Skip to main content

தூயனின் இருமுனை - ஒரு வாசிப்பனுபவம்


வரும் வார இறுதியில் நடைபெறவிருக்கும் 'விஷ்ணுபுரம் விருது' விழாவுக்குச் செல்வதன் நிமித்தம் சில படைப்புகளை வாசிக்க ஆரம்பித்தேன். இலக்கற்ற வாசிப்பைவிட இது போன்ற ஒப்புக்கொள்ளப்பட்ட அர்பணிப்புடன் கூடிய வாசிப்பு அதுவரை அறிந்திறாத பல புதிய திறப்புகளுக்கு காரணமாய் அமைந்துவிடுகிறது. இப்படியில்லையென்றால் சீ.முத்துசாமி, ஜெனியஸ் பரியத் போன்ற பெயர்களையெல்லாம் நான் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டேன் என்பதே உண்மை.

தமிழ் இலக்கியத்தில் கவிதை, நாவல் போன்ற வடிவங்களைக் காட்டிலும் சிறுகதைப்பரப்பில் மிகப் பெரிய அளவில் சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இப்போது புதிதாக எழுத வருபவர்களின் வரமும் சாபமும் அதுதான்.

இதுவரை சொல்லப்படாத கதைகளை அல்லது குறைந்தபட்சம் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்காத முறையில் எழுத வேண்டிய நிர்பந்தம் இன்றைக்கு எழுத வருபவர்களுக்கு இருக்கிறது. அந்த வகையில் இவ்விரண்டையும் பூர்த்தி செய்யும் சில கதைகளை உள்ளடக்கி வந்துள்ளது தூயனின் 'இருமுனை' தொகுப்பு (யாவரும் வெளியீடு).

இவரின் பெரும்பாலான சிறுகதைகள் மனித மனதின் நுட்பான அகச்சிக்கல்களை அலசுகின்றன.  தொகுப்பின் தலைப்புக் கதையான 'இருமுனை' சிறுகதையே தூயனை ஒரு நல்ல சிறுகதையாளராக அடையாளப்படுத்துவதற்குண்டான அத்தனை அம்சங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. ஆங்காங்கே தலைகாட்டும் ஆசிரியனின் குரலை சற்று மட்டுப்படுத்தியிருந்தால் மிகச்சிறப்பான கதையாக என்றைக்கும் தூயனின் பெயர் சொல்லும் கதையாக நின்றிருக்கும்.

பால்ய கால நினைவுகளைக் கிளறும் 'மஞ்சள் நிற மீன்' மனதுக்கு நெருக்கமான படைப்பாக மிளிர்கிறது. 'பேராழத்தில்' என்ற சிறுகதையில் அவரின் மொழியும் புனைவும் இணைந்து ஒரு கச்சிதமான முடிவில் குவிந்து உச்சம் பெறுகிறது. ஆனால் இதை வாசிக்கும் போது நிறைய இடங்களில் ஜெயமோகன் நினைவுக்கு வருவதைத் தவிர்க்கவே முடியவில்லை. குறிப்பாக அவரின் 'ஆயிரங்கால் மண்டபம்' சிறுகதையை.

என்னளவில் இத்தொகுப்பின் உச்சம் என்று இதிலுள்ள 'ஒற்றைக்கை துலையன்' குறுநாவலையே சொல்வேன்.  நேர்த்தியான கதைசொல்லலின் வழியே கட்டற்ற புனைவுவெளியைத் திறக்கிறது இந்நாவல்.  அதிலும் குறிப்பாக 'அர்த்தநாரி' உள்ளே வரும் இடமும் அதற்குப்பின் உள்ள தர்க்கமும் அட்டகாசம்!

நாட்டார் கதைமரபில் 'ஒற்றைக்கை துலையன்', தொன்மத்தின் வேர் பற்றி 'பேராழத்தில்', மனோவியல் தளத்தில் 'இருமுனை', சமூகத்தின் உதிரி மனிதர்களை முன்வைத்து 'இன்னொருவன்', 'தலைப்பிரட்டைகள்' என்று வாசகனைச் சலிப்புறவிடாமல் தொகுப்பெங்கும் வேறுபாடுகள் காட்டியிருக்கிறார்.

தமிழ்ச்சிறுகதைப் பரப்பில் தூயன் தன் வரவை 'இருமுனை'யின் வழியே சற்று அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார்.


