Skip to main content

"காச்சர் கோச்சர்" - விவேக் ஷான்பாக் (காலச்சுவடு வெளியீடு, மொழிப்பெயர்ப்பு - கே. நல்லதம்பி)



முன்பு காலச்சுவடு இதழில், கன்னட எழுத்தாளர் விவேக் ஷான்பாக் எழுதி வெளியாகியிருந்த "நிர்வாணம்" சிறுகதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நல்லதொரு கதையை வாசிக்கும் போதே அதனை எழுதியவரின் பெயரும் தன்னாலே மனதில் வந்து விழுந்து விடுகிறது. அப்படியாக அவருடைய சிறுகதைகளைத் தேடிக் கொண்டிருந்த போது ஜெயமோகன் தளத்தில் அவரே மொழிப்பெயர்த்திருந்த விவேக்கின் சிறுகதைகள் சில வாசிக்கக் கிடைத்தன. இன்னும் கிடைக்கின்றன.

இதன் தொடர்ச்சியாகவே இந்தப் புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு வெளியீடாக விவேக் ஷான்பாக் எழுதிய "காச்சர் கோச்சர்" நாவலை வாங்கினேன். இதை மொழிப் பெயர்த்தவர் கே.நல்லதம்பி. எழுதப்பட்ட மொழியிலேயே வாசிப்பதைப் போன்ற உணர்வைத் தரும், சற்றும் தொய்வில்லாத கச்சிதமான மொழிப்பெயர்ப்பு.

பெங்களூருவைக் களமாக வைத்து எழுதப்பட்ட நாவல் என்று இதன் பின்னட்டைக் குறிப்பில் கன்னட எழுத்தாளர் கிரீஷ் கார்னட் எழுதியிருக்கிறார். ஆனால், நாவலில் பெங்களூரு என்று வரும் இடத்தில் எல்லாம் சென்னை என்றோ மதுரை என்றோ குறிப்படப்பட்டிருந்தாலும் சின்ன நெருடல் கூட ஏற்பட்டிருக்காது என்பதே உண்மை.

வறுமையின் விளிம்பில் உழலும் கீழ் மத்திய வர்க்கத்தையும், அவர்களின் மன நிலையையும், பின் அவர்கள் மெதுவாக உழைத்து முன்னேறி அடுத்த கட்டத்துக்கு நகரும் போது அவர்களிடம் ஏற்படும் லெளகீக மற்றும் மனோபாவ மாற்றங்களையும் "சுருக்"கென்ற அதிர்வைத் தரும் ஒரு முடிவுடன் அற்புதமாக எழுதியிருக்கிறார்.

இதில் ஓச்ர் இடத்தில், கதை சொல்லியின் அப்பா வேலையை இழந்துவிடுவார். வீடே அமைதியிலும் ஒருவித அழுத்தத்திலும் உறைந்து போயிருக்கும். பொதுவாக அதிகம் உரையாடாத அப்பா வேலை போன அன்று எதையாவது பேசுவது, தேவையற்ற கேள்விகளைக் கேட்பது என்று வலிந்து திணிக்கப்பட்ட உற்சாகத்துடன் இருப்பதாகக் காட்டிக் கொள்வார். மிகுந்த அழுத்தத்துக்கு உள்ளாகும் நேரங்களில் கலகலப்பாய் இருப்பவர்கள் அமைதியாவதைப் போல அமைதியானவர்கள் சமநிலை தவறிவிடுகிறார்கள். அது முன்னதைவிட இன்னும் கொடுமையானது.

இப்படியாக நாவல் நெடுக வரும் நுட்பமான சித்தரிப்புகளும், அதன் மூலம் விவேக் முன் வைக்க விரும்பும் அபத்தங்களுமே இந்நாவலை முக்கியமான இடத்திற்கு நகர்த்துகின்றன.
அளவில் மிகச்சிறிய நாவல். நூறே பக்கங்கள். ஒரே அமர்வில் வாசித்துவிடலாம். நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.




