டு வேளை டீ, அதுக்கு மேல பாத்திரம் தேய்க்கிறது, வீடு கூட்டுறதுலருந்து உன் ஜட்டி, பனியனைத் துவைச்சுப்போடுறது வரை அத்தனையையும் ஒத்தையாளா நின்னு நான்தானே இங்க இழுத்துப்போட்டுப் பண்ணிட்டு இருக்கேன். நடுவுல ஏதாவது உன்ன தொல்லை பண்ணேனா? இல்லியே! நான்...” 

அவள் பேசும்போது இடைவெட்டிப் பேசுவது அவளைக் கூர்மையாக அவமதிக்கும் என்பது எனக்குத் தெரியும். அப்படியே செய்தேன்.

“ஐயோ கடவுளே.. லிஸ்ட் போட ஆரம்பிச்சுடாத. நான் மட்டும் இப்படி வேலை பார்த்து வாங்கிட்டு வர்ற சம்பளத்தை பக்கத்து வீட்டுல கொண்டுபோயா கொட்டுறேன்? மாங்கு மாங்குன்னு மாடு மாதிரி யாருக்காக உழைக்கிறேன்? சும்மா ஏதோ நீ மட்டும்தான் இந்த வீட்டுல வேலை பார்க்குற மாதிரி பேசுற! எப்பப் பார்த்தாலும் சும்மா நைய் நைய்ன்னுட்டு.. ச்சை!”

“என்ன நைய் நைய்ன்னு சொன்னாங்க இப்போ? எட்டிப் பார்த்தேன். புக்தான் படிச்சுட்டு இருந்த. அதான் கூப்பிட்டேன். அதுக்கு இவ்வளோ பேச்சா.. யப்பா. ஒரு உதவிக்குத் துப்பில்ல.. பேச்சுக்கு மட்டும் குறைச்சலில்ல” என் முகத்தைப் பார்க்காமல் சுவரைப் பார்த்து கேலியாகச் சிரித்தபடிப் பேச ஆரம்பித்தாள். என் அகத்தைக் குறுக்கி ஒடுக்கி கிறுக்குப் பிடிக்க வைக்கும் உத்திகளை என்னைவிடக் கச்சிதமாகக் கையாண்டாள்.

“ஓ.. அதான் தெரியுமே எனக்குப் பிடிச்ச மாதிரி ஒரு பத்தே பத்து நிமிசம் இருந்துடக்கூடாது. புக்கைத் திறந்து நாலு பக்கம் பொறட்டிடக்கூடாது. உனக்குப் பொறுக்காதே. மூக்கு வியர்த்துடும். சாடிஸ்ட்.. சைக்கோ.. சைக்கோ..” என்று அவளைப் பார்த்து உச்சக் குரலில் கத்தினேன். கோபத்தில் கையில் வைத்திருந்த புத்தகத்தைத் தூக்கி எறிந்தேன். குறி பார்த்துச் செய்யவில்லை என்றாலும் அது மிகச் சரியாக அவள் முகத்தின் மேல் போய் விழுந்தது. 

அதன் பிறகு வேலையை முடித்துவிட்டு அடுப்படிக்குச் சென்று பார்த்தேன். கருகியிருந்த தோசையுடன் அடுப்பு அப்படியே அணைக்கப்பட்டிருந்தது. மற்றபடி எல்லாம் போட்டது போட்டபடி இருந்தது. அவள் அழுதிருப்பாளாய் இருக்கும். என்னால் இதில் எதுவும் செய்வதற்கில்லை. அவள் கண் முன்னால்தான் அவ்வளவு மணி நேரம் முதுகுக்குப் பொருந்தாத நாற்காலியில் அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். எல்லாம் தெரிந்திருந்தும் மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பேசுவதைத்தான் என்னால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. 

போகட்டும். கிடந்து அழட்டும். சமாதானப்படுத்தி சரிசெய்யும் மனபோக்கு இல்லை. மறுநாள் காலையில் எல்லாம் சரியாகிவிடும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், மறுநாள் முழுவதும் அவள் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அதேநேரத்தில் வழக்கமாக கோபத்திலிருக்கும்போது அவள் செய்யும் கவன ஈர்ப்பு உத்திகள் ஒன்றையும் செயல்படுத்தவில்லை. 

