Skip to main content

புள்ளிக்குப் பதிலாக வட்டம்



மாமரக் கட்டையில் செய்த அறையின் கதவுகள் அதிக சிரமம் தரவில்லை. இழுத்து ஓங்கி அடித்ததில் தாழ்ப்பாளைப் பிணைத்திருந்த அதன் திருகாணிகள் கழன்று கொண்டன. அப்பாவின் வேட்டியினைக் கயிறாகத் திரித்துச் சுருக்கிட்டுத் தொங்கிக்கொண்டிருந்தான். எதிரே இருந்த புகைப்படத்தில் அவன் அப்பா கம்பீரமாக புன்னகைத்துக் கொண்டிருந்தார். அப்புகைப்படம் மாட்டப்பட்ட சுவரை ஒட்டிப் போடப்பட்டிருந்த மேசையின் மேலே, மருந்துப்புட்டியின் கீழே படபடத்த மருத்துவப் பரிந்துரைச்சீட்டின் ரீங்காரம் அந்த அறையின் அமைதியைக் குலைத்தது. அதன் அருகே ஒரு டயரியும் அதில் சில குறிப்புகளும் இருந்தன. 

குறிப்பு 1. 

வாழ்வில் ஊறிய கசப்பு முழுவதையும் உள்ளிழுத்துப் புகையாக்கி வெளித்தள்ளிக் கொண்டிருந்தேன். நான் புகைப்பது பற்றி அப்பாவுக்கு நன்றாகத் தெரியும். அது குறித்து அவருக்குப் புகார்கள்கூட இருந்திருக்கலாம். ஆனால் தன் வாழ்வின் கடைசிக் கணம் வரை அதைப்பற்றி ஒரு வார்த்தையும் கேட்டுக்கொண்டதில்லை. யாரிடத்தும் தனக்குத் தெரிந்ததாகக்கூட அவர் காட்டிக்கொண்டதில்லை. அவரின் பிள்ளைகளில் அவரிடம் அதிகம் பிணக்கும் சிடுக்கும் கொண்ட பிள்ளையாக நானே இருந்திருக்கிறேன். 

தள்ளுவண்டிக்கு அடியில் நிழலுக்காக ஒதுங்கியிருந்த நாய், வழக்கமான கோட்டாவுக்காகஎன்னைப் பார்த்ததும் வேக வேகமாக வாலை ஆட்டிக்கொண்டு வந்து காலை முகர்ந்து நின்றது. பார்லிஜி பிஸ்கட் பொட்டலம் ஒன்றை வாங்கிப் பிரித்துப்போட்டேன். 

நுரையீரலை நிறைத்தப் புகையின் நிகோட்டின் தீற்றல்களில் ஆசுவாசம் கொண்டிருந்த பொழுதில்தான் அந்தச் சம்பவமும் நிகழ்ந்தது. 

நான் சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு நின்றுகொண்டிருந்த கடையின் வாசலில் நீட்டிவிடப்பட்ட ஒரு துண்டு வானம் போலிருந்த கனத்த பிளாஸ்டிக் ஷீட்களை அங்கே குத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு கம்பிகளின் மேல் வைத்துப் பொருத்திக் கொண்டிருந்தனர் அவர்கள் இருவரும். பதின்களைத் தாண்டியிராத சிறுவன் ஒருவன். நாற்பதுகளின் நரைகூடி வந்திருந்த ஒருத்தர். 

“என்னடே அடிக்கடி அந்த டியூசன் வாசலே கதியாக் கிடக்கியாமே.. என்ன சேதி?” – வாயைத் திறந்து லேசாக நாக்கை மடக்கியவாறு வெளியே நீட்டி, லாவகமாக நட்டை இறுக்குவதில் அவர் கவனம் முழுவதும் குவிந்திருந்தது. 

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல அண்ணாச்சி” 

“இங்க பாருலே.. வந்தமா தொழில கத்துக்கிட்டமா. வெளியே போயி தனியா தொழில் பண்ணி பொழச்சமான்னு இருந்துக்கோ. அப்பன் இல்லாத வீடு. ரொம்ப அசிங்கமாப் போயிடும் பாத்துக்கோ. நான் சொல்றதச் சொல்லிட்டேன் ஆமா. அப்புறம் உன்னிஷ்டம்” என்று இதை அவர் சொல்லி முடிக்கும் போது அவன் தெருவில் ஒட்டப்பட்டிருந்த சினிமா போஸ்டரை வெறித்தபடி இருந்தான். 

