வரும் வார இறுதியில் நடைபெறவிருக்கும் 'விஷ்ணுபுரம் விருது' விழாவுக்குச் செல்வதன் நிமித்தம் சில படைப்புகளை வாசிக்க ஆரம்பித்தேன். இலக்கற்ற வாசிப்பைவிட இது போன்ற ஒப்புக்கொள்ளப்பட்ட அர்பணிப்புடன் கூடிய வாசிப்பு அதுவரை அறிந்திறாத பல புதிய திறப்புகளுக்கு காரணமாய் அமைந்துவிடுகிறது. இப்படியில்லையென்றால் சீ.முத்துசாமி, ஜெனியஸ் பரியத் போன்ற பெயர்களையெல்லாம் நான் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டேன் என்பதே உண்மை.
தமிழ் இலக்கியத்தில் கவிதை, நாவல் போன்ற வடிவங்களைக் காட்டிலும் சிறுகதைப்பரப்பில் மிகப் பெரிய அளவில் சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இப்போது புதிதாக எழுத வருபவர்களின் வரமும் சாபமும் அதுதான்.
இதுவரை சொல்லப்படாத கதைகளை அல்லது குறைந்தபட்சம் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்காத முறையில் எழுத வேண்டிய நிர்பந்தம் இன்றைக்கு எழுத வருபவர்களுக்கு இருக்கிறது. அந்த வகையில் இவ்விரண்டையும் பூர்த்தி செய்யும் சில கதைகளை உள்ளடக்கி வந்துள்ளது தூயனின் 'இருமுனை' தொகுப்பு (யாவரும் வெளியீடு).
இவரின் பெரும்பாலான சிறுகதைகள் மனித மனதின் நுட்பான அகச்சிக்கல்களை அலசுகின்றன. தொகுப்பின் தலைப்புக் கதையான 'இருமுனை' சிறுகதையே தூயனை ஒரு நல்ல சிறுகதையாளராக அடையாளப்படுத்துவதற்குண்டான அத்தனை அம்சங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. ஆங்காங்கே தலைகாட்டும் ஆசிரியனின் குரலை சற்று மட்டுப்படுத்தியிருந்தால் மிகச்சிறப்பான கதையாக என்றைக்கும் தூயனின் பெயர் சொல்லும் கதையாக நின்றிருக்கும்.
பால்ய கால நினைவுகளைக் கிளறும் 'மஞ்சள் நிற மீன்' மனதுக்கு நெருக்கமான படைப்பாக மிளிர்கிறது. 'பேராழத்தில்' என்ற சிறுகதையில் அவரின் மொழியும் புனைவும் இணைந்து ஒரு கச்சிதமான முடிவில் குவிந்து உச்சம் பெறுகிறது. ஆனால் இதை வாசிக்கும் போது நிறைய இடங்களில் ஜெயமோகன் நினைவுக்கு வருவதைத் தவிர்க்கவே முடியவில்லை. குறிப்பாக அவரின் 'ஆயிரங்கால் மண்டபம்' சிறுகதையை.
என்னளவில் இத்தொகுப்பின் உச்சம் என்று இதிலுள்ள 'ஒற்றைக்கை துலையன்' குறுநாவலையே சொல்வேன். நேர்த்தியான கதைசொல்லலின் வழியே கட்டற்ற புனைவுவெளியைத் திறக்கிறது இந்நாவல். அதிலும் குறிப்பாக 'அர்த்தநாரி' உள்ளே வரும் இடமும் அதற்குப்பின் உள்ள தர்க்கமும் அட்டகாசம்!
நாட்டார் கதைமரபில் 'ஒற்றைக்கை துலையன்', தொன்மத்தின் வேர் பற்றி 'பேராழத்தில்', மனோவியல் தளத்தில் 'இருமுனை', சமூகத்தின் உதிரி மனிதர்களை முன்வைத்து 'இன்னொருவன்', 'தலைப்பிரட்டைகள்' என்று வாசகனைச் சலிப்புறவிடாமல் தொகுப்பெங்கும் வேறுபாடுகள் காட்டியிருக்கிறார்.
தமிழ்ச்சிறுகதைப் பரப்பில் தூயன் தன் வரவை 'இருமுனை'யின் வழியே சற்று அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார்.
O
Comments
Post a Comment