Skip to main content

யானை பிழைத்த வேல்




மிழ்ச் சிறுகதை நூறாண்டு காலத்தைக் கடந்துவிட்டது. ஏற்றமும் தாழ்வும் உச்சமும் சரிவுமென பல அலைகளுக்கிடையே தன்னைத் தொடர்ந்து நிலைநிறுத்தியுள்ளது. உள்ளுர் தரம், உலகத் தரம் என்று எந்த அளவுகோலுக்கும் ஈடுகொடுக்கக்கூடிய திடமான கதைகள் தொடர்ந்து எழுதப்பட்டு வருகின்றன.

மணிக்கொடி காலம் தொடங்கி இன்றைய இணைய இதழ்கள் வரையிலான நீண்ட இடையறாத தொடர் ஓட்டத்தில் ஒரு தலைமுறை தன் அடுத்த தலைமுறைக்கு சிறுகதையை கைமாற்றித் தந்தபடியேதான் உள்ளது. இன்று புதிய எழுத்தாளன் ஒருவனால் எழுதப்படும் புதிய சிறுகதைக்குள் அன்றைய மூத்த முன்னோடி எழுத்தாளனின் சாயலும் குணமும் துளியளவேனும் எஞ்சியே நிற்கிறது. உடலும் பாணியும் மொழியும் காலத்துக்கேற்ப மாறிக் கொண்டிருப்பினும் உள்ளடக்க அளவில் சிறுகதை பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகவில்லை.

நீதிபோதனைகள் ஒழுக்கவாதம் யதார்த்தவாதம் தனிமனிதவாதம் நவீனத்துவம் பின் நவீனத்துவம் மாய யதார்த்தம், மீபுனைவு என்று பல்வேறு தேற்றங்கள் சிறுகதை வடிவத்தின்மேல் பொருத்தப்பட்டன.. இவ்வாறான பரிசோதனைகளும் கோட்பாடுகளும் வாசிப்பின் பல்வேறு தரப்புகளே அன்றி எழுதுவதற்கான அடிப்படைகள் அல்ல என்பதை சிறுகதை வெகு அடக்கத்துடன் மொழிந்து நிற்கிறது. காலந்தோறும் முளைத்தெழுந்த தற்காலிக வசீகரங்கள் நிறம் மங்கி தளர்ந்த பின்பும் முன்னோடிகளின் கிளாசிக் கதைகள் தொடர்ந்து வாசிக்கப்பட்டு கொண்டாடப்படுகின்றன. புதிய எழுத்தாளர்களுக்கு சவால் விடுத்து நிற்கின்றன. ஏற்கெனவே சொல்லப்பட்டிருக்கும் பெரும் தொகையிலிருந்து விலகி புதிய ஒன்றை உருவாக்கவும் அவற்றின் மேன்மைகளிலிருந்து தனித்து புதிய சிறப்பொன்றை கண்டடையவும் புதிய சிறுகதையாளன் பெரும் உழைப்பைச் செலுத்த வேண்டியுள்ளது. அதற்கான வாசிப்புப் பின்புலமும் புனைவுத் திறனும் மிக்கவர்களே தனக்கு முன் நிற்கும் பிரமாண்டமான புனைவுலகத்தோடு முட்டி மோதி பொருதிப் பார்க்கத் துணிய முடியும். அத்தகைய முயற்சியில் அவன் மோசமாக தோல்வியுறலாம். கேலி செய்யப்படலாம். ஆனாலும் அவன் முயற்சித்துத் தோற்றவன். யானை பிழைத்த வேல் ஏந்தியவன்.

தமிழ்ச் சிறுகதை இன்று வேண்டி நிற்பது அத்தகைய யானை பிழைத்த வேல் ஏந்தியவர்களையே!

0
கார்த்திக் பாலசுப்ரமணியம் 2011ம் ஆண்டிலிருந்து கதைகள் எழுதுகிறார். இணைய இதழ்களில் பிரசுரம் பெற்றுள்ளன.

புதிய சிறுகதையாளன் பொதுவாக முயற்சிக்கும் கதைகளிலிருந்தே அவரும் தொடங்கியிருக்கிறார். இறுதியில் எதிர்பாராத ஒரு திருப்பத்தை அல்லது அதிர்ச்சியைத் தரும் சிறுகதை இலக்கணத்துக்கேற்ப வெகு கச்சிதமாக எழுதப்பட்டிருக்கும் கதை ‘ஒரு காதல் மூன்று கடிதங்கள்.’ இலக்கண சுத்தம் கொண்ட இக்கதை திருத்தமான சொல்முறையால் இறுதித் திருப்பம் பெரும் அழுத்தம் பெற்றுள்ளது.