எதிர்பாராத நேரத்தில் சுளீரென்று புடதியில் விழுந்த அடியில் நிலை குழைந்துபோன அவன் கையில் இருந்த கனத்த ஸ்பான்னர் ஒன்றைத் தவறவிட்டான். 

கடும் பசியிலிருக்கும் காட்டு விலங்கொன்றின் வளைந்த கூர்நகங்களின் பிடியிலிருந்து தேவகணத்தில் தப்பிய சிறுபறவையென அது தப்பி மிகச்சரியாக என் நடுமண்டையில் வந்து விழுந்தது. 

குறிப்பு 2 

ரிசப்சனில் பச்சைநிற காட்டன் புடவை அணிந்த பெண் என்னைப் பார்ப்பதும் தனக்குள்ளே சிரிப்பதுமாக இருந்தாள். அவளிடம் நேரே போய் என் முகத்தில் எழுதப்பட்டிருக்கும் அவளின் மகிழ்ச்சிக்கான காரணத்தைக் கேட்டுவிடலாம் என்று தோன்றியது. போய்க்கேட்டால் என்னைப் பார்க்கவேயில்லை என்று தலையிலடித்துச் சத்தியம் செய்வாள். அதையேத் திரும்பத் திரும்பச் சொல்வாள். இது அவளுடைய இடம். எனவே சுற்றியிருப்பவர்களும் அவளுக்கே ஏந்திக்கொண்டு வருவார்கள். அன்று பெட் ஷாப்பில் மயில்ராவணனுக்கு பெடிகிரி வாங்க நின்று கொண்டிருந்தபோது அப்பாவின் ஸ்நேகிதர் ஒருத்தர் அப்பாவின் பெயரைச் சொல்லி என்னை அழைத்தார். அங்கு பில் போட்டுவிட்டு வரும் பத்து நிமிட இடைவெளியில் இருபதுக்கும் மேற்பட்ட முறை “திருப்பதிசாமி திருப்பதிசாமி” என்று உரத்துக் கத்தி கத்திக் கூப்பிட்டார். 

அருகில் போய் என்னவென்று கேட்டேன். தான் அப்படி யாரையும் அழைக்கவே இல்லை என்று அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டார். எனக்கு நன்றாகக் கேட்டது. அவருக்கு என் பெயர் மறந்து போயிருக்கலாம். அதன் காரணமாக அப்பாவின் பெயர் கொண்டு என்னை அழைத்திருக்கலாம். அதில் தவறென்ன இருக்க முடியும்? எப்படிப் பார்த்தாலும் அவரின் தொடர்ச்சி தானே நான்? அவர் என்னைக் கூப்பிடவில்லை என்று சொல்லியிருந்தால் கூடப் பரவாயில்லை. தான் அப்பாவின் ஸ்நேகிதனே இல்லை என்று சொன்னதைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. 

என்னிடம் மறுத்துப் பேசிய அதே குரலைத்தான் ஒவ்வொருமுறையும் அவர் என்னைக் கூப்பிடும் போதும் கேட்டேன். இத்தனைக்கும் எனக்கு அப்போது காதுகளில் பிரச்சனை ஏற்பட்டிருக்கவில்லை. இப்போதும் கூட என் காதுகளில் பிரச்சனை ஒன்றும் இல்லை. 

முன்பு, ஒரு சிறு பிரச்சனை இருந்தது உண்மைதான். என்னால் வலதுபக்கம் திரும்பிப் படுக்கமுடியவில்லை. படுக்கையறையில் இடதுபக்கச் சுவரில்தான் அப்பாவின் அந்தக் கருப்பு வெள்ளைப் புகைப்படம் மாட்டப்பட்டிருக்கிறது. ஒரு ஹிப்பியைப் போன்று தோள்களில் புரளும் முடிக்கற்றையுடன் முதல் மூன்று பட்டன்கள் திறந்த நிலையில் காக்கைகள் பறக்கும் சட்டை அணிந்திருப்பார். முழுக்கைச் சட்டையை முட்டிக்கு மேல் இழுத்துச் சுருட்டிவிட்டிருப்பார். பெல்பாட்டம் பேண்ட்டும், கையில் புகையும் பனாமா சிகரெட்டும் உதட்டின் இருபக்கமும் நிறைந்து வழியும் மீசையும் இருக்கும் அட்டகாசமான புகைப்படம் அது. 