மூன்றாம் நாள் மனது கேட்காமல் குற்ற உணர்வு மேலிட நானே பேச ஆரம்பித்தேன். அவளுக்குத் தெரியாமல் அவள் முகத்தை உற்றுப் பார்த்தேன். காயமோ, வீக்கமோ தென்படவில்லை. அவளிடம் என்னுடைய எந்தக் கேள்விக்கும் பதிலில்லை. சிறு சலனம்கூட இல்லை. ஆனால், அவள் மற்ற நாட்களில் செய்வதைப் போன்றே அத்தனை வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்தாள். பாத்திரங்கள் உருட்டப்படும் சத்தம், கப்-போர்ட்டுகள் அறைந்து சாத்தப்படும் ஓசை, தான்தோன்றிப் புலம்பல்கள் என எதுவுமில்லை. குறைந்தபட்சமாக ஒரு முறைப்பு, சிறு சுளிப்புகூட இல்லை. அதுதான் சற்று உறுத்தியது. இயல்பைவிட்டு விலகியிருப்பதே எப்போதும் அச்சத்தைக் கூட்டுகிறது. வழக்கமான சண்டைகளின்போது, “இப்படியே நீ பண்ணிட்டு இரு. என்னைக்காவது ஒரு நாள் வெடிக்கப் போறேன். அன்னிக்குப் பார்ப்ப என்னோட உண்மையான முகத்த” என்ற வாக்கியத்தோடுதான் சண்டையை முடிப்பாள். அதெல்லாம் அவ்வப்போதான கோபத்தின் வெளிப்பாடுதான் என்பதை உணர்ந்திருந்தாலும் என்றாவது ஒரு நாள் அப்படி நடந்துவிடுமோ என்ற அச்சம் உள்ளே உறைந்திருந்ததையும் மறுப்பதற்கில்லை. ஆனால், வெடிப்பதற்குப் பதிலாக இப்படி மொத்தமாக அடைத்துக்கொள்வாள் என்பதை நான் எதிர்பார்த்திருக்கவேயில்லை. இயன்றவரை நான் இயல்பாக இருக்க முயற்சித்தேன். அவளிடம் சாதாரணமாகப் பேசுவதைப் போலவே பேசிக்கொண்டிருந்தேன். அவள் எதையும் பொருட்படுத்தியதாகக் காட்டிக்கொள்ளவில்லை.

என்னாலும் இரண்டு நாட்களுக்கு மேல் இயல்பாக இருப்பதுபோல் நடிப்பதைத் தொடர முடியவில்லை. சோபாவில் அமர்ந்து யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தாள். நானும் சோபாவில் போய் சற்றுத் தள்ளி அந்நியர் ஒருவருக்குத் தருவதைப் போன்ற போதிய இடைவெளிவிட்டுத்தான் அமர்ந்தேன். தீ பட்டதைப் போல் துள்ளி எழுந்து நகர்ந்து போனாள். சுருக்கென்று இருந்தது. திரும்பத் திரும்ப அந்தச் சம்பவம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அன்றிலிருந்து அவளிடம் பேசுவதைக் குறைத்தேன். ஒரு கட்டத்தில் முற்றிலும் நிறுத்திக்கொண்டேன்.


O

3


ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த பாட்டிலிலிருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தேன். அறையிலும் மனத்திலும் கவிந்திருந்த புழுக்கத்துக்கு இதமாக இருந்தது. காலையில் காய்ச்சி வைக்கப்பட்டிருந்த பாலை எடுத்து மோக்காவுக்காக ஒதுக்கப்பட்டிருந்த வளைந்த கனத்த தட்டில் ஊற்றினேன். அதில் கொஞ்சம் தண்ணீர் கலந்து ஹாலுக்குக் கொண்டு வந்தேன். அது முன்பு படுத்திருந்த நிலையிலிருந்து மாறவில்லை. பால் இருந்த கிண்ணத்தை வைக்கப் பக்கத்தில் போனதும் மிரண்டது. மெதுவாகச் சீறியது. பயந்து கையை உதறியதில் தட்டிலிருந்த பால் மொத்தமும் பேப்பரிலும் தரையிலுமாகச் சிந்திப் பரவியது. அப்படியே தட்டை எடுத்து தலையில் ஒரு போடு போட்டுவிடலாமா என்று யோசித்தேன். மறு கணம் பார்க்க பாவமாகவும் இருந்தது. 

