Skip to main content

அனோஜனின் பச்சை நரம்பு



எனது டொரினா தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் "தமிழ்ச் சிறுகதைகளில் உலவும் பதின்பருவ அக்காக்களைக் குறித்து எவரேனும் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளலாம்" என்று எழுதியிருப்பார். அப்படியான அக்காக்களின் கதைகள் இத்தொகுப்பிலும் இரண்டு உண்டு. 'இச்சை' கதையும் 'பச்சை நரம்பு'ம் பால்யகால அக்காக்களைப் பற்றிய கதைகளே.

'பச்சை நரம்பில்' அவள் செல்லமக்கா. கதையின் முடிவில் அம்மா கழுத்துப் பச்சை நரம்பு அக்காவிடம் தெரியுமிடம் வரை சரி, அது தீபாவிடமும் தெரிவதாக முடித்திருப்பது இக்கைதையை அளவுக்கதிகமாக ரொமாண்டிஸைஸ் செய்துவிடுகிறது.

இவரின் பெரும்பாலான கதைகள் பால்யத்தின் நினைவுச்சரட்டிலிருந்தே பின்னப்பட்டிருக்கின்றன. வெவ்வேறு சூழலில் பாலியல் ரீதியான தாக்குதலுக்குள்ளான சிறுவர்கள் இவரது கதைகளில் திரும்பத் திரும்ப வருகிறார்கள். 'இச்சை' கதையில் அந்த நண்பர்களுடன் நடக்கும் உரையாடலில் கதையின் சாரம் இருக்கிறது. ஆனால் அது கதையில் தீர்க்கமாக வெளிப்படவில்லை. சிறுவயதில் நடத்தப்பட்ட பாலியல் துஷ்பரயேகம் எத்தனை தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும்? மாறாக இங்கே வெறும் கிளர்ச்சியாக வெளிப்பட்டு ஒதுங்கி நிற்கிறது.

மன நிழலும், வலியும் அவர் முன்மொழியும் அரசியலைப் பேசும் கதைகள். இதில் மனநிழல் ஒரு முக்கியமான கதை. குற்ற உணர்ச்சியை மறைத்துத் தவித்துத் தழும்பும் இடங்கள் சிறப்பாக வந்திருக்கின்றன.

"வெளிதல்" - பரத்தையர் உலகம், தமிழில் அதிகம் புனையப்பட்ட கதைக்களம். ஜி.நாகராஜன் இதில் மாஸ்டர். இப்படியான ஒரு களத்தில், புதிதாக ஏதேனும் ஒன்று இக்கதையில் சொல்லப்பட்டிருக்கிறதா என்றால் பதில் ஏமாற்றமே. கதையின் முடிவு புனிதப்படுத்துமிடத்தில் மிகவும் சோகையாகிறது. வாசகன் இட்டு நிரப்ப வேண்டிய வெளியை ஆசிரியனே நிரப்பும் தவறு, இளம் எழுத்தாளர்கள் எல்லாருக்கும் பொதுவானது. அனோஜனுக்கும் இதில் விலக்கல்ல.

"நானூறு ரியால்" - கதை ஒரு குறும்படத்துக்கு இணையான வேகத்துடன் இருக்கிறது. மனிதர்களின் மீதான் நம்பிக்கையின்மையைப் பற்றி பேசுகிறது. இதில் என்னால் சில விசயங்களை ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை. எப்போதும் வெளி நாடுகளில் இருக்கும் காலங்களில் நம் நாட்டினர் மீது தனிப்பற்று வந்து ஒட்டிக் கொள்ளும். உனக்கு நான், எனக்கு நீ என்பது போன்ற சுயநலம் கலந்த பற்றுதான் என்றாலும். அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுத்துவிட மாட்டார்கள். சிட்னியில் இரண்டு வருடங்கள் இருந்தவன் என்ற முறையில் என்னால் இதை உறுதியாகவே சொல்ல முடியும். அப்படியிருக்க, நானூறு ரியால் என்பது வெறும் ஆறாயிரத்துச் சொச்சம் ரூபாய்களே! புனைவில் இத்தனை தர்க்கம் பார்க்கத் தேவையில்லை என்றாலும், ஏற்றுக் கொள்வது கடினமாக இருக்கிறது.

அனோஜனின் தனித்துவம் மிளிரும் கதைகளாக 'கிடாய்' கதையையும், 'வாசனை' கதையையும் சொல்வேன். இரண்டுமே அப்பா-மகள் உறவுச் சிக்கல்களை முற்றிலுமாக எதிரெதிர் துருவங்களில் இருந்து பேசும் கதைகள். வாசனை - அப்பாவின் பிம்பத்தையையும் வாசனையையும் வாழ்வில் எதிர்ப்படும் ஆண்களிடத்தே தேடும் பெண்ணொருத்தியைப் பற்றிய நுட்பமான கதை. அடங்காக் காமமும் அதன்பொருட்டு எழும் தன்னிறக்கமும் நிறையப் பெற்ற தகப்பன் ஒருவனின் நிலையை உளவியல் ரீதியாக முன்வைக்கு கதை - கிடாய்.

