Skip to main content

எம்.கோபாலகிருஷ்ணனின் 'பிறிதொரு நதிக்கரை'




பால் தலைகள் சேகரிப்பதைப் போல, விதவிதமான நாணயங்கள் சேகரிப்பதைப் போல, நான் எனக்க்குப் பிடித்த எழுத்தாளர்களின் நூலாக்கம் பெற்ற முதல் படைப்புகளை வாசித்துவிடுவது என்று வைத்திருக்கிறேன். குறிப்பாக சிறுகதைகளை இப்படிச் சேகரித்து, அவர்களின் சமீப கால எழுத்துக்களோடு ஒப்பிட்டு வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். உண்மையில் இதை ஒரு பயிற்சியாகவே செய்து வருகிறேன். இப்படி ஒப்பிட்டு வாசிக்கும் போது, முதல் தொகுதியிலிருந்து இன்றைய எழுத்து வரை அதே அடர்த்தியுடனும் வீரியத்துடனும் எழுதி வருபவர்கள், எங்கோ ஆரம்பித்து எப்படியோ வந்து நிற்பவர்கள், குறிப்பிடத்தக்க படைப்புகளை முதல் தொகுதியில் கொடுத்துவிட்டு கொஞ்சம் கொஞ்சம் தங்களை புடம் போட்டு முக்கியமான படைப்பாளிப்பாய் வளர்ந்து நிற்பவர்கள் என்று பல்வேறு தரிசனங்களை இத்தகைய வாசிப்பின் மூலம் கண்டடைய முடிகிறது.

இப்படியான வாசிப்பின் தொடர்ச்சியாக எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் 'பிறிதொரு நதிக்கரை' தொகுப்பை வாசிக்க எடுத்தேன். இப்போது வாசித்து முடித்து இதை எழுதும் போது மேலே சொன்ன கடைசி வகைமையில் இவரை வைக்கத் தோன்றுகிறது.

அடிப்படையில் கவிதையில் இருந்து உரைநடைக்கு வந்தவர் என்பதால் அதன் தாக்கம் முதல் தொகுப்பு கதைகளில் சற்று அதிகமாகவே தெரிகிறது. தற்போதைய கதைகளில் இப்படியான இறுக்கமான மொழியைக் கொஞ்சம் தளர்த்திக் கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. அற்புதமான மொழி நடை கொண்ட எழுத்து இவருடையது.  "கோட்டை" போன்று வரலாற்று பின்னணியில் சொல்லப்பட்ட சிறுகதைக்கு இவரின் பிரத்யேகமான மொழி அழகாகப் பொருந்துகிறது. அதில் வரும் நிர்வாண ஓவியம் பற்றி வரும் ஒரு வரி - "அவளின் முகத்தில் அப்பியிருந்த சோகத்தின் இழைகள் அவளின் நிர்வாணத்தை மறைத்திருந்தன"

இவரது இந்த முதல் தொகுப்பு 2000 ஆம் வெளியாகியிருக்கிறது. இவற்றில் பெரும்பாலான கதைகள் எளிய மனிதர்களின் வாழ்வியல் சிக்கலைப் பேசுகின்றன. சமூக வாழ்வின் அபத்தத்தை எடுத்துரைக்கின்றன.




பொருள்வயின் பொருட்டு தற்தம் சொந்த மண்ணை விட்டு நகரங்களில் குடியேறியவர்களின் நினைவுகளில் ஊர் திரும்புதல் குறித்த ஏக்கம் நிறைவேறாத கனவாகவே அமிழ்ந்து போயிருக்கும். அக்கனவை நினைவாக்கும் வாழ்க்கை வெகு சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. அது சாத்தியப்படாதவர்கள் கிடைக்கிற இலுப்பைப்பூக்களில் திருப்தி அடைந்து கொள்ள வேண்டியதுதான். அப்படியான பெரும்பான்மைகளில் ஒருத்தியின் கதைதான் "இருப்பு".

எளிய மனிதர்களின் அன்றாட பாடுகளை ஒரு நெசவாளர் வாழ்க்கைப் பின்னணியில் கொண்டு அழகாக எழுதப்பட்ட கதை "லச்சம்". எதிரே சாவு வீட்டை வைத்துக் கொண்டு சுற்றி நடக்கும் எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் நடுவீட்டில் சீட்டு விளையாடும் அந்தக் கும்பல் அபத்தத்தின் உச்சம்.

