Skip to main content

பட்டினிக் கலைஞன் - ஃப்ரன்ஸ் காஃப்கா



டைவெளி சிற்றிதழின் ஆசிரியக்குழு கூட்டத்தில் பட்டினிக் கலைஞன் கதை பற்றி நடந்த விவாதத்தை கீழே ஒரு குறுங்கட்டுரையாகத் தொகுத்திருக்கிறேன்.

அவன் ஒரு பட்டினிக் கலைஞன். அவனால் நீண்ட நாட்களுக்கு ஒரு கவளம் கூட சாப்பிடாமல் இருக்கவியலும். இந்தக் கலையை பொதுமக்களுக்கு முன்னால் நிகழ்த்திக்காட்டி பிழைத்து வருகிறான். ஒரு காலத்தில் ஐரோப்பிய நகரங்கள் எங்கும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தக் கலை நாளடைவில் மக்களிடத்தே செல்வாக்கை இழக்க ஆரம்பிக்கிறது. முன்பு போல கூட்டம் வருவதில்லை. அதன் பொருட்டு அவன் சார்ந்திருக்கும் நிறுவனத்திலிருந்து விலகி சர்க்கஸ் ஒன்றில் தன்னை இணைத்துக் கொள்கிறான். அங்கு குதிரைகள் கட்டிப் போடும் இடத்திற்கு அருகே அவனுக்கு ஒரு கூண்டு ஒதுக்கப்படுகிறது. அங்கும் அவனுக்கு பெரிய கவனமில்லை. குதிரைகளைப் பார்க்க வருபவர்கள் ஒன்றிரண்டு பேர் வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போவார்கள். ஆனாலும் தொடர்ந்து அவன் தன் பட்டினிக் கலையை நிகழ்த்துகிறான். ஒரு கட்டத்தில் உணவே எடுத்துக் காட்டாமல் அந்தக் கூண்டில் அவன் அமர்ந்திருக்கும் வைக்கோலுடன் வைக்கோலாகப் பொதிந்து இறந்தும் போகிறான். பின்பு, அதே இடத்தில் ஒரு இளம் சிறுத்தையை விடுகிறார்கள். அங்கே மக்கள் கூட்டம் குவிகிறது. இப்படியாக முடிகிறது கதை.

அதிகம் கொண்டாடப்பட்ட காஃப்காவின் கதைகளுள் முக்கியமான கதை இது. இந்தக் கதை முழுவதும் ஒரு பார்வையாளனின் கோணத்தில், செய்தி அறிக்கையின் மொழியில் சொல்லபட்டிருக்கிறது. கதையில் பட்டினிக் கலைஞன் என்றே சொல்லப்பட்டிருந்தாலும், கிடைக்கப்பெற வேண்டிய உரிய கவனத்தைப் பெறாமல் வெதும்பும் அத்தனை கலைஞர்களின் கதையையுமே இது பேசுகிறது.

இந்தக் கதையை அசோகமித்திரன் எழுதிய 'புலிக் கலைஞனுடன்' பொருத்திப் பார்க்கலாம். இவன் பட்டினிக் கலைஞன். அவன் புலிக் கலைஞன். இருவரும் அவரவர் கலையில் விற்பன்னர்கள். இவன் தன் பட்டினிக் கலைக்கு போதிய வரவேற்பில்லாமல் சர்கஸ்ஸில் சேருகிறான். அவன் புலிவேசக் கலைக்கு மக்களிடம் வரவேற்பில்லாமல் சினிமாக் கம்பெனியில் வாய்ப்பு தேடி வருகிறான். இருவருமே தற்தம் கலையின் அழிவுக்கு ஒருவகையில் காரணமாக இருந்த மற்றொரு நிறுவனத்தினிடமே வந்து சேர்கிறார்கள். (காஃப்கா நிறுவன அமைப்புகளுக்கு எதிராகச் செயல்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது ) கடைசியில் அங்கும் தன்னைப் பொருத்திக் கொள்ளவியலாமல் ஒருவன் தொலைந்து போகிறான். மற்றொருவன் இறந்தே போகிறான். இந்தக் கதையில் அவன் இறந்ததும், அவனிடத்தில் வந்து அவனுக்கு கிடைக்காத அனைவரின் கவனத்தையும் தன்னிடத்தில் ஈர்க்கும் இளம் சிறுத்தை ஒரு முக்கியமான உருவகம். சினிமாவென்னும் மாபெரும் வெளிச்சத்தின் முன்பு கரைந்து போகும் புலிக்கலைஞன் போலவே இக்கதையில் வரும் சிறுத்தை அவனிருந்த சுவட்டைக் கூட முற்றிலும் அழித்துவிடுகிறது. ஒரு வேளை அசோகமித்திரன் இந்தக் கதைக்கு பட்டினிக் கலைஞன்தான் இன்ஸ்பிரேஸனாக இருந்திருக்குமோ? தெரியவில்லை. அப்படியே ஒரு வேளை இருந்திருந்தாலும் கூட அதனதன் அளவில் இரண்டு கதைகளுமே மிக மிக முக்கியமான கதைகள்.

