Skip to main content

தூயனின் இருமுனை - ஒரு வாசிப்பனுபவம்


வரும் வார இறுதியில் நடைபெறவிருக்கும் 'விஷ்ணுபுரம் விருது' விழாவுக்குச் செல்வதன் நிமித்தம் சில படைப்புகளை வாசிக்க ஆரம்பித்தேன். இலக்கற்ற வாசிப்பைவிட இது போன்ற ஒப்புக்கொள்ளப்பட்ட அர்பணிப்புடன் கூடிய வாசிப்பு அதுவரை அறிந்திறாத பல புதிய திறப்புகளுக்கு காரணமாய் அமைந்துவிடுகிறது. இப்படியில்லையென்றால் சீ.முத்துசாமி, ஜெனியஸ் பரியத் போன்ற பெயர்களையெல்லாம் நான் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டேன் என்பதே உண்மை.

தமிழ் இலக்கியத்தில் கவிதை, நாவல் போன்ற வடிவங்களைக் காட்டிலும் சிறுகதைப்பரப்பில் மிகப் பெரிய அளவில் சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இப்போது புதிதாக எழுத வருபவர்களின் வரமும் சாபமும் அதுதான்.

இதுவரை சொல்லப்படாத கதைகளை அல்லது குறைந்தபட்சம் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்காத முறையில் எழுத வேண்டிய நிர்பந்தம் இன்றைக்கு எழுத வருபவர்களுக்கு இருக்கிறது. அந்த வகையில் இவ்விரண்டையும் பூர்த்தி செய்யும் சில கதைகளை உள்ளடக்கி வந்துள்ளது தூயனின் 'இருமுனை' தொகுப்பு (யாவரும் வெளியீடு).

இவரின் பெரும்பாலான சிறுகதைகள் மனித மனதின் நுட்பான அகச்சிக்கல்களை அலசுகின்றன.  தொகுப்பின் தலைப்புக் கதையான 'இருமுனை' சிறுகதையே தூயனை ஒரு நல்ல சிறுகதையாளராக அடையாளப்படுத்துவதற்குண்டான அத்தனை அம்சங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. ஆங்காங்கே தலைகாட்டும் ஆசிரியனின் குரலை சற்று மட்டுப்படுத்தியிருந்தால் மிகச்சிறப்பான கதையாக என்றைக்கும் தூயனின் பெயர் சொல்லும் கதையாக நின்றிருக்கும்.

பால்ய கால நினைவுகளைக் கிளறும் 'மஞ்சள் நிற மீன்' மனதுக்கு நெருக்கமான படைப்பாக மிளிர்கிறது. 'பேராழத்தில்' என்ற சிறுகதையில் அவரின் மொழியும் புனைவும் இணைந்து ஒரு கச்சிதமான முடிவில் குவிந்து உச்சம் பெறுகிறது. ஆனால் இதை வாசிக்கும் போது நிறைய இடங்களில் ஜெயமோகன் நினைவுக்கு வருவதைத் தவிர்க்கவே முடியவில்லை. குறிப்பாக அவரின் 'ஆயிரங்கால் மண்டபம்' சிறுகதையை.

என்னளவில் இத்தொகுப்பின் உச்சம் என்று இதிலுள்ள 'ஒற்றைக்கை துலையன்' குறுநாவலையே சொல்வேன்.  நேர்த்தியான கதைசொல்லலின் வழியே கட்டற்ற புனைவுவெளியைத் திறக்கிறது இந்நாவல்.  அதிலும் குறிப்பாக 'அர்த்தநாரி' உள்ளே வரும் இடமும் அதற்குப்பின் உள்ள தர்க்கமும் அட்டகாசம்!

நாட்டார் கதைமரபில் 'ஒற்றைக்கை துலையன்', தொன்மத்தின் வேர் பற்றி 'பேராழத்தில்', மனோவியல் தளத்தில் 'இருமுனை', சமூகத்தின் உதிரி மனிதர்களை முன்வைத்து 'இன்னொருவன்', 'தலைப்பிரட்டைகள்' என்று வாசகனைச் சலிப்புறவிடாமல் தொகுப்பெங்கும் வேறுபாடுகள் காட்டியிருக்கிறார்.

தமிழ்ச்சிறுகதைப் பரப்பில் தூயன் தன் வரவை 'இருமுனை'யின் வழியே சற்று அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார்.