சக உயிர்களின் மீதான பரிவு குறித்தும் ஆனாலும் தக்க சமயத்தில் அதை வெளிப்படுத்திக் கொள்ள முடியாத மனிதனின் இயலாமை குறித்தும் பேசும் "ஒற்றைச் சிறகு" சிறுகதை இத்தொகுப்பின் மிக முக்கியமான கதை என்று சொல்வேன்.  ஒரு கதைக்குத் தேவையான சூழலை ஒரு தேர்ந்த நெசவாளியின் லாவகத்துடன் இழையிழையாக பின்னி இணைக்கும் கலை முழுமையாக கைகூடப்பெற்ற கதையாக இதையே பார்க்கிறேன். இவர் தம் எழுத்து செல்ல வேண்டிய திசையை தீர்மானித்த கதையாக் இதுவே இருக்கக் கூடும் என்று இன்றைய கதைகளை வாசிக்கும் போது தோன்றுகிறது.

தனிமனித வாழ்விலும் அதன் பிரதிபலிப்பாக சமூகத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் மதிப்பீடுகளின் வீழ்ச்சியைப் பற்றியும், கால மாற்றங்களின் கேலிக் கூத்துகளை பற்றியும் பேசும் கதைகளாக "விடுதலை", "தேர்" ஆகிய கதைகளைக் கூறலாம். முன்னதில் கதையின் தலைப்பு முற்றிலும் வேறொரு பரிமாணத்தை அக்கதைக்கு கொண்டு வந்து சேர்க்கிறது. பின்னதில் தேரே பேசுவதாக கொண்ட உத்தி சுவாரஸ்யமாக இருக்கிறது. இவ்விரு கதைகளும் தாராளமய மாக்கலுக்கு பிந்திய கதைகள் என்பதுடன் இணைத்து வாசிக்கும் போது கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன.

அதே காலகட்டத்தில் இவருக்கு மாய எதார்த்தக் கதைகளின் மீது தனியொரு கவர்ச்சி இருந்ததை, "கோட்டை", "வலியின் நிறம்", "கையில் அடங்காத தாமரை" போன்ற கதைகளின் வழியே அறிய முடிகிறது. இதில் "கையில் அடங்காத தாமரை" கதை எனக்கு விமலாத்தித்த மாமல்லனின் "சிறுமி கொண்டு வந்த மலர்" சிறுகதையை நினைவு படுத்துகிறது.

எம்.கோ-வின் எழுத்து நடையிலும், எடுத்துக் கொள்ளும் கதைச் சூழல்களிலும் தற்போது எழுதி வரும் கதைகளில் முதல் தொகுப்பு கதைகளிலிருந்து நிறைய மாற்றங்களை உணர முடிகிறது.  இத்தகைய மாற்றங்களும் புதியவற்றுக்கான தேடலும், போதாமைகளைப் போக்கிக் கொள்ளும் முனைப்புமே அவரை தமிழின் குறிப்பிடத் தகுந்த புனைவெழுத்தாளராக நிலை நிறுத்தியிருக்கிறது என்றே எண்ணுகிறேன்.


O

Comments

Popular posts from this blog

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம்

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம் -- குள்ளச்சித்திரன் சரித்திரம், வெளியேற்றம் நாவல்களை முன்வைத்து -- “சொல்லித் தீர்ந்துவிட்டன எல்லாக் கதைகளும். மறு கூறலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் புனைவு, சொல்லலின் நூதனத்தில் மட்டுமே  தன் உயிரை வைத்திருக்கிறது” – பகடையாட்டம் பின்னுரையில். இங்கே உள்ள கதைகள் அத்தனையும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன; புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை, சொல்லும் விதத்தில் மட்டுமே இனி புதிதாக ஏதேனும் ஒன்றைச் செய்ய முடியும் என்பதை யுவன் தீவிரமாக நம்புகிறார் என்பதை அவரின் புனைவுகளை தொடர்ந்து வாசிப்பதன் வழியே புரிந்துகொள்ள முடிகிறது. அப்படிப் புதிதாக தன் கதைகளைச் சொல்வதற்கான ஓர் உத்தியாக மாற்றுமெய்மையைக் கையாள்கிறார். அவரின் முதல் நாவலான குள்ளச்சித்திரன் சரித்திரமும், வெளியேற்றமும் அத்தளத்தில் எழுதப்பட்ட  அவரின் முக்கியமான படைப்புகள் எனலாம்.  எது மாற்றுமெய்மை? முதலில் எது மெய்மை? மெய்மை என்பதை எளிமையான புரிதலுக்காக யதார்த்தம் என்று கொள்வோம். பெளதீக ரீதியாக, அறிவியலின் தர்க்கத்திற்கு உட்பட்டு நிகழும் யாதொன்றையும் யதார்த்தம் அல்லது மெய்மை என்று வரைய