தன்னுடைய கலைக்கு மக்களிடத்தே உரிய கவனமும் பாராட்டும் கிடைக்கவில்லை என்றாலும் அவன் அதில் தொடர்ந்து இயங்குகிறான். இந்த இடத்தில் பாரதியையும், புதுமைப்பித்தனையும் நினைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

கதை முழுவதும் தன் கலையின் மீது அவன் கொண்ட தீராப்பற்றினைப் பற்றியே கூறப்பட்டிருக்கும். நாற்பது நாட்களுக்கும் மேலாகக் கூட அவனால் பட்டினி கிடக்கவியலும். அவனுடைய கலையின் மீதான பசியின் வழியே தான் அவன்தன் உடலின் பசியை வெல்கிறான். இப்படியாக சொல்லிக் கொண்டே வந்து, கடைசியாக ஓர் இடத்தில் தனக்கு 'திருப்தியான உணவு' கிடைத்திருந்தால் தான் ஏன் இந்தப் பட்டினிக் கலையில் ஈடுபடப் போகிறேன் என்று கூறுவான். இந்த இடத்தில் சுரா தன் பேட்டியில் சொன்ன ஒரு வாக்கியம் நினைவுக்கு வருகிறது - "கலைஞன் ஓர் அதிருப்தியாளன்". ஆம், அவன் கொண்ட அதிருப்தியின் வெளிப்பாடே கலையாக பிரவாகமெடுக்கிறது. காஃப்காவிடம் எழுத்தாகவும், வான்காவிடம் ஓவியமாகவும்.

வாழ்வின் மீது திருப்தி கொண்ட ஒரு கலைஞன் கூட இருக்க முடியாது. அகம், புறம் என தான் எதிர் கொள்ளும் ஏதோ ஒரு வாழ்வியல் சிக்கலே எந்த ஒரு கலைஞனையும் தொடர்ந்து இயங்கச் செய்கிறது.

O

Comments

Popular posts from this blog

மிருகம்

    அதிகாலையில் வரும்  வாட்ஸப்   குறுஞ்செய்திகளின்   கீச்சிடல்கள்   எரிச்ச லை க் கிளப்பத்   தொடங்கியிருந்தன . அவை  எதைப்   பற்றியதாக  இருக்கும் என்று  லஸண்ட்ராவுக்குத்  தெரியும்.  அப்பார்ட்மண்ட்டின்   அசோஸியேஸன் குழுமத்திற் கென்றே   தனியாகப்  பிரித்து  எலி   சத்தமிடுவதைப்   போல க்   கீச்சிடு ம் ஒலியைத்  தேர்ந்தெடுத்து  வைத்திருந்தாள்.    காலை யி லேயே   அதைப்  பார் த்து அன்றைய  தினத்தைக்   கெடுத்துக்கொள்ள வேண்டாம்  என்று முடிவு  செய் தவளாக ,   படுக்கை யை  உதறி  எழுந்தாள் . வானம்  மேகமூட்டமாயிருந்தது .  இரவில்  வரைந்து வைத்திருந்த  அக்ரலிக்  ஓவியத்தைப் பார்த்தாள்.  கருப்பு ,  மஞ்சள் ,  சாம்பல்  வண்ணங்களில்   தீட்டப்பட்ட   அரூப உருவங்க ள் பின் இருக்க ,  முன்னே  மரத்தாலான   ஒரு  பழைய   நாற்காலியை வரைந்து வைத்திருந்தாள்.  அது  ஒருவிதமான ...