டொரினோ, யயகிரகணம் இரண்டும் பால்யம் அல்லது இளமை சார்ந்த நினைவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை.. பெரும் எண்ணிக்கையிலான இவ்வாறான சிறுகதைகளுக்கு நடுவில் நம்மை கவனிக்கச் செய்வது இவற்றின் விநோதமான தலைப்புகளே..
டொரினோ ஏற்கெனவே தமிழ்ச் சிறுகதைகளில் திரும்பத் திரும்ப எழுதப்பட்ட  கதையே. அறிந்தும் அறியாத பருவத்தின்போது வயதில் மூத்த பெண்கள் அவர்களது இயல்பின் காரணமாக நமக்குள் உருவாக்கும் சித்திரத்துக்கு நேர்மாறாக காலத்தின் சுழலில் அவர்கள் சென்றடையும் எதிர்பாராதபொரு இடம் நம்மை சமன்குலையச் செய்வதாகும் அறியத் துடிக்கும் முனைப்பும் வசீகரமும் மிகுந்த நாட்கள் நினைவில் எழும்போதே அன்றைய மனிதர்களின் இன்றைய இருப்பும் மேலெழும்போது நாம் உணரும் சங்கடத்தை இக்கதை முன்னிறுத்துகிறது. தமிழ்ச் சிறுகதைகளில் உலவும் பதின்பருவ அக்காக்களைக் குறித்து எவரேனும் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளலாம். அந்த அக்காக்களின் வரிசையில் இன்னுமொரு கதையாக அமைந்துள்ளது டொரினோ.

யயகிரகணம் என்கிற தலைப்பில் உள்ள நவீனமும் கதைநெடுக அது உணர்த்தும் மன இறுக்கமும் கதையைத் தனித்துவப்படுத்தியுள்ளது . நவீன இலக்கியம் சார்ந்த பெயர்களும் சொல்லாடல்களும் கதையின் மையத்துக்கு உதவுவதாயில்லை என்பதை கவனித்திருப்பின் அவற்றை எளிதாகத் தவிர்த்து இதே கதையை வேறு தளத்துக்கு சுலபமாக நகர்த்தியிருக்க முடியும். 

பழகிவந்த சிறுகதைத் தடத்தில் இதுவரையிலும் நடந்திருந்த கார்த்திக் தனது துறை சார்ந்த கிளை பாதையில் அடியெடுக்க முனைந்திருப்பது முக்கியமானது. ‘பார்வை’, ‘லிண்டா தாமஸ்’, ‘பொதுப்புத்தி’ ஆகிய மூன்று கதைகளின் வழியாக தமிழ்ச் சிறுகதை முன்பறியாத புதியதொரு களத்தின்  அறிமுகத்தை தர முயன்றிருக்கிறார்.

கடந்த 15 ஆண்டுகளாக தமிழக இளைஞர்களையும் பெற்றோர்களையும் சமூகத்தையும் ஒரு நோய்க்கூறாக பீடித்திருக்கும் தகவல் தொழில் நுட்பத் துறை என்கிற மாய உலகைப் பற்றிய வாய்வழிக் கதைகள் ஏராளம். அவற்றுள் கட்டுக் கதைகளும் கணிசமான சதவீதம் உண்டு. இளைஞர்களிடையே இத்துறை செலுத்தியிருக்கும் ஆதிக்கமும் பாதிப்பும் அளப்பரியவை. நம் இன்றைய சமூகத்தின் பல்வேறு மதிப்பீடுகளை வெகு சுலபமாக இத்துறை அசைத்துப் பார்த்திருக்கிறது. ஆட்டம் காணச் செய்துள்ளது. குறிப்பாக பெண்களிடம் இந்தத் துறை செலுத்தியுள்ள பாதிப்ப சமூக நோக்கிலும் மன நல நோக்கிலும் ஆராயப்பட வேண்டிய ஒன்று. சமீப ஆண்டுகளில் இத்துறை ஏற்படுத்திவரும் நிச்சயமற்ற தன்மையும் பெருத்த அச்சத்தையும் மனஅழுத்தங்களையும் விதைத்துள்ளது.

