Skip to main content

இரத்தம் விற்பவனின் சரித்திரம் - யூ ஹூவா (தமிழில் யூமா வாசுகி)




மெரிக்க, ஐரோப்பிய நாடுகளையும், அவர்களின் கலாச்சாரம், பண்பாடு, அன்றாட வாழ்க்கை முறைகளையும் பற்றி நாம் அறிந்த அளவுக்கு, சீனாவைப் பற்றி அறிந்ததில்லை. சீனா ஒரு இரும்புத்திரை கொண்ட நாடு. இப்போது நிலைமை கொஞ்சம் பரவாயில்லை என்றே நினைக்கிறேன். பன்னாட்டு வியாபாரத் தொடர்புகள் நிமித்தமாக சீனா தன் திரையைக் கொஞ்சம் விலக்கிக் கொண்டிருக்கிறது.  மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஏதொன்றையும் திறந்து பார்க்க விழையும் இயல்பான ஆர்வமே சீனாவைப் பற்றிய புத்தகங்களைப் பார்க்கும் போதும் எழுகிறது.

பல்லவி ஐயர் எழுதிய 'சீனா விலகும் திரை' புத்தகம், ஒரு இந்திய எழுத்தாளரின் பார்வையில், உலகமயமாக்கலுக்குப் பிந்தைய சீனாவைப் பற்றி பேசும் நூல். ஆனால், இது சீன எழுத்தாளரால், உலகமயமாக்கலுக்கு முந்தைய சீனாவின் உட்பகுதியின் வரலாற்றை ஒரு தனிமனித வரலாற்றுடன் இணைத்து எழுதப்பட்டிருக்கும் நாவல்.

இந்நாவல், சீனாவில் வாழும் ஒரு சாதாரணனின் போராட்டமிக்க வாழ்வைச் சித்தரிக்கிறது. அதன் வழியே, சீனாவின் அரசும், அரசின் அமைப்புகளும் தனிமனித வாழ்வில் ஏற்படுத்தும் நேரடியான மற்றும் மறைமுக பாதிப்புகளையும் பேசுகிறது.

பெரும் இலக்கியங்களிலில் இருந்து சமூக நாவல்கள் வரை பெரும்பாலான நாவல்கள் பெண் ஒருத்தியை மையப் படுத்தியே நகரும். ஆனால் இந்த நாவல் 'ஸூ ஸன்க்வான்' என்ற ஆணை மையப் படுத்தி நகர்கிறது. சீனாவின் உட்பகுதி ஒன்றில் நடக்கும் கதை. அங்கு, மனித இரத்ததிற்கு மிகப் பெரிய தேவை இருக்கிறது. இரண்டு கிண்ண இரத்ததின் மதிப்பு, கிட்டத்தட்ட ஆறுமாத அறுவடையில் கிடைக்கும் தொகையைவிட அதிகம். ஆனால், இப்படி இரத்தம் விற்பது அங்கு மிகவும் இழிவான செயலாகக் கருதப்படுகிறது. "நீ வியர்வையை விற்கலாம். அது உன்னுடையது. ஆனால், இரத்தம் உன்னுடைய மூதாதையர்கள் உனக்குக் கொடுத்த கொடை" என்பது அவர்களின் நம்பிக்கை.

ஆனால், கதை நாயகன் பல்வேறு சமயங்களில்  வேறு வழியேயின்றி இரத்தம் விற்க நேர்கிறது. ஒரு முறை பஞ்ச காலத்தில் தன் குடும்பத்துக்குக் கிடைக்கூடிய ஒரு வேளை நல்ல உணவுக்காக, தன் வளர்ப்பு மகனின் (அவனுடைய மனைவியின் மகன்) பொருட்டு எழும் சிக்கலைத் தீர்ப்பதற்காக, தான் ஆசை கொண்ட பெண்ணுக்காக, தன் மகனின் இடமாற்றத்துக்காக, அதே வளர்ப்பு மகனின் உயிரைக் காப்பதற்காக என்று பல்வேறு சமயங்களில் இரத்தம் விற்றுக் கொண்டே இருக்கிறான். கடைசியாக, அவனுக்காக விற்கச் செல்லும் பொழுது, மூப்பின் காரணமாக அவனுடைய இரத்ததுக்கு விலை இல்லாமல் போகிறது. நடுத்தெருவில் நின்று அழுகிறான்.

