Skip to main content

பதினான்காவது அறை - ஹிட்ச்காக் தொகுத்த மர்மக் கதைகள் (தமிழில் யூமா வாசுகி)



பெரும்பாலானோர் மர்மக் கதைகளை துப்பறியும் கதைகளோடு குழப்பிக் கொள்கிறார்கள். மர்மக் கதைகளில் அவை ஒரு வகை மட்டுமே. மனோதத்துவ பின்புலத்தில் எழுதப்பட்ட மர்மக் கதைகள் எனக்கு எப்போதும் உவப்பானவை. அவை மனித மனங்களின் இருண்மைப் பக்கங்களைப் பேசுவதன் மூலம் முக்கியத்துவம் பெருகின்றன. 

தமிழில் மர்மக் கதைகளுக்கான இடம் என்ன? இங்கு, அவை பெரும்பாலும் ஆரம்ப கட்ட வாசகனுக்கான நுழைவு வாயிலாகவே இருக்கின்றன. இன்றைய தேர்ந்த படிப்பாளிகள் பலரும் அங்கிருந்துதான் தனது வாசிப்பைத் தொடங்கியிருப்பார்கள்.

தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் எத்தனை பேர் மர்மங்களின் அழகியலை முன் வைத்து கதைகள் எழுதியிருக்கிறார்கள் என்று யோசித்தால் அவர்களையும், அவர்கள் எழுதிய கதைகளையும் விரல்விட்டு எண்ணிவிட முடியும் என்பதுதான் உண்மை. என்னால் உடனடியாக புதுமைப் பித்தன், சுஜாதா மற்றும் ஜெயமோகன் (உலோகம்) போன்றவர்களைத்தான் நினைவுக்குக் கொண்டு வர முடிகிறது. சுஜாதா எழுதிய மர்மக் கதைகளின் தொகுப்பு ஒன்றினை உயிர்மை வெளியிட்டு இருப்பதாக ஞாபகம். 

புதுமைப் பித்தனின் "காஞ்சனை" இந்த வகையில் மிக முக்கியமான கதை.  அவரது மற்ற மர்மக் கதைகள் கொலைகாரன் கை (மாபஸானின் கதை ஒன்றைத் தழுவி எழுதப்பட்டது), டாக்டர் சம்பத், குற்றவாளி யார், ஒரு கொலை அனுபவம் போன்றவையெல்லம் என்னளவில் சுமாரான கதைகளே; பெரிதும் பேசப்படாதக் கதைகளும் கூட. 

இத்தொகுப்பில், மர்மத் திரைப்படங்களின் மன்னனான ஹிட்ச்காக் தொகுத்த அறுபதுக்கும் மேற்பட்ட மர்மக் கதைகளிலில் இருந்து ஏழு கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து தமிழாக்கியிருக்கிறார்கள். அவரை பற்றிப் பேசுவதற்கு இந்தச் சின்னக் கட்டுரையில் இடம் போதாது. அன்னாரைப் பற்றித் அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு சைக்கோ, வெர்டிகோ, தி பர்ட்ஸ், ரியர் விண்டோ (சமீபத்தில் வெளியாகி அதிகம் பேசப்பட்ட மணிகண்டனின் 'குற்றமே தண்டனை' படம் கூட இதன் பாதிப்பில் எடுக்கப்பட்டதே) போன்ற அவரது திரைப்படங்களையே பரிந்துரைக்கிறேன். 

மர்மக் கதைகளின் ஆதாரமே அவற்றின் எதிர்பாராத திருப்பங்களில்தாம் பொதிந்திருக்கிறது. அப்படியொரு அற்புதமான திருப்பத்தைக் கொண்டமைந்த சிறுகதை 'கறுப்புத் தொப்பி'. மேம்போக்கான கதைசொல்லலில் இப்படியான திருப்பங்கள் சாத்தியமில்லை. ஏனென்றால், கதைக்குள் நுழையாத வாசகன் எப்போதும் விழிப்புடனே இருக்கிறான். அதன் காரணமாக அவனுக்கு எதிர் வரும் திருப்பங்களை யூகிப்பது எளிதாகி விடுகிறது. எனவே நல்ல திருப்பு முனை கொண்ட கதைகளுக்கு வாசகனைத் தன்னுள் கரைத்துக்குள்ளும் வித்தை அவசியம். அப்படியானதொரு சிறுகதை தான் 'கறுப்புத் தொப்பி'.