வீடடங்கு அறிவிக்கப்பட்டு நாங்கள் வீட்டில் அடைய ஆரம்பித்த இரண்டாம் நாள் அது. அலுவலகத்தில் கொடுத்துவிடப்பட்ட மாக் கணினியின் எல்லா இணைப்பு வயர்களையும் தகுந்த இடத்தில் பொருத்திச் சரிபார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் மீரா வீட்டுக்கு வெளியிலிருந்து அழைத்தாள்.

“நித்தில்”

“சொல்லு மீரா”

“ஒரு நிமிசம் வெளியே வர்றியா?” அவள் குரலில் உற்சாகம் நிறைந்து ததும்பியது.

“ஃபைவ் மினிட்ஸ்”

“இல்ல இல்ல.. அவ்ளோ நேரமெல்லாம் கிடையாது. உடனே வெளியே வா. ப்ளீஸ்டா” என்று பக்கத்திலிருக்கும் பல வீடுகளுக்கும் கேட்கும் குரலில் கத்தினாள்.

நாங்கள் இருப்பது பழவந்தாங்கலில் தனி வீடு. மேலே வீட்டு உரிமையாளர். கீழே நாங்கள். இரண்டு மா மரங்கள், பின்னால் ஒரு கிணறு, வீட்டுக் காம்பவுண்ட் சுவரைச் சுற்றி உட்புறமாக நட்டு வைக்கப்பட்ட மூன்றுவித செம்பருத்திச் செடிகள், நந்தியாவெட்டை, துளசி. சென்னையில் இப்படி ஒரு அழகான வீடு அதிர்ந்து பேசாத உரிமையாளரைக் கொண்டிருப்பது மிகவும் அரிது. அவ்வகையில் அதிர்ஷ்டம் எங்கள் பக்கம் இருந்தது.  

வீட்டு வாசலுக்கு வலதுபுறத்தில் சுற்றுச் சுவரை ஒட்டி வைக்கப்பட்டிருந்த துளசிச் செடிகளுக்குப் பக்கத்தில் மீரா குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தாள்.

“வா வா நித்தில் இங்க வந்து பாரு”

அழகிய பொதிப் பஞ்சைப் போலிருந்தது அந்தப் பூனைக்குட்டி. பிறந்து சில நாட்களே இருக்கும். கண்களை பாதியாகத் திறப்பதும், பிறகு, வெளிச்சத்துக்கு கூசி மூடுவதுமாக இருந்தது. சுட்டுவிரலால் மெதுவாக அதன் தலையைத் தடவினாள். தன் உடலைச் சிலிர்த்துக்கொண்டது. மெதுவாக அதை தன் இடக்கையில் எடுத்து மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டாள்.

“ஹே.. கீழே விடு மீரா.. அதோட அம்மா பார்த்தா உன்னைக் கடிச்சுடப் போகுது”

“அதெல்லாம் ஒண்ணும் பண்ணாது போ”

“பைத்தியம்!”

என்னைப் பார்த்து கண்களைத் தாழ்த்தி அசடாகச் சிரித்தாள். அதன் அர்த்தம் எனக்குப் புரிந்தது. 

“நோ மீரா.. வேண்டாம். நாம இருக்கிறது வாடகை வீடு. நமக்கு பெட்ஸ் எல்லாம் செட் ஆகாது. மேல் வீட்டு ஆன்ட்டிக்குத் தெரிஞ்சா ஏதாவது சொல்லப் போறாங்க.”

“ஆன்ட்டிக்கிட்ட நான் பேசிக்கிறேன். அது பிரச்சனையில்ல. நீ என்ன சொல்ற?” என்றாள்.

“அய்யோ லூஸே.. அதோட அம்மா தேடப் போகுது. பாவமில்லியா” என்றேன்.

“அதெல்லாம் தேடாது. ஒருவேள அப்படித் தேடி வந்தா பார்த்துக்கலாம். இப்போ இதை இப்படியே விட்டாலும் செத்துப் போயிடும். அழகா இருக்கு. இதோட கண்ணை மட்டும் பாரு. ஒரு மாதிரி பச்சை பச்சையா அப்படியே கலர் கோலிக்குண்டு மாதிரி எப்படி இருக்கு. இதை மட்டும் ஒரே ஒரு தடவை பாரு. உனக்கே கீழே விட மனசு வராது” என்றாள். 