அப்படத்தைப் பார்த்துக்கொண்டே படுத்திருந்தால் எந்தப் பிரச்சனையுமில்லை. அது மாட்டப்பட்டிருக்கும் பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கமாய்த் திரும்பிப் புரண்டு படுக்கும்போது மட்டும் தலை கிறுகிறுவென்று சுற்றத் தொடங்கிவிடும். மொத்த பூமியும் என்னை மையமாக வைத்துச் சுழல்வது போலிருக்கும். மாறாக, அப்பாவின் புகைப்படத்தைப் பார்த்தபடியே படுத்தால் அந்தத் தொல்லை கிடையாது ஆனால் தூக்கம் கூடுவதில்லை. எங்கள் குடும்ப மருத்துவரைச் சந்தித்தேன். அவர் என்னைக் காது-மூக்கு-தொண்டை நிபுணர் ஒருவரைச் சென்று பார்க்கும்படி வலியுறுத்தினார். 

சந்தித்தேன். ஒருபக்கமாய்த் தலைசுற்றுகிறது என்றேன். 

சமீபத்தில் தலையில் ஏதாவது அடிபட்டதா என்றார். 

ஸ்பான்னர் கதையைச் சொன்னேன். அந்தச் சிறுவனுக்காக கொஞ்சம் வருத்தப்பட்டார். 

உட்செவியின் சுவரில் ஒட்டியிருக்கும் சிறுச் சுண்ணாம்புப் பொட்டுதான் பிரச்சனை என்றார். மூன்கு வேளைகள் ஐந்து நாட்களுக்கு வேளைக்கு இரண்டாய் அவருடைய மருந்தகத்தைத் தவிர வேறெங்கும் கிடைக்காத மாத்திரைகள் சிலவற்றை எழுதித்தந்தார். அத்தோடு தலைச்சுற்றல் பிரச்சனை தீர்ந்தது. ஆனால் இப்போது வலப்பக்கம் திரும்பிப்படுக்க வேண்டிய அவசியமே ஏற்படுவதில்லை. அப்பாவின் புகைப்படத்தைப் பார்த்தபடியேத் தூங்கிப் போகிறேன். காலையில் அவரின் முகத்திலேயே விழிக்கவும் செய்கிறேன். நன்றாகத் தூங்கவும் செய்கிறேன். ஆனால், அதுதான் இப்போது பிரச்சனையாகிப் போனது. 

அதைத் தீர்க்கத்தான் இப்போது மனநலமறியும் மருத்துவர் ஒருவரிடம் எனது முறைக்காக வரிசையில் காத்துக்கொண்டிருக்கிறேன். 

குறிப்பு 3 

வெகு இயல்பாக டீசர்ட்டும் ஜீன்சும் அணிந்து நோயாளிகளைச் சந்திக்கும் மருத்துவரை அன்றுதான் என் வாழ்நாளில் முதன்முதலாகப் பார்த்தேன். 

“சொல்லுங்க வருண் உங்களுக்கு என்ன பிரச்சனை?” 

“எங்கப்பாதான் டாக்டர்” 

ஒரு நெடுநாளைய நண்பனைப் போல மிகவும் அணுக்கமாக புன்னைகைத்தபடி என்னைப் பார்த்து, “அப்பாவோட பிரச்சனையில்லாத மனுசன் உலகத்துல எவனாது இருக்கானா சொல்லுங்க? அது ரொம்ப இயல்பான விசயம் தானே. நான்கூட எங்க அப்பாவை அடியோட வெறுத்த காலமெல்லாம் உண்டு. சொல்லப்போனா காஃப்கா, புதுமைப்பித்தன் போன்ற மேதைகளுக்கே இந்தப் பிரச்சனை இருக்கும் போது நாமெல்லாம் எம்மாத்திரம்? சரி, அவரோட என்ன பிரச்சனை உங்களுக்கு?” 