ஒரு நல்ல மர்மக் கதையில் அதன் முடிவைப் பற்றிய குறிப்புகள் கதை நெடுகிலும் கொடுக்கப் பட்டிருக்கும் (இதே உத்தியை மர்மத் திரைப்படங்களிலும் காணலாம்). கதையின் முடிப்பு, அந்த குறிப்புக் கண்ணிகளை இணைக்கும் விதமாய் அமைக்கப்பட்டிருக்கும். அது வலிந்து திணிக்கப்படாமல் இயல்பாக அமைவதுதான் அந்தக் கதையை உயிர்ப்புடன் வைக்கிறது. அந்த வகையில் முக்கியமான ஒரு கதை, இத்தொகுப்பில் இருக்கும் "விலங்குப் பயிற்சியாளர்".

 நல்ல த்ரில்லர் குறும்படம் எடுக்க விரும்பும் நண்பர்கள் இந்தப் புத்தகத்தின் தலைப்புக் கதையாக இருக்கும் 'பதினான்காவது அறை' சிறுகதையை பரிசீலிக்கலாம். சரியான 'மேக்கிங்' அமைந்தால் மிகச் சிறப்பான குறும்படமாக வருவதற்கான எல்லா அம்சங்களும் அந்தச் சிறுகதையில் பொதிந்துள்ளன. ஏற்கனவே இதில் இடம்பெற்றுள்ள, ராபர்ட் கோல்வி எழுதிய "மரண மணி" என்னும் சிறுகதை, "குற்றமே தண்டனை" என்னும் படமாக இயற்றப்பட்டு படம் பெரிதும் பேசவும் பட்டது. அதனால் தானோ என்னவோ அந்தப் படத்தின் டைட்டில் கார்டில் கதை, திரைக்கதைக்கு யார் பெயரையும் போடவில்லை. 

இந்தத் தொகுப்பில் எனக்கு மிகப் பிடித்த கதையாக ' நேரடி சாட்சி' சிறுகதையைக் கூறுவேன். சமீபத்தில் அராத்துவின் நூல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய ஜெயமோகன் ( நன்றி : ஷ்ருதி டிவி நண்பர்கள்), அறம் எனப்படுவதற்கு முற்றிலும் எதிர் நிலையில் நின்று எழுதப்படுகிற எழுத்துக்களைப் பற்றிக் குறிப்பிட்டார். இந்தக் கதை, அந்த வகையைச் சாரும். இந்தக் கதையை வாசித்து முடித்ததும், திரும்ப இந்தத் தொகுப்பை எடுப்பதற்கு எனக்கு மூன்று நாட்கள் தேவைப்பட்டன. 

விமலாதித்த மாமல்லன் "தி இந்து"-வில் எழுதிய 'புனைவு என்னும் புதிர்' பத்தியில் இப்படி எழுதியிருப்பார் -  "எழுத்தாளனால் அவன் காணாத உலகத்தின் பாத்திரமாய் எப்படி ஆக முடிகிறதோ அதே போல, தேர்ந்த வாசகன் அவனுக்குக் காட்டப்படும் உலகை, அதுவரை பார்த்திராத போதிலும் சட்டெனப் பிடித்துக்கொள்கிறான்."

இத்தொகுப்பிலுள்ள கதைகளை வெறும் மர்மக் கதைகள் என்பதைத் தாண்டி, கொஞ்சம் கூடுதலாக மெனக்கெட்டு அதன் நுட்பங்களை உணர முட்படும் வாசகனுக்கு மிகச் சிறந்த வாசிப்பனுபவம் காத்திருக்கிறது. யூமா வாசுகி, தனது இடரலற்ற செம்மையான மொழிப்பெயர்ப்பின் மூலம் அதைச் சாத்தியமாக்கியிருக்கிறார். 

தமிழிலும், இவை போன்று மனதின் ஆழங்களைப் பேசும் மர்மக் கதைகளை யாராவது தேடித் தொகுத்தால் சிறப்பாக இருக்கும். 


