தபால் தலைகள் சேகரிப்பதைப் போல, விதவிதமான நாணயங்கள் சேகரிப்பதைப் போல, நான் எனக்க்குப் பிடித்த எழுத்தாளர்களின் நூலாக்கம் பெற்ற முதல் படைப்புகளை வாசித்துவிடுவது என்று வைத்திருக்கிறேன். குறிப்பாக சிறுகதைகளை இப்படிச் சேகரித்து, அவர்களின் சமீப கால எழுத்துக்களோடு ஒப்பிட்டு வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். உண்மையில் இதை ஒரு பயிற்சியாகவே செய்து வருகிறேன். இப்படி ஒப்பிட்டு வாசிக்கும் போது, முதல் தொகுதியிலிருந்து இன்றைய எழுத்து வரை அதே அடர்த்தியுடனும் வீரியத்துடனும் எழுதி வருபவர்கள், எங்கோ ஆரம்பித்து எப்படியோ வந்து நிற்பவர்கள், குறிப்பிடத்தக்க படைப்புகளை முதல் தொகுதியில் கொடுத்துவிட்டு கொஞ்சம் கொஞ்சம் தங்களை புடம் போட்டு முக்கியமான படைப்பாளிப்பாய் வளர்ந்து நிற்பவர்கள் என்று பல்வேறு தரிசனங்களை இத்தகைய வாசிப்பின் மூலம் கண்டடைய முடிகிறது.
இப்படியான வாசிப்பின் தொடர்ச்சியாக எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் 'பிறிதொரு நதிக்கரை' தொகுப்பை வாசிக்க எடுத்தேன். இப்போது வாசித்து முடித்து இதை எழுதும் போது மேலே சொன்ன கடைசி வகைமையில் இவரை வைக்கத் தோன்றுகிறது.
அடிப்படையில் கவிதையில் இருந்து உரைநடைக்கு வந்தவர் என்பதால் அதன் தாக்கம் முதல் தொகுப்பு கதைகளில் சற்று அதிகமாகவே தெரிகிறது. தற்போதைய கதைகளில் இப்படியான இறுக்கமான மொழியைக் கொஞ்சம் தளர்த்திக் கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. அற்புதமான மொழி நடை கொண்ட எழுத்து இவருடையது. "கோட்டை" போன்று வரலாற்று பின்னணியில் சொல்லப்பட்ட சிறுகதைக்கு இவரின் பிரத்யேகமான மொழி அழகாகப் பொருந்துகிறது. அதில் வரும் நிர்வாண ஓவியம் பற்றி வரும் ஒரு வரி - "அவளின் முகத்தில் அப்பியிருந்த சோகத்தின் இழைகள் அவளின் நிர்வாணத்தை மறைத்திருந்தன"
இவரது இந்த முதல் தொகுப்பு 2000 ஆம் வெளியாகியிருக்கிறது. இவற்றில் பெரும்பாலான கதைகள் எளிய மனிதர்களின் வாழ்வியல் சிக்கலைப் பேசுகின்றன. சமூக வாழ்வின் அபத்தத்தை எடுத்துரைக்கின்றன.
பொருள்வயின் பொருட்டு தற்தம் சொந்த மண்ணை விட்டு நகரங்களில் குடியேறியவர்களின் நினைவுகளில் ஊர் திரும்புதல் குறித்த ஏக்கம் நிறைவேறாத கனவாகவே அமிழ்ந்து போயிருக்கும். அக்கனவை நினைவாக்கும் வாழ்க்கை வெகு சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. அது சாத்தியப்படாதவர்கள் கிடைக்கிற இலுப்பைப்பூக்களில் திருப்தி அடைந்து கொள்ள வேண்டியதுதான். அப்படியான பெரும்பான்மைகளில் ஒருத்தியின் கதைதான் "இருப்பு".
எளிய மனிதர்களின் அன்றாட பாடுகளை ஒரு நெசவாளர் வாழ்க்கைப் பின்னணியில் கொண்டு அழகாக எழுதப்பட்ட கதை "லச்சம்". எதிரே சாவு வீட்டை வைத்துக் கொண்டு சுற்றி நடக்கும் எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் நடுவீட்டில் சீட்டு விளையாடும் அந்தக் கும்பல் அபத்தத்தின் உச்சம்.
சக உயிர்களின் மீதான பரிவு குறித்தும் ஆனாலும் தக்க சமயத்தில் அதை வெளிப்படுத்திக் கொள்ள முடியாத மனிதனின் இயலாமை குறித்தும் பேசும் "ஒற்றைச் சிறகு" சிறுகதை இத்தொகுப்பின் மிக முக்கியமான கதை என்று சொல்வேன். ஒரு கதைக்குத் தேவையான சூழலை ஒரு தேர்ந்த நெசவாளியின் லாவகத்துடன் இழையிழையாக பின்னி இணைக்கும் கலை முழுமையாக கைகூடப்பெற்ற கதையாக இதையே பார்க்கிறேன். இவர் தம் எழுத்து செல்ல வேண்டிய திசையை தீர்மானித்த கதையாக் இதுவே இருக்கக் கூடும் என்று இன்றைய கதைகளை வாசிக்கும் போது தோன்றுகிறது.
தனிமனித வாழ்விலும் அதன் பிரதிபலிப்பாக சமூகத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் மதிப்பீடுகளின் வீழ்ச்சியைப் பற்றியும், கால மாற்றங்களின் கேலிக் கூத்துகளை பற்றியும் பேசும் கதைகளாக "விடுதலை", "தேர்" ஆகிய கதைகளைக் கூறலாம். முன்னதில் கதையின் தலைப்பு முற்றிலும் வேறொரு பரிமாணத்தை அக்கதைக்கு கொண்டு வந்து சேர்க்கிறது. பின்னதில் தேரே பேசுவதாக கொண்ட உத்தி சுவாரஸ்யமாக இருக்கிறது. இவ்விரு கதைகளும் தாராளமய மாக்கலுக்கு பிந்திய கதைகள் என்பதுடன் இணைத்து வாசிக்கும் போது கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன.
அதே காலகட்டத்தில் இவருக்கு மாய எதார்த்தக் கதைகளின் மீது தனியொரு கவர்ச்சி இருந்ததை, "கோட்டை", "வலியின் நிறம்", "கையில் அடங்காத தாமரை" போன்ற கதைகளின் வழியே அறிய முடிகிறது. இதில் "கையில் அடங்காத தாமரை" கதை எனக்கு விமலாத்தித்த மாமல்லனின் "சிறுமி கொண்டு வந்த மலர்" சிறுகதையை நினைவு படுத்துகிறது.
எம்.கோ-வின் எழுத்து நடையிலும், எடுத்துக் கொள்ளும் கதைச் சூழல்களிலும் தற்போது எழுதி வரும் கதைகளில் முதல் தொகுப்பு கதைகளிலிருந்து நிறைய மாற்றங்களை உணர முடிகிறது. இத்தகைய மாற்றங்களும் புதியவற்றுக்கான தேடலும், போதாமைகளைப் போக்கிக் கொள்ளும் முனைப்புமே அவரை தமிழின் குறிப்பிடத் தகுந்த புனைவெழுத்தாளராக நிலை நிறுத்தியிருக்கிறது என்றே எண்ணுகிறேன்.
O
Comments
Post a Comment