அனோஜனிடம் அட்டகாசமான மொழி இருக்கிறது. சொல்முறையிலும் நல்ல தேர்ச்சி தெரிகிறது. அவருக்கான தளத்தை அவர் தேடிக் கண்டடையும் போது தமிழின் தவிர்க்கவியலாத கதை சொல்லியாக நிற்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

O

Comments

Popular posts from this blog

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம்

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம் -- குள்ளச்சித்திரன் சரித்திரம், வெளியேற்றம் நாவல்களை முன்வைத்து -- “சொல்லித் தீர்ந்துவிட்டன எல்லாக் கதைகளும். மறு கூறலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் புனைவு, சொல்லலின் நூதனத்தில் மட்டுமே  தன் உயிரை வைத்திருக்கிறது” – பகடையாட்டம் பின்னுரையில். இங்கே உள்ள கதைகள் அத்தனையும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன; புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை, சொல்லும் விதத்தில் மட்டுமே இனி புதிதாக ஏதேனும் ஒன்றைச் செய்ய முடியும் என்பதை யுவன் தீவிரமாக நம்புகிறார் என்பதை அவரின் புனைவுகளை தொடர்ந்து வாசிப்பதன் வழியே புரிந்துகொள்ள முடிகிறது. அப்படிப் புதிதாக தன் கதைகளைச் சொல்வதற்கான ஓர் உத்தியாக மாற்றுமெய்மையைக் கையாள்கிறார். அவரின் முதல் நாவலான குள்ளச்சித்திரன் சரித்திரமும், வெளியேற்றமும் அத்தளத்தில் எழுதப்பட்ட  அவரின் முக்கியமான படைப்புகள் எனலாம்.  எது மாற்றுமெய்மை? முதலில் எது மெய்மை? மெய்மை என்பதை எளிமையான புரிதலுக்காக யதார்த்தம் என்று கொள்வோம். பெளதீக ரீதியாக, அறிவியலின் தர்க்கத்திற்கு உட்பட்டு நிகழும் யாதொன்றையும் யதார்த்தம் அல்லது மெய்மை என்று வரைய

ரயில் புழு

வெளியிலிருந்து, கட்டை மேல் சுத்தியலால் அடிக்க வரும் ‘டொப் டொப்’பென்ற சத்தம் கேட்டே எழுந்தேன். அலாரம் எழுப்ப இன்னும் அரை மணி நேரம் இருந்தது. கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றால் சத்தம் வருவது நிற்கவில்லை. பொங்கல் விடுமுறை முடிந்து அன்றுதான் அலுவலகம் திரும்ப வேண்டும். நான்கு நாட்கள் தொடர் விடுமுறை. வெளியில் எங்கும் செல்லவில்லை. சோபாவிலிருந்து படுக்கைதான் நான் இந்த நாட்களில் அதிகம் நடந்த தொலைவு. சுகமாய்ச் சோம்பிக் கிடந்தேன். நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் என்றே மூன்று நாட்களைக் கடத்திவிட்டேன். ஊருக்குப் போக முடியாது. இங்கே நண்பர்களைப் பார்த்தாலும் அவர்களுடைய கேள்வி என்னவாக இருக்கும் என்பதை அறிவேன். இன்றும்கூட அலுவலகம் போனதும் எல்லோரும் விசாரிப்பார்கள். பொய் சொல்ல வேண்டும். சலிப்பாக இருந்தது. மொபைலை எடுத்தேன். பார்ப்பதற்கு எதுவுமிருக்கவில்லை. பேஸ்புக், இன்ஸ்டா என அனைத்துச் சமூக ஊடகங்களிலிருந்து வெளியேறிவிட்டேன். படுக்கையிலிருந்து எழுந்து கையில் பிரஷை எடுப்பதற்கு என்னை நானே பிடித்துத் தள்ள வேண்டியதாக இருந்தது. முந்தைய நாள் இரவு வரவேற்பறையின் ஜன்னல்களைச் சாத்தாமலேயே உறங்கிப் போய்விட்டேன். சாப்பிட்டுவிட்ட

கேண்மை

  தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் கலை இலக்கிய மாத இதழ் ஒன்றுக்காக நேர்காணல் வேண்டுமென்று அழைத்திருந்தார்கள். அழைத்தவர் தமிழின் முக்கியமான கவி. பக்கத்து மாநிலம் ஒன்றில் வசிக்கிறார். நேர்காணலுக்காக மாநிலம் விட்டு மாநிலம் வரவேண்டும். சிரமப்பட வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் விடாப்பிடியாக வருவதாகக் கூறிவிட்டார். முந்தைய சந்திப்பில் அவர் குறிப்பிட்டுப் பேசிய புத்தகம் ஒன்றை அவருக்குப் பரிசாக அளிப்பதற்காகப் புத்தக அடுக்கில் தேடிக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் தடித் தடியான புத்தகங்களை எடுத்துத் தூக்கவும் அவற்றை இடம் மாற்றி வைப்பதுமே அயர்ச்சியாக இருக்கிறது. கவனமாகக் கையாள வேண்டியிருக்கிறது. மூப்பின் காரணமாக விரல்களில் வலுவில்லை. அப்போதுதான் புத்தக அலமாரியில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் படத்துக்குப் பின்னாலிருந்த அந்தக் கடிதம் கண்ணில் பட்டது.   அப்பாவின் ஸ்நேகிதரும் என்னுடைய பழைய முதலாளியுமான வரதராஜன் சாரிடமிருந்து வந்த கடிதம் அது. நேரடியாக என் பெயர் போட்டே வந்திருந்தது. அப்பாவுக்கும் அவருக்கும் ஒரே பூர்விகம். மாயவரம் பக்கத்தில் சிறு கிராமம். பால்யகால ஸ்நேகிதம். இருவரும் பிற்கால