O

Comments

Popular posts from this blog

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம்

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம் -- குள்ளச்சித்திரன் சரித்திரம், வெளியேற்றம் நாவல்களை முன்வைத்து -- “சொல்லித் தீர்ந்துவிட்டன எல்லாக் கதைகளும். மறு கூறலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் புனைவு, சொல்லலின் நூதனத்தில் மட்டுமே  தன் உயிரை வைத்திருக்கிறது” – பகடையாட்டம் பின்னுரையில். இங்கே உள்ள கதைகள் அத்தனையும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன; புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை, சொல்லும் விதத்தில் மட்டுமே இனி புதிதாக ஏதேனும் ஒன்றைச் செய்ய முடியும் என்பதை யுவன் தீவிரமாக நம்புகிறார் என்பதை அவரின் புனைவுகளை தொடர்ந்து வாசிப்பதன் வழியே புரிந்துகொள்ள முடிகிறது. அப்படிப் புதிதாக தன் கதைகளைச் சொல்வதற்கான ஓர் உத்தியாக மாற்றுமெய்மையைக் கையாள்கிறார். அவரின் முதல் நாவலான குள்ளச்சித்திரன் சரித்திரமும், வெளியேற்றமும் அத்தளத்தில் எழுதப்பட்ட  அவரின் முக்கியமான படைப்புகள் எனலாம்.  எது மாற்றுமெய்மை? முதலில் எது மெய்மை? மெய்மை என்பதை எளிமையான புரிதலுக்காக யதார்த்தம் என்று கொள்வோம். பெளதீக ரீதியாக, அறிவியலின் தர்க்கத்திற்கு உட்பட்டு நிகழும் யாதொன்றையும் யதார்த்தம் அல்லது மெய்மை என்று வரைய

ரயில் புழு

வெளியிலிருந்து, கட்டை மேல் சுத்தியலால் அடிக்க வரும் ‘டொப் டொப்’பென்ற சத்தம் கேட்டே எழுந்தேன். அலாரம் எழுப்ப இன்னும் அரை மணி நேரம் இருந்தது. கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றால் சத்தம் வருவது நிற்கவில்லை. பொங்கல் விடுமுறை முடிந்து அன்றுதான் அலுவலகம் திரும்ப வேண்டும். நான்கு நாட்கள் தொடர் விடுமுறை. வெளியில் எங்கும் செல்லவில்லை. சோபாவிலிருந்து படுக்கைதான் நான் இந்த நாட்களில் அதிகம் நடந்த தொலைவு. சுகமாய்ச் சோம்பிக் கிடந்தேன். நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் என்றே மூன்று நாட்களைக் கடத்திவிட்டேன். ஊருக்குப் போக முடியாது. இங்கே நண்பர்களைப் பார்த்தாலும் அவர்களுடைய கேள்வி என்னவாக இருக்கும் என்பதை அறிவேன். இன்றும்கூட அலுவலகம் போனதும் எல்லோரும் விசாரிப்பார்கள். பொய் சொல்ல வேண்டும். சலிப்பாக இருந்தது. மொபைலை எடுத்தேன். பார்ப்பதற்கு எதுவுமிருக்கவில்லை. பேஸ்புக், இன்ஸ்டா என அனைத்துச் சமூக ஊடகங்களிலிருந்து வெளியேறிவிட்டேன். படுக்கையிலிருந்து எழுந்து கையில் பிரஷை எடுப்பதற்கு என்னை நானே பிடித்துத் தள்ள வேண்டியதாக இருந்தது. முந்தைய நாள் இரவு வரவேற்பறையின் ஜன்னல்களைச் சாத்தாமலேயே உறங்கிப் போய்விட்டேன். சாப்பிட்டுவிட்ட

கேண்மை

  தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் கலை இலக்கிய மாத இதழ் ஒன்றுக்காக நேர்காணல் வேண்டுமென்று அழைத்திருந்தார்கள். அழைத்தவர் தமிழின் முக்கியமான கவி. பக்கத்து மாநிலம் ஒன்றில் வசிக்கிறார். நேர்காணலுக்காக மாநிலம் விட்டு மாநிலம் வரவேண்டும். சிரமப்பட வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் விடாப்பிடியாக வருவதாகக் கூறிவிட்டார். முந்தைய சந்திப்பில் அவர் குறிப்பிட்டுப் பேசிய புத்தகம் ஒன்றை அவருக்குப் பரிசாக அளிப்பதற்காகப் புத்தக அடுக்கில் தேடிக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் தடித் தடியான புத்தகங்களை எடுத்துத் தூக்கவும் அவற்றை இடம் மாற்றி வைப்பதுமே அயர்ச்சியாக இருக்கிறது. கவனமாகக் கையாள வேண்டியிருக்கிறது. மூப்பின் காரணமாக விரல்களில் வலுவில்லை. அப்போதுதான் புத்தக அலமாரியில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் படத்துக்குப் பின்னாலிருந்த அந்தக் கடிதம் கண்ணில் பட்டது.   அப்பாவின் ஸ்நேகிதரும் என்னுடைய பழைய முதலாளியுமான வரதராஜன் சாரிடமிருந்து வந்த கடிதம் அது. நேரடியாக என் பெயர் போட்டே வந்திருந்தது. அப்பாவுக்கும் அவருக்கும் ஒரே பூர்விகம். மாயவரம் பக்கத்தில் சிறு கிராமம். பால்யகால ஸ்நேகிதம். இருவரும் பிற்கால