பெரும்பான்மையான ஆண்களின் வாழ்க்கை இப்படித்தானே போகிறது. ஆண் என்பவன் கடைசி வரையில் தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்காகவே வாழ்ந்து கழிக்கிறான். ஒரு பெண்ணின் துயர் பேசப்பட்ட அளவுக்கு ஆணின் துயரம் எங்குமே பேசப்படுவதில்லை. அதைப் பேசும் வகையில் இது முக்கியமான நாவல்.

ஸூ ஸன்க்வானின் மனைவி திருமணத்துக்குப் பின்னே வேறு ஒருவனின் குழந்தையைச் சுமக்க நேரிடுகிறது. இந்த உண்மை அந்தக் குழந்தைக்கு எட்டு வயது ஆகும் போதுதான் 'ஸூ ஸன்க்வானுக்கே' தெரிகிறது. தன் மனைவியின் மூலம் வேறு ஒருவனுக்குப் பிறந்த குழந்தையை தன்னுடைய குழந்தையாக ஏற்றுக் கொள்வதில் அவனுக்கு இருக்கும் அகச் சிக்கல்கள் இதில் சிறப்பாக சொல்லப் பட்டிருக்கிறது.

கம்யூனிச சித்தாந்தங்களை நடைமுறைப் படுத்துவதில் அரசுக்கு ஏற்படும் குழப்பத்தையும், அப்படியான அரசின் முடிவுகள் ஒரு சாதாரண குடிமகனை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பது நாவல் முழுவதும் ஊடு பாவாக ஆங்காங்கே கதைப் போக்கில் சொல்லப்பட்டிருக்கிறது.

சீனர்கள் பார்ப்பதற்குத்தான் நமக்கு ஒரே மாதிரித் தெரிகிறார்கள் என்றால், அவர்களின் பெயர்கள் கூட ஒரே போலவே உச்சரிப்பு கொண்டிருக்கின்றன. அவை மட்டுமே இது ஒரு சீன நாவல் என்பதை நமக்கு நினைவு படுத்திக் கொண்டே இருக்கின்றன. யூமா வாசுகி மொழிப் பெயர்த்து நான் வாசிக்கும் இரண்டாவது நூல் இது. கடினமான வார்த்தைகள் இல்லாமல் எளிமையாக மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.

சீனாவில் 'அவமானம்' என்பதைச் சுட்ட 'முகத்தை தொலைத்தல்' என்ற பதத்தைப் பயன்படுத்துகிறார்கள். உன்னால் நான் அவமானப்பட்டேன் என்று சொல்வதற்குப் பதிலாக உன்னால் நான் என் முகத்தை இழந்தேன் என்று சொல்கிறார்கள். இது எனக்கு நம் ஊர்ப்புறங்களில் 'என் முகத்த எங்க போயி வச்சுக்கிறது' என்ற பொதுவாக வழங்கப்படும் ஒரு சொல்லாடலை நினைவுபடுத்திச் சென்றது. இடங்கள் தாம் வேறு வேறு எல்லாவிடங்களிலும் மனிதர்கள் ஒன்று போலவே இருக்கிறார்கள். அங்கும் விவசாயிகளும், ஏழைத் தொழிலாளர்களுமே இரத்தம் விற்கிறார்கள். எளியவர்களே பஞ்சத்தில் சாகிறார்கள். பெண்களே இழிவுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.


O


நன்றி : மலைகள்



Comments

Popular posts from this blog

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம்

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம் -- குள்ளச்சித்திரன் சரித்திரம், வெளியேற்றம் நாவல்களை முன்வைத்து -- “சொல்லித் தீர்ந்துவிட்டன எல்லாக் கதைகளும். மறு கூறலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் புனைவு, சொல்லலின் நூதனத்தில் மட்டுமே  தன் உயிரை வைத்திருக்கிறது” – பகடையாட்டம் பின்னுரையில். இங்கே உள்ள கதைகள் அத்தனையும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன; புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை, சொல்லும் விதத்தில் மட்டுமே இனி புதிதாக ஏதேனும் ஒன்றைச் செய்ய முடியும் என்பதை யுவன் தீவிரமாக நம்புகிறார் என்பதை அவரின் புனைவுகளை தொடர்ந்து வாசிப்பதன் வழியே புரிந்துகொள்ள முடிகிறது. அப்படிப் புதிதாக தன் கதைகளைச் சொல்வதற்கான ஓர் உத்தியாக மாற்றுமெய்மையைக் கையாள்கிறார். அவரின் முதல் நாவலான குள்ளச்சித்திரன் சரித்திரமும், வெளியேற்றமும் அத்தளத்தில் எழுதப்பட்ட  அவரின் முக்கியமான படைப்புகள் எனலாம்.  எது மாற்றுமெய்மை? முதலில் எது மெய்மை? மெய்மை என்பதை எளிமையான புரிதலுக்காக யதார்த்தம் என்று கொள்வோம். பெளதீக ரீதியாக, அறிவியலின் தர்க்கத்திற்கு உட்பட்டு நிகழும் யாதொன்றையும் யதார்த்தம் அல்லது மெய்மை என்று வரைய