O

Comments

Popular posts from this blog

மிருகம்

    அதிகாலையில் வரும்  வாட்ஸப்   குறுஞ்செய்திகளின்   கீச்சிடல்கள்   எரிச்ச லை க் கிளப்பத்   தொடங்கியிருந்தன . அவை  எதைப்   பற்றியதாக  இருக்கும் என்று  லஸண்ட்ராவுக்குத்  தெரியும்.  அப்பார்ட்மண்ட்டின்   அசோஸியேஸன் குழுமத்திற் கென்றே   தனியாகப்  பிரித்து  எலி   சத்தமிடுவதைப்   போல க்   கீச்சிடு ம் ஒலியைத்  தேர்ந்தெடுத்து  வைத்திருந்தாள்.    காலை யி லேயே   அதைப்  பார் த்து அன்றைய  தினத்தைக்   கெடுத்துக்கொள்ள வேண்டாம்  என்று முடிவு  செய் தவளாக ,   படுக்கை யை  உதறி  எழுந்தாள் . வானம்  மேகமூட்டமாயிருந்தது .  இரவில்  வரைந்து வைத்திருந்த  அக்ரலிக்  ஓவியத்தைப் பார்த்தாள்.  கருப்பு ,  மஞ்சள் ,  சாம்பல்  வண்ணங்களில்   தீட்டப்பட்ட   அரூப உருவங்க ள் பின் இருக்க ,  முன்னே  மரத்தாலான   ஒரு  பழைய   நாற்காலியை வரைந்து வைத்திருந்தாள்.  அது  ஒருவிதமான ...

திற - சாதத் ஹசன் மண்ட்டோ

அ ந்தச் சிறப்பு ரயில் அம்ரிஷ்டரிலிருந்து மதியம் இரண்டு மணிக்குப் புறப்பட்டு, எட்டு மணி நேர பயணத்திற்குப் பிறகு முகல்புராவை அடைந்தது. பயணிகளில் பலர் வழியிலேயே கொல்லப்பட்டனர். பலர் காயமுற்றனர். இன்னும் சிலர் தொலைந்து போயினர். மறுநாள் காலை சிராஜூதின் கண் விழித்து பார்த்த பொழுது, தான் அகதிகள் முகாமின் குளிர்ந்த தரையில் படுத்திருப்பதை உணர்ந்தார். அவரைச் சுற்றி, ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அடங்கிய ஒரு கூட்டம் குமுறிக் கொண்டிருந்தது. இதையெல்லாம் கண்டு பதற்றமடைந்த அவர் தூசு நிரம்பிய வானத்தை வெகு நேரமாக  வெறித்துக் கொண்டிருந்தார். அந்த முகாமெங்கும் ஒரே சத்தமாக இருந்தது. ஆனால் எதுவும் சிராஜூதினின் காதில் விழவில்லை. இவரைப் பார்த்த யாரும், ஏதோ ஆழ்ந்த துயரச் சிந்தனையில் இருக்கிறார் என்று யூகித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர் மனது வெறுமையாய் இருந்தது. சூரியன் கண்ணில் படும் வரையிலும் அவர் அந்த தூசு நிறைந்த வானத்தையே உற்று நோக்கியபடி இருந்தார். சூரியனின் வெப்பம் அவரின் ஒவ்வொரு நரம்பிலும் பாய்ந்தது. ஏதோ ஒரு துடிப்பில் எழுந்தார். அந்த துர்சம்பவக் காட்சி அவர் கண் முன்னே எழுந்தது - தீ...

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம்

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம் -- குள்ளச்சித்திரன் சரித்திரம், வெளியேற்றம் நாவல்களை முன்வைத்து -- “சொல்லித் தீர்ந்துவிட்டன எல்லாக் கதைகளும். மறு கூறலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் புனைவு, சொல்லலின் நூதனத்தில் மட்டுமே  தன் உயிரை வைத்திருக்கிறது” – பகடையாட்டம் பின்னுரையில். இங்கே உள்ள கதைகள் அத்தனையும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன; புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை, சொல்லும் விதத்தில் மட்டுமே இனி புதிதாக ஏதேனும் ஒன்றைச் செய்ய முடியும் என்பதை யுவன் தீவிரமாக நம்புகிறார் என்பதை அவரின் புனைவுகளை தொடர்ந்து வாசிப்பதன் வழியே புரிந்துகொள்ள முடிகிறது. அப்படிப் புதிதாக தன் கதைகளைச் சொல்வதற்கான ஓர் உத்தியாக மாற்றுமெய்மையைக் கையாள்கிறார். அவரின் முதல் நாவலான குள்ளச்சித்திரன் சரித்திரமும், வெளியேற்றமும் அத்தளத்தில் எழுதப்பட்ட  அவரின் முக்கியமான படைப்புகள் எனலாம்.  எது மாற்றுமெய்மை? முதலில் எது மெய்மை? மெய்மை என்பதை எளிமையான புரிதலுக்காக யதார்த்தம் என்று கொள்வோம். பெளதீக ரீதியாக, அறிவியலின் தர்க்கத்திற்கு உட்பட்டு நிகழும் யாதொன்றையும் யதார்த்தம் அல்லது மெய...