ரயில் புழு

வெளியிலிருந்து, கட்டை மேல் சுத்தியலால் அடிக்க வரும் ‘டொப் டொப்’பென்ற சத்தம் கேட்டே எழுந்தேன். அலாரம் எழுப்ப இன்னும் அரை மணி நேரம் இருந்தது. கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றால் சத்தம் வருவது நிற்கவில்லை. பொங்கல் விடுமுறை முடிந்து அன்றுதான் அலுவலகம் திரும்ப வேண்டும். நான்கு நாட்கள் தொடர் விடுமுறை. வெளியில் எங்கும் செல்லவில்லை. சோபாவிலிருந்து படுக்கைதான் நான் இந்த நாட்களில் அதிகம் நடந்த தொலைவு. சுகமாய்ச் சோம்பிக் கிடந்தேன். நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் என்றே மூன்று நாட்களைக் கடத்திவிட்டேன். ஊருக்குப் போக முடியாது. இங்கே நண்பர்களைப் பார்த்தாலும் அவர்களுடைய கேள்வி என்னவாக இருக்கும் என்பதை அறிவேன். இன்றும்கூட அலுவலகம் போனதும் எல்லோரும் விசாரிப்பார்கள். பொய் சொல்ல வேண்டும். சலிப்பாக இருந்தது. மொபைலை எடுத்தேன். பார்ப்பதற்கு எதுவுமிருக்கவில்லை. பேஸ்புக், இன்ஸ்டா என அனைத்துச் சமூக ஊடகங்களிலிருந்து வெளியேறிவிட்டேன். படுக்கையிலிருந்து எழுந்து கையில் பிரஷை எடுப்பதற்கு என்னை நானே பிடித்துத் தள்ள வேண்டியதாக இருந்தது. முந்தைய நாள் இரவு வரவேற்பறையின் ஜன்னல்களைச் சாத்தாமலேயே உறங்கிப் போய்விட்டேன். சாப்பிட்டுவிட்ட

கேண்மை

  தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் கலை இலக்கிய மாத இதழ் ஒன்றுக்காக நேர்காணல் வேண்டுமென்று அழைத்திருந்தார்கள். அழைத்தவர் தமிழின் முக்கியமான கவி. பக்கத்து மாநிலம் ஒன்றில் வசிக்கிறார். நேர்காணலுக்காக மாநிலம் விட்டு மாநிலம் வரவேண்டும். சிரமப்பட வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் விடாப்பிடியாக வருவதாகக் கூறிவிட்டார். முந்தைய சந்திப்பில் அவர் குறிப்பிட்டுப் பேசிய புத்தகம் ஒன்றை அவருக்குப் பரிசாக அளிப்பதற்காகப் புத்தக அடுக்கில் தேடிக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் தடித் தடியான புத்தகங்களை எடுத்துத் தூக்கவும் அவற்றை இடம் மாற்றி வைப்பதுமே அயர்ச்சியாக இருக்கிறது. கவனமாகக் கையாள வேண்டியிருக்கிறது. மூப்பின் காரணமாக விரல்களில் வலுவில்லை. அப்போதுதான் புத்தக அலமாரியில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் படத்துக்குப் பின்னாலிருந்த அந்தக் கடிதம் கண்ணில் பட்டது.   அப்பாவின் ஸ்நேகிதரும் என்னுடைய பழைய முதலாளியுமான வரதராஜன் சாரிடமிருந்து வந்த கடிதம் அது. நேரடியாக என் பெயர் போட்டே வந்திருந்தது. அப்பாவுக்கும் அவருக்கும் ஒரே பூர்விகம். மாயவரம் பக்கத்தில் சிறு கிராமம். பால்யகால ஸ்நேகிதம். இருவரும் பிற்கால