அவள் என்னிடம் அனுமதியெதுவும் கேட்கவில்லை. முடிவு செய்துவிட்டுத் தகவலைச் சொன்னாள். அவ்வளவுதான். அதை எடுத்து வளர்ப்பது குறித்து எனக்கு முதலில் தயக்கமிருந்தது உண்மைதான் என்றாலும் அவளின் இரவுநேர அழுகைகளை அது குறைக்கக்கூடும் என்று திடமாக நம்பினேன். நானும் அதன் கண்களைப் பார்த்தேன். எல்லாவற்றுக்கும் மேல் அவள் சொன்னதில் உண்மை இருந்தது.

துணியாலான மிதியடிகள் கொண்டு குட்டியாக ஒரு மெத்தை தயாரித்தாள். பாலைக் காய்ச்சி பக்கத்தில் யாரிடமோ பேசி வாங்கி வைத்த  ஃபீடிங் பாட்டிலில் அடைத்துக் கொடுத்தாள். எப்போதும் நண்பர்களின் வருகையால் களைகட்டி இருக்கும் எங்கள் வீட்டில், வீடடங்கு காலத்தின் காரணமாய் கவிந்திருந்த வெறுமையை இட்டு நிரப்பியது அதன் வருகை. இருந்தும் அதன் இருப்பினை முழு மனதாக என்னால் ஏனோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது வந்து சேர்ந்த இரண்டாவது நாள்தான் எங்களுக்குள் அந்தச் சண்டை நிகழ்ந்து பேச்சுவார்த்தை நின்று போனது. 

பல நேரங்களில் மீராவிடம் பேச வேண்டிய விசயங்களை, சொல்ல வேண்டிய தகவல்களை மோக்காவைப் பார்த்துச் சொல்லத் தொடங்கினேன். சண்டைக்குப் பின்னான சமாதான முயற்சிகளின் போது ரொம்பவும் விளையாட்டாகத்தான் இதை ஆரம்பித்தேன். அப்படியாக அதனோடு நட்பாக பேசும் கணங்களில் அது தன் தலையைக் கொண்டுவந்து என் பாதங்களில் மெதுவாக முட்டும். அவள் தடவிக்கொடுப்பதைப் போலவே நானும் அதன் கழுத்தினை மெதுவாகத் தடவிக்கொடுத்தேன். அந்தச் சுகத்தில் அது மேலும் மேலும் நெகிழ்ந்து குழைந்து உருகும். தடவுவதை நிறுத்தியதும் தலையை உயர்த்தி என் முகத்தைப் பார்க்கும். அப்போது அதற்கு இருந்தது அன்பினை இறைஞ்சும் தேவனின் கண்கள். 

அடுத்தடுத்த வாரங்களில் அது கொஞ்ச கொஞ்சமாய் மொத்த வீட்டையும் உரிமைகொண்டாட ஆரம்பித்தது. என் படுக்கையறையில் முடி உதிர்ப்பது குறித்து அதனிடமே சொல்வதுபோல மீராவிடம் சத்தம்போட்டுக் கண்டித்த நாளிலிருந்துதான் மீரா தன் படுக்கையை பக்கத்து அறைக்கு மாற்றிக்கொண்டாள். உண்மையில் மோக்காவைத்தான் வெளியேற்றியிருக்க வேண்டும். ஆனால், கிட்டத்தட்ட அவர்கள் இருவரும் சேர்ந்து என்னை ஒதுக்கினார்கள். 

அதன் பின் ஒரு நாள் டீப்பாயிலிருந்த என் புத்தகம் கரம்பி வைக்கப்பட்டிருந்தது. நண்பர் ஒருவரிடம் இரவல் வாங்கி வைத்திருந்த புத்தகம். என்னால் கோபத்தை கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. மோக்காவினுடைய செய்கைதான் என்றாலும் ஓரோரு சமயம் அதனைக் கடிந்து பேசுவதற்கே அச்சமாக இருந்தது. அதனுடைய செய்கைகளைப் பார்க்கும்போது பல நேரங்களில் மீராவினுடையதைப் போலிருந்தது. இதில் யார் யாரைப் பிரதியெடுக்கிறார்கள் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.