இந்தத் துறை சார்ந்த இலக்கியங்கள் நமக்கு இதுவரை காட்டியுள்ள பக்கங்கள் பலவும் கட்டற்ற காமத்தையும் போதையையும் களியாட்டத்தையுமே..  அப்படி இல்லையா என்று கேட்டால் அப்படி மட்டுமே இல்லை என்றுதான் பதில் சொல்கிறார்கள். வேறென்ன? என்ற கேள்விக்கு கார்த்திக் போன்ற துறை சார்ந்த இளைஞர்கள் தங்கள் கதைகளின் வழியாகவே பதில் சொல்ல முடியும்.

இளைஞர்களிடமும் பெண்களிடமும் துறை சார்ந்த மன அழுத்தங்களை உறவுச் சிக்கல்களை சொல்ல வேண்டியுள்ளது.. இத்துறைச் சார்ந்தவர்களைப் பற்றிய பொதுவான மனப்பதிவு எத்தகையது என்பதையும் சமூகப் பார்வை எத்தனை ஒருதலைபட்சமானது என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இத்துறை சார்ந்தவர்களுக்கே அதிகமும் உள்ளது. கணநேரம் கண்சிமிட்டி உதிரும் எரிநட்சத்திர வாழ்வின் மன அழுத்தம், நாற்பது வயதில் ஓய்வு பெற வேண்டிய அவசரம் தருகிற பதற்றம், குழந்தைப் பேறின்மை தொடங்கி பல்வேறு உடல் உபாதைகள், ஒழுங்கற்ற இணைவாழ்வு என எல்லையற்ற குழப்பங்களும் சிக்கல்களும் கணிசமானவை. வெளியுலகம் முழுக்க அறியாதவை. அல்லது அக்கறை கொள்ளதாவை. இத்துறையின் புழங்குமொழியும் குறியீட்டுச் சொற்களும் புதிய திணைக் கோட்பாடொன்றை உருவாக்குமளவுக்கு வலுவானவை. அனுபவங்களையும் சொல்லாடல்களையும் கொண்டிருப்பவை.
வழிப்போக்கன், விசுவாகம் இரு கதைகளும் மன உலகின் விநோதங்களை அதன் அறியமுடியா ஆழங்களை வெகு இயல்பாக சித்தரிப்பவை. பல சமயங்களில் இத்தகைய நிகழ்வுகள் நம் பலருக்கும் அனுபவமாகும் என்பதால் இவை நமக்கு நெருக்கமான கதைகளாக அமைகின்றன. ஊடகங்களும் சினிமாக்களும் பொதுப் புத்தியில் வடக்கத்தியர்களைக் குறித்து உருவாக்கும் சித்திரத்தை உடைப்பதற்கு இது போன்ற கதைகள் அவசியமாகின்றன.

இதுவரையிலும் சொல்லப்பட்ட எட்டு கதைகளைத் தாண்டி கார்த்திக்கை நம்பிக்கை மிகுந்த சிறுகதையாளராக அடையாளப்படுத்துபவை ‘முடிச்சுகள்’, ‘இரு கோப்பைகள்’ ஆகிய இரு கதைகளே!

முடிச்சுகள் கதையின் தொடக்கம், நகர்வு, முடிவு ஆகிய மூன்றுமே கச்சிதாக உருவாகி நேர்த்தியுடன் அமைந்துள்ளன. தன் தந்தையைப் பற்றிய புதிரான சித்திரத்தை முடிச்சுகளின் வழியாகக் கடந்து வரும் கதை அமைப்பு கச்சிதமாக வார்க்கப்பட்டுள்ளது. இறுதியில் அவன் அடையும் முழுமை இதுவரையிலும் அவிழ்த்த முடிச்சுகளையும்விட மேலும் சிக்கலான முடிச்சாகி அவன் எதிரில் நிற்பது கதையின் மறு தொடக்கமாகிறது.  எல்லா அறிதல்களின் இறுதியிலும் எஞ்சி நிற்பது மற்றுமொரு அறியாமையே என்பதை அழுத்தமாகச் சொல்கிறது. அசலுக்கும் பிறர் உருவாக்கும் பிம்பத்துக்கும் நடுவிலான இடைவெளியில் உண்மை எங்கிருக்கிறது என்பதைக் காண்பது அத்தனை சுலபமில்லை.