“அவர் எப்பவும் என்கூட பேசிட்டே இருக்கார் டாக்டர். அதான் என்னோட பிரச்சனை” 

புன்னகைத்தபடியே பேசும் கலை அவருக்கு வாய்த்திருந்தது. “ஒரு வயசுக்கு மேல போயிட்டாலே பெரியவங்களும் குழந்தைகள் போல ஆயிடறாங்க. குழந்தைகள்ட்ட இருக்கிற ‘அட்டென்ஸன் சீக்கிங் பிகேவியர்’தான் இப்போ பெரியவங்கக்கிட்டேயும் இருக்குது. ஒரு குழந்தைக்குத் தேவையான கவனத்தை நீங்க கொடுக்கலனா என்ன பண்ணும்? ஆடும், பாடும், கத்தி அழும், சில குழந்தைகள் தரையில புரண்டு அழும். கைல கிடைக்கிற பொருளை எடுத்து உடைக்கும். சுவத்துல போயி நங்கு நங்குன்னு முட்டிக்கிற பிள்ளைகள் கூட இருக்காங்க. இதெல்லாம் ஒரு உத்தி. இது பெரியவங்களுக்கும் பொருந்தும். நாமெல்லாம் வேலை, நண்பர்கள், மொபைல், டிவின்னு எதுக்குள்ளயாவது நம்மள நாமே புதைச்சுக்கிறோம். அவங்க தனியாகிடுறாங்க. அதனாலதான் நம்ம கவனத்தை ஈர்க்கப் பாக்குறாங்க. அதுபோலத்தான் உங்க அப்பாவும் உங்ககிட்டப் பேச விரும்புறார். நீங்களும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி அவரோட பேச வேண்டியதுதானே. இன்னைக்கெல்லாம் கொஞ்சம் மனம்விட்டுப் பேசினாலே பாதிக்கு பாதி பிரச்சனைகள் குறைஞ்சிடும்.” 

“இல்லயில்ல டாக்டர். இது ஒரு வழிப்பாதை. அவர் பேசிட்டு இருப்பார். அவர் சொல்றதை மட்டும் நான் கேக்கணும். அவர் சொல்றபடி நான் செய்யணும். மத்தபடி நானா எதுவும் பேசமுடியாது. அப்படி நானா எப்போ எதிர்த்துப் பேச நினைச்சாலும் உடனே முழிப்பு வந்துடுது. அப்புறம் அவர் வரமாட்டிக்கிறார். தூக்கமும் வர மாட்டிக்குது. அப்போ நான் எப்படிப் பேச முடியும்? எனக்கும் கூட அவர்கிட்ட ஒரு மன்னிப்புக் கேட்கணும். அதுக்குக்கூட நேரம் தர மாட்டுகிறார்”

“ஓ.. மன்னிக்கணும்.. அப்பா எப்போ தவறினார்?” 

“நாலு மாசம் முன்னாடி நானும் நண்பர்களும் வெள்ளியங்கிரி மலைல டிரெங்கிங் போயிருந்தோம் டாக்டர். தொலைதொடர்புக் கோபுரங்கள் எட்டமுடியாத அமைதியின் உச்சத்தில் இருந்தோம். வானமும் பூமியும் சங்கமிக்கிற மாதிரி அற்புதமான ஒரு இடம் அது. ஆயிரம் ஊசி வந்து தச்சாப் போலப் பனிக்காத்து உடலின் ஒவ்வொரு உணர்வு முடிச்சிலேயும் உள்ளே இறங்குச்சு. மனசுக்குப் பிடிச்ச ஸ்நேகிதியை விட்டுப் பிரிய மனமில்லாமல் பிரிஞ்சு கிளம்புறதுபோல கீழே இறங்கியதும் அந்தச் செய்தி வந்தது. அடிச்சுப்பிடிச்சு ஓடி வந்தேன். அதற்குள் அவரை ஐஸ்பெட்டிக்குள் கிடத்தி வைச்சிருந்தாங்க. அவர் கடைசியா என் பெயரைச் சொல்லித்தான் கூப்பிட்டிருக்கிறார். என்கிட்ட எதையோ பேசணும் பேசணும்ன்னு திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிறார். அப்போ அது முடியாம போச்சு. அந்தக் குறையை இப்போ பேசிப் பேசித் தீர்த்துக்கிறார்” என்றேன். 