O

4


நீண்ட நாட்களாக மழிக்கப்படாமலிருந்த தாடி என்னைச் சுற்றி படர்ந்திருந்த தனிமையின் அடர்த்தியை இன்னும் அதிகமாக்கியதைப் போல் தோன்றியது. ஃபோமைத் தடவி சேவிங் செய்துகொண்டிருந்தேன். மீசையில் பட்டுவிடாமல் அதிகவனமாக முடியை ஒதுக்கிக்கொண்டிருந்தபோதுதான் கண்ணாடியில் அந்தக் காட்சியைக் கண்டேன். என் அலுவலகக் கணினியின் வயரின் மேல் ஒரு காலை ஊன்றி அது நகர்ந்துவிடாமல் பிடித்துக்கொண்டு மோக்கா வெகு ருசியாக அதைக் கரம்பிச் சுவைத்துக்கொண்டிருந்தது. கணினி எவ்வகையிலேனும் பழுதுபடுமாகின் இப்போதிருக்கும் சூழலில் அதைச் சரிபார்ப்பது நடவாத காரியம். என்னுடைய மொத்த வேலையும் பாழ். அதற்கும் மேல் வயரைக் கடித்து ஏதாவது ஆகித் தொலைந்தால் என்னாவது? 

இதில் கவனம் சிதறி முகத்திலொரு செவ்வரி தீட்டிக்கொண்டேன். ஷேவிங்கைப் பாதியில் நிறுத்திவிட்டு, “யே.. யேய்.. வயரைப் போய் கடிக்கிற! ஷாக் அடிச்சுட்டு செத்துடாதே. அந்தப் பக்கம் போய்த் தொலையேன் சனியனே!. என் உயிரை வாங்கன்னு வந்து சேர்ந்திருக்க” என்று கத்தி காலை ஓங்கித் தரையில் மிதித்துச் சப்தமெழுப்பி அதை விரட்டினேன். 

உச்ஸ்தாயில் ஒலித்த என் கத்தலையும், தரையிலிருந்து வந்த இடியொத்த ஓசையையும் எதிர்பாராத அது திடுக்கிட்டு வெருண்டு விலகியது. மீராவினுடைய அறைக்கு வெளியே நின்றுகொண்டு என்னைப் பார்த்து மெல்லிய குரலில் ‘மியாவ்’ என்றது. 

அவ்வறையிலிருந்து மீரா வெளிவந்து கண்ணீர் ததும்பும் விழிகளுடன் அதனை கையில் எடுத்துக்கொண்டு அறைக்குள் சென்றாள். அன்றும் மறுநாளும் மீராவினுடைய அறையைவிட்டு மோக்கா அதிகமாக வெளிவரவில்லை. அவ்வப்போது உள்ளிருந்து சத்தம் மட்டும் வரும். நானும் அது குறித்துப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. 

அன்றைக்கு இரவு சிறுநீர் கழிக்க என் படுக்கை அறையிலிருந்து வெளியே வந்தபோதுதான் வழியில் படுத்திருந்த மோக்காவைத் தெரியாமல் மிதித்துவிட்டேன். எண்பது கிலோ எடையை ஒரு சின்ன பூனைக்குட்டி எப்படித் தாங்கும். வலியில் கதறிக் கத்தித் தீர்த்துவிட்டது. கோபத்தில் என் கால்களை தன் கூரிய நகங்களால் இழுத்துப் பிறாண்டி கிழித்தது. விளக்கைப் போட்டதும்தான் கவனித்தேன். அதன் கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. அதே நேரத்தில் என்ன செய்வதென்றும் புரியவில்லை. அதைத் தொட்டுத் தூக்கலாம் என்று பக்கத்தில் போனதும் மீண்டும் காலின் மீது ஏறிப் பிறாண்டியது. என் முட்டிக்குக் கீழ் அதன் கூரிய நகங்களின் உபயத்தால் குறுக்கும் நெடுக்குமாய் கீறல்கள். கீழே குனிந்து மறுபடியும் தூக்க முயற்சிக்கும்போது அது விலகி ஓடி மீராவின் அறைக்குள் நுழைந்துகொண்டது. அது உள்ளே போனதும் அவ்வறையின் விளக்குகள் ஒளிர்ந்தன. நீண்ட நேரத்துக்கு அதன் ஓலச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. மீரா கொஞ்சியும் கெஞ்சியும் சமாதானப்படுத்திக்கொண்டிருந்தாள். நான் என் அறையில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன். அதன் பச்சைக் கண்களில் வழிந்த கண்ணீர் என்னை அதிகமாய் தொந்தரவு செய்தது. இதற்கு முன் ஒரு பூனையோ நாயோ இப்படி அழுது நான் பார்த்ததில்லை. அதன் பிறகு துளியும் தூக்கம் கூடவில்லை. மனதைச் சமநிலைக்குக் கொண்டுவந்து மீள்வதற்கு மதியமாகியது. அதன் பின்னரே கொஞ்சம் தூக்கம் சாத்தியப்பட்டது. அப்படித் தூங்கித்தான் இதோ இரவில் விழித்திருக்கிறேன். 