O

Comments

Popular posts from this blog

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம்

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம் -- குள்ளச்சித்திரன் சரித்திரம், வெளியேற்றம் நாவல்களை முன்வைத்து -- “சொல்லித் தீர்ந்துவிட்டன எல்லாக் கதைகளும். மறு கூறலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் புனைவு, சொல்லலின் நூதனத்தில் மட்டுமே  தன் உயிரை வைத்திருக்கிறது” – பகடையாட்டம் பின்னுரையில். இங்கே உள்ள கதைகள் அத்தனையும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன; புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை, சொல்லும் விதத்தில் மட்டுமே இனி புதிதாக ஏதேனும் ஒன்றைச் செய்ய முடியும் என்பதை யுவன் தீவிரமாக நம்புகிறார் என்பதை அவரின் புனைவுகளை தொடர்ந்து வாசிப்பதன் வழியே புரிந்துகொள்ள முடிகிறது. அப்படிப் புதிதாக தன் கதைகளைச் சொல்வதற்கான ஓர் உத்தியாக மாற்றுமெய்மையைக் கையாள்கிறார். அவரின் முதல் நாவலான குள்ளச்சித்திரன் சரித்திரமும், வெளியேற்றமும் அத்தளத்தில் எழுதப்பட்ட  அவரின் முக்கியமான படைப்புகள் எனலாம்.  எது மாற்றுமெய்மை? முதலில் எது மெய்மை? மெய்மை என்பதை எளிமையான புரிதலுக்காக யதார்த்தம் என்று கொள்வோம். பெளதீக ரீதியாக, அறிவியலின் தர்க்கத்திற்கு உட்பட்டு நிகழும் யாதொன்றையும் யதார்த்தம் அல்லது மெய்மை என்று வரைய

ரயில் புழு

வெளியிலிருந்து, கட்டை மேல் சுத்தியலால் அடிக்க வரும் ‘டொப் டொப்’பென்ற சத்தம் கேட்டே எழுந்தேன். அலாரம் எழுப்ப இன்னும் அரை மணி நேரம் இருந்தது. கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றால் சத்தம் வருவது நிற்கவில்லை. பொங்கல் விடுமுறை முடிந்து அன்றுதான் அலுவலகம் திரும்ப வேண்டும். நான்கு நாட்கள் தொடர் விடுமுறை. வெளியில் எங்கும் செல்லவில்லை. சோபாவிலிருந்து படுக்கைதான் நான் இந்த நாட்களில் அதிகம் நடந்த தொலைவு. சுகமாய்ச் சோம்பிக் கிடந்தேன். நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் என்றே மூன்று நாட்களைக் கடத்திவிட்டேன். ஊருக்குப் போக முடியாது. இங்கே நண்பர்களைப் பார்த்தாலும் அவர்களுடைய கேள்வி என்னவாக இருக்கும் என்பதை அறிவேன். இன்றும்கூட அலுவலகம் போனதும் எல்லோரும் விசாரிப்பார்கள். பொய் சொல்ல வேண்டும். சலிப்பாக இருந்தது. மொபைலை எடுத்தேன். பார்ப்பதற்கு எதுவுமிருக்கவில்லை. பேஸ்புக், இன்ஸ்டா என அனைத்துச் சமூக ஊடகங்களிலிருந்து வெளியேறிவிட்டேன். படுக்கையிலிருந்து எழுந்து கையில் பிரஷை எடுப்பதற்கு என்னை நானே பிடித்துத் தள்ள வேண்டியதாக இருந்தது. முந்தைய நாள் இரவு வரவேற்பறையின் ஜன்னல்களைச் சாத்தாமலேயே உறங்கிப் போய்விட்டேன். சாப்பிட்டுவிட்ட

கேண்மை

  தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் கலை இலக்கிய மாத இதழ் ஒன்றுக்காக நேர்காணல் வேண்டுமென்று அழைத்திருந்தார்கள். அழைத்தவர் தமிழின் முக்கியமான கவி. பக்கத்து மாநிலம் ஒன்றில் வசிக்கிறார். நேர்காணலுக்காக மாநிலம் விட்டு மாநிலம் வரவேண்டும். சிரமப்பட வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் விடாப்பிடியாக வருவதாகக் கூறிவிட்டார். முந்தைய சந்திப்பில் அவர் குறிப்பிட்டுப் பேசிய புத்தகம் ஒன்றை அவருக்குப் பரிசாக அளிப்பதற்காகப் புத்தக அடுக்கில் தேடிக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் தடித் தடியான புத்தகங்களை எடுத்துத் தூக்கவும் அவற்றை இடம் மாற்றி வைப்பதுமே அயர்ச்சியாக இருக்கிறது. கவனமாகக் கையாள வேண்டியிருக்கிறது. மூப்பின் காரணமாக விரல்களில் வலுவில்லை. அப்போதுதான் புத்தக அலமாரியில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் படத்துக்குப் பின்னாலிருந்த அந்தக் கடிதம் கண்ணில் பட்டது.   அப்பாவின் ஸ்நேகிதரும் என்னுடைய பழைய முதலாளியுமான வரதராஜன் சாரிடமிருந்து வந்த கடிதம் அது. நேரடியாக என் பெயர் போட்டே வந்திருந்தது. அப்பாவுக்கும் அவருக்கும் ஒரே பூர்விகம். மாயவரம் பக்கத்தில் சிறு கிராமம். பால்யகால ஸ்நேகிதம். இருவரும் பிற்கால