தொகுப்பின் உச்சமாகி நிற்கும் கதை இருகோப்பைகள். எழுதித் தேர்ந்த கையின் லாவகமும் செறிவும் மொழி அமைதியும் ஒருங்கே அமைந்த சிறப்பான கதை. கதையின் நிகழிடமும் மாந்தர்களும் நமக்கு அன்னியமானர்களாய் இருப்பினும் இக்கதைத் தொட்டுணர்த்தும் மையம் உலகளாவிய அனைவருக்கும் பொதுவானது என்பதால் இக்கதை பிற கதைகளிலிருந்து சிறப்பான கவனிப்பைப் பெறும் இடத்தை அடைந்துள்ளது. மனிதர்கள் தொடர்ந்து தங்களுக்குள் அன்னியமாவதும் குடும்பங்கள் உடைபடுவதும் சிறுத்துப் போவதும் முதியவர்கள் மேலும் மேலும் தனிமைப்படுத்தப்படுவதும்  இயல்பாகிப்போன இன்றைய காலகட்டத்தில் இக்கதை உணர்ந்தும் வெறுமை அசாதாரணமானது. அந்திமக் காலத்தில் துணையற்றுப் போகும் ஆண்களின் மனச்சுமையை ஒரு துன்பியல் நாடகத்தின் காட்சிகளாக்கிக் காட்டியுள்ளது ‘இரு கோப்பைகள்’.


0

தொடர்ந்து எழுத முனையும்போது கார்த்திக் யோசிக்க வேண்டிய இரண்டு விஷயங்களைக் குறிப்பிட வேண்டும். ஒன்று, ‘பொதுப்புத்தி’, ‘பார்வை’ போன்ற பொதுப் பெயர்கள் கதைகளுக்குத் தலைப்பாக்குவது. தலைப்பு கதையைத் தாங்கிப் பிடிக்காவிட்டாலும் கீழே விழ வைப்பதாக இருக்கக்கூடாது. இவ்வாறான தலைப்புகள்  நமக்குள் உருவாக்கும் பல்வேறு அனுமானங்கள் கதைகளை வாசிக்கவிடாமல் விலக்கி நிறுத்தும் தன்மைகொண்டவை.. இரண்டாவது, தமிழ் சிறுபத்திரிகைகளில் அதிகமும் புழங்கிய சொற்களுக்கு கதைகளில் இடம் தராமல் பார்த்துக் கொள்வது. உதாரணமாக ‘நிழல் தேடும் ஆண்மை’ என்ற தலைப்பைக் குறிப்பிடலாம்.
வாசிப்பின் பலமும் அனுபவங்களை கதையாக்கத் தேர்ந்தெடுக்கும் நுட்பமும் வாய்க்கப் பெற்ற கார்த்திக் தன் வருகையை இத்தொகுப்பின் மூலம் உரக்கவே அறிவித்திருக்கிறார்.

நிச்சயம் இது யானை பிழைத்த வேல்களில் ஒன்றாகவே இருக்கலாம். அது முக்கியமல்ல. எய்வதற்கான துணிவும் அதற்கான ஆயத்தங்களுமே நல்ல சிறுகதையாளர்களை உருவாக்கும். கார்த்திக் பாலசுப்ரமணியத்தின் இக்கதைகள் அவ்வாறான நம்பிக்கையைத் தருகின்றன.


- எம்.கோபாலகிருஷ்ணன் (டொரினா முன்னுரை)


O

Comments

Popular posts from this blog

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம்

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம் -- குள்ளச்சித்திரன் சரித்திரம், வெளியேற்றம் நாவல்களை முன்வைத்து -- “சொல்லித் தீர்ந்துவிட்டன எல்லாக் கதைகளும். மறு கூறலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் புனைவு, சொல்லலின் நூதனத்தில் மட்டுமே  தன் உயிரை வைத்திருக்கிறது” – பகடையாட்டம் பின்னுரையில். இங்கே உள்ள கதைகள் அத்தனையும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன; புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை, சொல்லும் விதத்தில் மட்டுமே இனி புதிதாக ஏதேனும் ஒன்றைச் செய்ய முடியும் என்பதை யுவன் தீவிரமாக நம்புகிறார் என்பதை அவரின் புனைவுகளை தொடர்ந்து வாசிப்பதன் வழியே புரிந்துகொள்ள முடிகிறது. அப்படிப் புதிதாக தன் கதைகளைச் சொல்வதற்கான ஓர் உத்தியாக மாற்றுமெய்மையைக் கையாள்கிறார். அவரின் முதல் நாவலான குள்ளச்சித்திரன் சரித்திரமும், வெளியேற்றமும் அத்தளத்தில் எழுதப்பட்ட  அவரின் முக்கியமான படைப்புகள் எனலாம்.  எது மாற்றுமெய்மை? முதலில் எது மெய்மை? மெய்மை என்பதை எளிமையான புரிதலுக்காக யதார்த்தம் என்று கொள்வோம். பெளதீக ரீதியாக, அறிவியலின் தர்க்கத்திற்கு உட்பட்டு நிகழும் யாதொன்றையும் யதார்த்தம் அல்லது மெய்மை என்று வரைய