“ஓ.. ஒண்ணும் பிரச்சனையில்லை. மனுசன் அதிகம் பயப்படுற விசயம் வெற்றிடம். ஏன்னா.. அதை நிரப்புறது அவ்ளோ சுலபமில்லை. அதுவும் மனசுக்கு நெருக்கமானவர்கள் உருவாக்கிட்டுப் போற வெற்றிடம் இருக்கில்லையா அது இன்னும் கொடுமையானது. ஆனா, கொஞ்சம் கொஞ்சமா அந்த இடமும் நிரம்பும். காலம் அதையும் நிரப்பும். சிலருக்கு ஒரு மாஜிக் மாதிரி அது உடனே நடந்துடும். சிலருக்கு இன்னும் கொஞ்சம் நேரம் எடுக்கலாம். அவ்வளவுதான். இப்போ உங்களோட தேவையும் அதற்கான கால இடைவெளிதான். அதனால, ஒண்ணும் பயப்பட வேண்டாம். இப்போதைக்கு ஸ்ட்ரெஸ் குறைக்கவும் நல்லா தூங்கவும் சில மாத்திரைகள் எழுதித்தர்றேன். தொடர்ந்து எடுங்க. இரண்டு வாரம் கழிச்சு வந்து என்னைப் பாருங்க. நாம பேசலாம்” 

சக மனிதனின் மீதான பரிவின் அடர் ரேகைகள் ஓடும் அவர் கண்கள் அவருக்கு இருந்தன.

குறிப்பு 4 

விஜயராகவன் டாக்டரைப் போலத்தான் முதன் முதலில் இதைப் பற்றி நான் பேசியபோது அம்மா, தங்கை, அண்ணன்கள், அண்ணி என யாருமே நம்பவில்லை. அப்பாவின் மீது கொண்ட அதீதப் பாசத்தால் இப்படியெல்லாம் பிதற்றுகிறேன் என்றே நினைத்தார்கள். 

அவர்களின் அந்த நினைப்பைத் துண்டாக்கும் சம்பவம் ஒன்று நடந்தது. அதன் பிறகுதான் அவர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக என் மேல் நம்பிக்கை வந்தது. குறிப்பாக வீட்டுப் பெண்களுக்கு. 

அன்று காலை வீட்டில் உள்ள அத்தனை பேரும் உணவு மேசையில் அமர்ந்து காலை உணவருந்திக் கொண்டிருந்தோம். அது போன்று அனைவரும் ஒரே சமயத்தில் உண்ணும் நிகழ்வு வெகு அரிதாகவே வாய்க்கும். 

“அப்பா தன்னோட வலது கால் செருப்பை இங்கயே விட்டுட்டுப் போயிட்டாராம். ஒரு செருப்புக் காலோட நடக்குறது ரொம்ப சிரமமா இருக்காம். வருத்தப்படறார்” – யாரையும் பார்க்காமல் சாப்பாட்டுத்தட்டில் கைகளை அளைந்தவாரே சொன்னேன். 

“நீ இப்படி கிறுக்கு மாதிரி பேசுறத முதல்ல நிறுத்து. சும்மா உளறிட்டு இருக்காத. அவர் உயிரோட இருக்கும்போது அவர்கிட்ட நாலு வார்த்தை நல்லதா பேசினதில்ல. இப்போ வந்துட்டான் இதைச் சொன்னார் அதைச் சொன்னார்ன்னுட்டு. இதே மாதிரி வெளியே போய்ப் பேசி எங்க மானத்தையும் சேர்த்து வாங்கிட்டு இருக்காத” என்ற சிவாண்ணன் எச்சிற்கையை வேகமாக உதறி எழுந்தான். 

அவனைக் கையைப்பிடித்து இழுத்து அமர்த்திவிட்டு சின்ன அண்ணன் என் கண்களைப் பார்த்து, “வருண்.. அப்பாவ சுடுகாட்டுல எரிக்கும் போது அவரோட செருப்பு, கண்ணாடி, அவர் கடைசியா வாசிச்சுட்டு இருந்த கம்ப ராமாயணப் புத்தகம், அவரோட கல்யாண வேட்டி, அவரோட சிங்கப்பூர் நண்பர் பரிசாக்கொடுத்த லைட்டர், கையடக்க டிரான்சிஸ்ட்டர் முதற்கொண்டு எல்லாத்தையும் சேர்த்துப் போட்டு எரிச்சோம். அப்போ நீயும் தான் பக்கத்துல இருந்த. ஞாபகத்துல இருக்கா இல்லையா?” என்றான். 