O

Comments

Popular posts from this blog

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம்

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம் -- குள்ளச்சித்திரன் சரித்திரம், வெளியேற்றம் நாவல்களை முன்வைத்து -- “சொல்லித் தீர்ந்துவிட்டன எல்லாக் கதைகளும். மறு கூறலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் புனைவு, சொல்லலின் நூதனத்தில் மட்டுமே  தன் உயிரை வைத்திருக்கிறது” – பகடையாட்டம் பின்னுரையில். இங்கே உள்ள கதைகள் அத்தனையும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன; புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை, சொல்லும் விதத்தில் மட்டுமே இனி புதிதாக ஏதேனும் ஒன்றைச் செய்ய முடியும் என்பதை யுவன் தீவிரமாக நம்புகிறார் என்பதை அவரின் புனைவுகளை தொடர்ந்து வாசிப்பதன் வழியே புரிந்துகொள்ள முடிகிறது. அப்படிப் புதிதாக தன் கதைகளைச் சொல்வதற்கான ஓர் உத்தியாக மாற்றுமெய்மையைக் கையாள்கிறார். அவரின் முதல் நாவலான குள்ளச்சித்திரன் சரித்திரமும், வெளியேற்றமும் அத்தளத்தில் எழுதப்பட்ட  அவரின் முக்கியமான படைப்புகள் எனலாம்.  எது மாற்றுமெய்மை? முதலில் எது மெய்மை? மெய்மை என்பதை எளிமையான புரிதலுக்காக யதார்த்தம் என்று கொள்வோம். பெளதீக ரீதியாக, அறிவியலின் தர்க்கத்திற்கு உட்பட்டு நிகழும் யாதொன்றையும் யதார்த்தம் அல்லது மெய்மை என்று வரைய

இரு கோப்பைகள்

ஞா யிற்றுக் கிழமை இரவுகளுக்கு மட்டும் காற்றில் கனம் கூடிப் போய் விடுகிறது. இன்னதென்று பிரித்தறிய முடியாத மெல்லிய அழுத்தம் வந்து அமர்ந்து கொள்கிறது. அப்படியானதொரு இரவில் வழமைகளில் சிக்கிக் கொண்ட வாழ்வைப் பற்றி மெதுவாக மனதுக்குள் அசை போட்டுக் கொண்டே கட்டிலில் படுத்திருந்தேன்.  முதலில் அந்தச் சத்தம் பக்கத்து வீடுகளில் யாரோ மெதுவாக சுவரில் ஆணியடிப்பதைப் போன்று கேட்டது. அடுத்த முறை அந்தச் சத்தம் நொய்டாவின் தெருவோர தேநீர்க் கடைகளில் சூடான தேநீருக்கு இஞ்சியைத் தட்டிப் போடுவதற்காக தட்டுவதைப் போன்று 'தொப் தொப்'பென்று கேட்டது. ஆனால் ஞாயிற்றுக் கிழமை இரவு பதினோறு மணிக்கு இவை இரண்டுமே சாத்தியமில்லை. அதுவும் இரவு எட்டு மணிக்கெல்லாம் ஊரடங்கிப் போய்விடுகின்ற, பொதுப் பேருந்தில் பயணம் செய்யும் போது கூட அடுத்தவர்களுக்கு கேட்டுவிடாத கிசுகிசுக் குரலில் பேசும் மக்கள் வாழ்கின்ற சிட்னி போன்ற ஒரு பெரு நகரத்தில்  சுவர் ஆணிக்கோ, இரவுத் தேநீருக்கோ இந்நேரத்தில் வாய்ப்பு மிகவும் குறைவு.  "யாரோ கதவத் தட்டுற மாதிரியில்ல" என்று பக்கத்தில் படுத்திருந்த காவ்யா கேட்கும் போதுதான் அதை உணர்ந்தேன். எங்கள்

ரயில் புழு

வெளியிலிருந்து, கட்டை மேல் சுத்தியலால் அடிக்க வரும் ‘டொப் டொப்’பென்ற சத்தம் கேட்டே எழுந்தேன். அலாரம் எழுப்ப இன்னும் அரை மணி நேரம் இருந்தது. கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றால் சத்தம் வருவது நிற்கவில்லை. பொங்கல் விடுமுறை முடிந்து அன்றுதான் அலுவலகம் திரும்ப வேண்டும். நான்கு நாட்கள் தொடர் விடுமுறை. வெளியில் எங்கும் செல்லவில்லை. சோபாவிலிருந்து படுக்கைதான் நான் இந்த நாட்களில் அதிகம் நடந்த தொலைவு. சுகமாய்ச் சோம்பிக் கிடந்தேன். நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் என்றே மூன்று நாட்களைக் கடத்திவிட்டேன். ஊருக்குப் போக முடியாது. இங்கே நண்பர்களைப் பார்த்தாலும் அவர்களுடைய கேள்வி என்னவாக இருக்கும் என்பதை அறிவேன். இன்றும்கூட அலுவலகம் போனதும் எல்லோரும் விசாரிப்பார்கள். பொய் சொல்ல வேண்டும். சலிப்பாக இருந்தது. மொபைலை எடுத்தேன். பார்ப்பதற்கு எதுவுமிருக்கவில்லை. பேஸ்புக், இன்ஸ்டா என அனைத்துச் சமூக ஊடகங்களிலிருந்து வெளியேறிவிட்டேன். படுக்கையிலிருந்து எழுந்து கையில் பிரஷை எடுப்பதற்கு என்னை நானே பிடித்துத் தள்ள வேண்டியதாக இருந்தது. முந்தைய நாள் இரவு வரவேற்பறையின் ஜன்னல்களைச் சாத்தாமலேயே உறங்கிப் போய்விட்டேன். சாப்பிட்டுவிட்ட