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம்

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம் -- குள்ளச்சித்திரன் சரித்திரம், வெளியேற்றம் நாவல்களை முன்வைத்து -- “சொல்லித் தீர்ந்துவிட்டன எல்லாக் கதைகளும். மறு கூறலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் புனைவு, சொல்லலின் நூதனத்தில் மட்டுமே  தன் உயிரை வைத்திருக்கிறது” – பகடையாட்டம் பின்னுரையில். இங்கே உள்ள கதைகள் அத்தனையும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன; புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை, சொல்லும் விதத்தில் மட்டுமே இனி புதிதாக ஏதேனும் ஒன்றைச் செய்ய முடியும் என்பதை யுவன் தீவிரமாக நம்புகிறார் என்பதை அவரின் புனைவுகளை தொடர்ந்து வாசிப்பதன் வழியே புரிந்துகொள்ள முடிகிறது. அப்படிப் புதிதாக தன் கதைகளைச் சொல்வதற்கான ஓர் உத்தியாக மாற்றுமெய்மையைக் கையாள்கிறார். அவரின் முதல் நாவலான குள்ளச்சித்திரன் சரித்திரமும், வெளியேற்றமும் அத்தளத்தில் எழுதப்பட்ட  அவரின் முக்கியமான படைப்புகள் எனலாம்.  எது மாற்றுமெய்மை? முதலில் எது மெய்மை? மெய்மை என்பதை எளிமையான புரிதலுக்காக யதார்த்தம் என்று கொள்வோம். பெளதீக ரீதியாக, அறிவியலின் தர்க்கத்திற்கு உட்பட்டு நிகழும் யாதொன்றையும் யதார்த்தம் அல்லது மெய...

இரு கோப்பைகள்

ஞா யிற்றுக் கிழமை இரவுகளுக்கு மட்டும் காற்றில் கனம் கூடிப் போய் விடுகிறது. இன்னதென்று பிரித்தறிய முடியாத மெல்லிய அழுத்தம் வந்து அமர்ந்து கொள்கிறது. அப்படியானதொரு இரவில் வழமைகளில் சிக்கிக் கொண்ட வாழ்வைப் பற்றி மெதுவாக மனதுக்குள் அசை போட்டுக் கொண்டே கட்டிலில் படுத்திருந்தேன்.  முதலில் அந்தச் சத்தம் பக்கத்து வீடுகளில் யாரோ மெதுவாக சுவரில் ஆணியடிப்பதைப் போன்று கேட்டது. அடுத்த முறை அந்தச் சத்தம் நொய்டாவின் தெருவோர தேநீர்க் கடைகளில் சூடான தேநீருக்கு இஞ்சியைத் தட்டிப் போடுவதற்காக தட்டுவதைப் போன்று 'தொப் தொப்'பென்று கேட்டது. ஆனால் ஞாயிற்றுக் கிழமை இரவு பதினோறு மணிக்கு இவை இரண்டுமே சாத்தியமில்லை. அதுவும் இரவு எட்டு மணிக்கெல்லாம் ஊரடங்கிப் போய்விடுகின்ற, பொதுப் பேருந்தில் பயணம் செய்யும் போது கூட அடுத்தவர்களுக்கு கேட்டுவிடாத கிசுகிசுக் குரலில் பேசும் மக்கள் வாழ்கின்ற சிட்னி போன்ற ஒரு பெரு நகரத்தில்  சுவர் ஆணிக்கோ, இரவுத் தேநீருக்கோ இந்நேரத்தில் வாய்ப்பு மிகவும் குறைவு.  "யாரோ கதவத் தட்டுற மாதிரியில்ல" என்று பக்கத்தில் படுத்திருந்த காவ்யா கேட்கும் போதுதான் அதை உணர்ந்தேன். எங்கள் ...