O

5


மறுபடியும் பாலைக் காய்ச்சி பின் குளிர்வித்து மற்றொரு கிண்ணத்தில் போட்டு கொஞ்சம் தள்ளி வைத்து மோக்காவை அழைத்தேன். அது அங்கிருந்து நகரவேயில்லை. பால் வைக்கப்பட்ட கிண்ணத்தையோ என்னையோ துளியும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அதன் அடமும் புறக்கணிப்பும் எனக்கு மீராவை நினைவுபடுத்தியது. எரிச்சல் மண்டியது. அது அங்கிருந்து நகர்ந்து தொலைந்தால்தான் நான் கீழே கொட்டியிருக்கும் பாலைத் துடைக்க முடியும். இல்லாவிட்டால் அது வழிந்து மீராவின் அறைக்குள் நுழையும். மேலும் சங்கடம். 

மோக்காவுக்குப் பக்கத்தில் போய் கீழே குனிந்து அதனைத் தூக்கி நகர்த்த முற்பட்டேன். கோபத்தில் சீறி, மறுபடியும் அது என் கைகளைப் பற்றிப் பிராண்டியது. வலியிலும் கோபத்திலும் கைகளை வேகமாக உதறினேன். மீரா கதவைத் திறக்கவும் அது கதவினில் போய் அடிபட்டு விழவும் சரியாக இருந்தது. மீரா அதை அள்ளி எடுத்து மார்போடு அணைத்துக்கொண்டாள். நான் அவளைப் பார்க்கவில்லை. தலையைக் குனிந்துகொண்டேன். அவள் என்னை முறைத்துக் கொண்டிருந்தாள்.  அப்போது அவளுக்கும் சாத்தானின் ஒளிரும் பச்சைக் கண்கள் இருந்தது.

கதவு இழுத்து அறைந்து சாத்தப்பட்டது. 

இது நடந்து இன்றோடு ஒரு வாரமாகிவிட்டது. அச்சம்பவத்துக்குப் பிறகு எனக்கு தேவனின் கோவத்தையோ சாத்தானின் கருணையையோ காணும் வாய்ப்பு கிட்டவில்லை.


O


 நன்றி : யாவரும் 




















Comments

Popular posts from this blog

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம்

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம் -- குள்ளச்சித்திரன் சரித்திரம், வெளியேற்றம் நாவல்களை முன்வைத்து -- “சொல்லித் தீர்ந்துவிட்டன எல்லாக் கதைகளும். மறு கூறலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் புனைவு, சொல்லலின் நூதனத்தில் மட்டுமே  தன் உயிரை வைத்திருக்கிறது” – பகடையாட்டம் பின்னுரையில். இங்கே உள்ள கதைகள் அத்தனையும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன; புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை, சொல்லும் விதத்தில் மட்டுமே இனி புதிதாக ஏதேனும் ஒன்றைச் செய்ய முடியும் என்பதை யுவன் தீவிரமாக நம்புகிறார் என்பதை அவரின் புனைவுகளை தொடர்ந்து வாசிப்பதன் வழியே புரிந்துகொள்ள முடிகிறது. அப்படிப் புதிதாக தன் கதைகளைச் சொல்வதற்கான ஓர் உத்தியாக மாற்றுமெய்மையைக் கையாள்கிறார். அவரின் முதல் நாவலான குள்ளச்சித்திரன் சரித்திரமும், வெளியேற்றமும் அத்தளத்தில் எழுதப்பட்ட  அவரின் முக்கியமான படைப்புகள் எனலாம்.  எது மாற்றுமெய்மை? முதலில் எது மெய்மை? மெய்மை என்பதை எளிமையான புரிதலுக்காக யதார்த்தம் என்று கொள்வோம். பெளதீக ரீதியாக, அறிவியலின் தர்க்கத்திற்கு உட்பட்டு நிகழும் யாதொன்றையும் யதார்த்தம் அல்லது மெய்மை என்று வரைய