ரயில் புழு

வெளியிலிருந்து, கட்டை மேல் சுத்தியலால் அடிக்க வரும் ‘டொப் டொப்’பென்ற சத்தம் கேட்டே எழுந்தேன். அலாரம் எழுப்ப இன்னும் அரை மணி நேரம் இருந்தது. கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றால் சத்தம் வருவது நிற்கவில்லை. பொங்கல் விடுமுறை முடிந்து அன்றுதான் அலுவலகம் திரும்ப வேண்டும். நான்கு நாட்கள் தொடர் விடுமுறை. வெளியில் எங்கும் செல்லவில்லை. சோபாவிலிருந்து படுக்கைதான் நான் இந்த நாட்களில் அதிகம் நடந்த தொலைவு. சுகமாய்ச் சோம்பிக் கிடந்தேன். நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் என்றே மூன்று நாட்களைக் கடத்திவிட்டேன். ஊருக்குப் போக முடியாது. இங்கே நண்பர்களைப் பார்த்தாலும் அவர்களுடைய கேள்வி என்னவாக இருக்கும் என்பதை அறிவேன். இன்றும்கூட அலுவலகம் போனதும் எல்லோரும் விசாரிப்பார்கள். பொய் சொல்ல வேண்டும். சலிப்பாக இருந்தது. மொபைலை எடுத்தேன். பார்ப்பதற்கு எதுவுமிருக்கவில்லை. பேஸ்புக், இன்ஸ்டா என அனைத்துச் சமூக ஊடகங்களிலிருந்து வெளியேறிவிட்டேன். படுக்கையிலிருந்து எழுந்து கையில் பிரஷை எடுப்பதற்கு என்னை நானே பிடித்துத் தள்ள வேண்டியதாக இருந்தது. முந்தைய நாள் இரவு வரவேற்பறையின் ஜன்னல்களைச் சாத்தாமலேயே உறங்கிப் போய்விட்டேன். சாப்பிட்டுவிட்ட

கேண்மை

  தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் கலை இலக்கிய மாத இதழ் ஒன்றுக்காக நேர்காணல் வேண்டுமென்று அழைத்திருந்தார்கள். அழைத்தவர் தமிழின் முக்கியமான கவி. பக்கத்து மாநிலம் ஒன்றில் வசிக்கிறார். நேர்காணலுக்காக மாநிலம் விட்டு மாநிலம் வரவேண்டும். சிரமப்பட வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் விடாப்பிடியாக வருவதாகக் கூறிவிட்டார். முந்தைய சந்திப்பில் அவர் குறிப்பிட்டுப் பேசிய புத்தகம் ஒன்றை அவருக்குப் பரிசாக அளிப்பதற்காகப் புத்தக அடுக்கில் தேடிக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் தடித் தடியான புத்தகங்களை எடுத்துத் தூக்கவும் அவற்றை இடம் மாற்றி வைப்பதுமே அயர்ச்சியாக இருக்கிறது. கவனமாகக் கையாள வேண்டியிருக்கிறது. மூப்பின் காரணமாக விரல்களில் வலுவில்லை. அப்போதுதான் புத்தக அலமாரியில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் படத்துக்குப் பின்னாலிருந்த அந்தக் கடிதம் கண்ணில் பட்டது.   அப்பாவின் ஸ்நேகிதரும் என்னுடைய பழைய முதலாளியுமான வரதராஜன் சாரிடமிருந்து வந்த கடிதம் அது. நேரடியாக என் பெயர் போட்டே வந்திருந்தது. அப்பாவுக்கும் அவருக்கும் ஒரே பூர்விகம். மாயவரம் பக்கத்தில் சிறு கிராமம். பால்யகால ஸ்நேகிதம். இருவரும் பிற்கால