ரயில் புழு

வெளியிலிருந்து, கட்டை மேல் சுத்தியலால் அடிக்க வரும் ‘டொப் டொப்’பென்ற சத்தம் கேட்டே எழுந்தேன். அலாரம் எழுப்ப இன்னும் அரை மணி நேரம் இருந்தது. கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றால் சத்தம் வருவது நிற்கவில்லை. பொங்கல் விடுமுறை முடிந்து அன்றுதான் அலுவலகம் திரும்ப வேண்டும். நான்கு நாட்கள் தொடர் விடுமுறை. வெளியில் எங்கும் செல்லவில்லை. சோபாவிலிருந்து படுக்கைதான் நான் இந்த நாட்களில் அதிகம் நடந்த தொலைவு. சுகமாய்ச் சோம்பிக் கிடந்தேன். நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் என்றே மூன்று நாட்களைக் கடத்திவிட்டேன். ஊருக்குப் போக முடியாது. இங்கே நண்பர்களைப் பார்த்தாலும் அவர்களுடைய கேள்வி என்னவாக இருக்கும் என்பதை அறிவேன். இன்றும்கூட அலுவலகம் போனதும் எல்லோரும் விசாரிப்பார்கள். பொய் சொல்ல வேண்டும். சலிப்பாக இருந்தது. மொபைலை எடுத்தேன். பார்ப்பதற்கு எதுவுமிருக்கவில்லை. பேஸ்புக், இன்ஸ்டா என அனைத்துச் சமூக ஊடகங்களிலிருந்து வெளியேறிவிட்டேன். படுக்கையிலிருந்து எழுந்து கையில் பிரஷை எடுப்பதற்கு என்னை நானே பிடித்துத் தள்ள வேண்டியதாக இருந்தது. முந்தைய நாள் இரவு வரவேற்பறையின் ஜன்னல்களைச் சாத்தாமலேயே உறங்கிப் போய்விட்டேன். சாப்பிட்டுவிட்ட

கேண்மை

  தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் கலை இலக்கிய மாத இதழ் ஒன்றுக்காக நேர்காணல் வேண்டுமென்று அழைத்திருந்தார்கள். அழைத்தவர் தமிழின் முக்கியமான கவி. பக்கத்து மாநிலம் ஒன்றில் வசிக்கிறார். நேர்காணலுக்காக மாநிலம் விட்டு மாநிலம் வரவேண்டும். சிரமப்பட வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் விடாப்பிடியாக வருவதாகக் கூறிவிட்டார். முந்தைய சந்திப்பில் அவர் குறிப்பிட்டுப் பேசிய புத்தகம் ஒன்றை அவருக்குப் பரிசாக அளிப்பதற்காகப் புத்தக அடுக்கில் தேடிக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் தடித் தடியான புத்தகங்களை எடுத்துத் தூக்கவும் அவற்றை இடம் மாற்றி வைப்பதுமே அயர்ச்சியாக இருக்கிறது. கவனமாகக் கையாள வேண்டியிருக்கிறது. மூப்பின் காரணமாக விரல்களில் வலுவில்லை. அப்போதுதான் புத்தக அலமாரியில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் படத்துக்குப் பின்னாலிருந்த அந்தக் கடிதம் கண்ணில் பட்டது.   அப்பாவின் ஸ்நேகிதரும் என்னுடைய பழைய முதலாளியுமான வரதராஜன் சாரிடமிருந்து வந்த கடிதம் அது. நேரடியாக என் பெயர் போட்டே வந்திருந்தது. அப்பாவுக்கும் அவருக்கும் ஒரே பூர்விகம். மாயவரம் பக்கத்தில் சிறு கிராமம். பால்யகால ஸ்நேகிதம். இருவரும் பிற்கால