ரயில் புழு

வெளியிலிருந்து, கட்டை மேல் சுத்தியலால் அடிக்க வரும் ‘டொப் டொப்’பென்ற சத்தம் கேட்டே எழுந்தேன். அலாரம் எழுப்ப இன்னும் அரை மணி நேரம் இருந்தது. கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றால் சத்தம் வருவது நிற்கவில்லை. பொங்கல் விடுமுறை முடிந்து அன்றுதான் அலுவலகம் திரும்ப வேண்டும். நான்கு நாட்கள் தொடர் விடுமுறை. வெளியில் எங்கும் செல்லவில்லை. சோபாவிலிருந்து படுக்கைதான் நான் இந்த நாட்களில் அதிகம் நடந்த தொலைவு. சுகமாய்ச் சோம்பிக் கிடந்தேன். நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் என்றே மூன்று நாட்களைக் கடத்திவிட்டேன். ஊருக்குப் போக முடியாது. இங்கே நண்பர்களைப் பார்த்தாலும் அவர்களுடைய கேள்வி என்னவாக இருக்கும் என்பதை அறிவேன். இன்றும்கூட அலுவலகம் போனதும் எல்லோரும் விசாரிப்பார்கள். பொய் சொல்ல வேண்டும். சலிப்பாக இருந்தது. மொபைலை எடுத்தேன். பார்ப்பதற்கு எதுவுமிருக்கவில்லை. பேஸ்புக், இன்ஸ்டா என அனைத்துச் சமூக ஊடகங்களிலிருந்து வெளியேறிவிட்டேன். படுக்கையிலிருந்து எழுந்து கையில் பிரஷை எடுப்பதற்கு என்னை நானே பிடித்துத் தள்ள வேண்டியதாக இருந்தது. முந்தைய நாள் இரவு வரவேற்பறையின் ஜன்னல்களைச் சாத்தாமலேயே உறங்கிப் போய்விட்டேன். சாப்பிட்டுவிட்ட

கேண்மை

  தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் கலை இலக்கிய மாத இதழ் ஒன்றுக்காக நேர்காணல் வேண்டுமென்று அழைத்திருந்தார்கள். அழைத்தவர் தமிழின் முக்கியமான கவி. பக்கத்து மாநிலம் ஒன்றில் வசிக்கிறார். நேர்காணலுக்காக மாநிலம் விட்டு மாநிலம் வரவேண்டும். சிரமப்பட வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் விடாப்பிடியாக வருவதாகக் கூறிவிட்டார். முந்தைய சந்திப்பில் அவர் குறிப்பிட்டுப் பேசிய புத்தகம் ஒன்றை அவருக்குப் பரிசாக அளிப்பதற்காகப் புத்தக அடுக்கில் தேடிக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் தடித் தடியான புத்தகங்களை எடுத்துத் தூக்கவும் அவற்றை இடம் மாற்றி வைப்பதுமே அயர்ச்சியாக இருக்கிறது. கவனமாகக் கையாள வேண்டியிருக்கிறது. மூப்பின் காரணமாக விரல்களில் வலுவில்லை. அப்போதுதான் புத்தக அலமாரியில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் படத்துக்குப் பின்னாலிருந்த அந்தக் கடிதம் கண்ணில் பட்டது.   அப்பாவின் ஸ்நேகிதரும் என்னுடைய பழைய முதலாளியுமான வரதராஜன் சாரிடமிருந்து வந்த கடிதம் அது. நேரடியாக என் பெயர் போட்டே வந்திருந்தது. அப்பாவுக்கும் அவருக்கும் ஒரே பூர்விகம். மாயவரம் பக்கத்தில் சிறு கிராமம். பால்யகால ஸ்நேகிதம். இருவரும் பிற்கால