“அப்பாவுக்கு நடக்கக் கஷ்டமா இருக்காம். அவர்தான் இன்னொரு செருப்பை எடுத்துத்தரச் சொன்னார்” என்றேன். 

அப்போது சிவாண்ணன் மறுபடியும் தட்டிலிருந்து எழுந்துவிட்டான். சோற்றுக்கையோடு என் கைகளினூடே கைவிட்டு கிடுக்குப்பிடியாகப் பிடித்து சாப்பாட்டு மேசையிலிருந்து வெளியே இழுத்தான். “வா.. வந்து நீயே அந்தச் செருப்பை எடு. செருப்பு வேணும்ன்னு கேட்டவர் அது எங்க இருக்குன்னும் சொல்லியிருப்பார் இல்ல” என்றான். 

முந்திய நாள் கனவில் அப்பா சொன்னபடி, வீட்டுக்குப் பின்புறம் கிணற்றுக்குப் பக்கத்தில் இருந்த ரோஜாச் செடியைப் பிடுங்கி எறிந்தேன். தோட்ட வேலைக்காக வைத்திருந்த மண்வெட்டியை எடுத்து அங்கே தோண்டினேன். ஒரு பூந்தொட்டி கொள்ளும் அளவிலான மண்ணை வெளியே வாரி இறைத்தபிறகு அந்தச் செருப்பு தட்டுப்பட்டது. அப்பா உபயோகித்த அதே செருப்பு. வலது கால் செருப்பு. சின்ன அண்ணன் சிதையில் அப்பாவுடன் சேர்த்து எரித்துவிட்டதாக நம்பிக்கொண்டிருந்த அதே செருப்பு. மண்துகள் ஏதும் ஒட்டாமல், புழு பூச்சி அரிக்காம்ல் நேற்று புதைத்து வைத்தாற் போல, அவர் உபயோகித்த போன்ற அதே நிலையில் இருந்தது. 

அம்மா வந்து மெதுவாக என் தோளைத் தொட்டாள். செருப்பை கைகளில் தாங்கியிருந்த என்னை எழுப்பி மார்பில் வாரி அணைத்துக் கொண்டாள். அவள் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் என் கன்னங்களைத் தொட்டு வழிந்தது. 

குறிப்பு 5 

என் மீது சிவாண்ணன் கொண்ட ஆத்திரத்துக்கெல்லாம் அவன் என் மீது கொண்ட அளப்பரிய அன்பே பிரதானமாய் இருந்தது என்பதை நான் அறிவேன். அப்பாவுடன் நடந்த அந்தச் சண்டைக்குப் பிறகு என்னைப் பற்றிய எந்தவொரு தகவலும் அவன் மூலமாகவே அப்பாவைச் சென்றடையும். 

அப்பா இறந்த பிறகு அந்த ஸ்தானத்திற்கு சிவாண்ணன் வந்தான். அப்படியான நிலைக்கு வந்ததும் ஏனோ அவனும் என்னுடன் பேசுவதை வெகுவாகக் குறைத்துக் கொண்டான். 

அன்று மதியம் தூங்கிக் கொண்டிருக்கும் போது என் கால்களை யாரோ எச்சிலால் ஈரப்படுத்துவது போன்ற உணர்வால் துள்ளி எழுந்தேன். எனது அறையின் வாசலில் அந்த நாய்க்குட்டி தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்தது. என் மனப்போக்கை மாற்றுவதற்காக சிவாண்ணன் தான் வாங்கிக் கொடுத்திருந்தான். 

அதற்கு ‘மயில் ராவணன்’ என்று பெயர் வைத்தேன். சிறுவயதில் அப்பா சொன்ன ராமாயணக்கதைகளில் என்னை அதிகம் கவர்ந்த கதாப்பாத்திரம் அது. 

குறிப்பு 6 

இது, மயில்ராவணன் வீட்டிற்கு வருவதற்கு முந்தைய வாரம் நடந்தது. முந்திய நாள் கனவில் வந்த அப்பாவின் கைகளில் அந்தச் சிறு கொலுசைப் பார்த்தேன். அது சிவாண்ணன் குழந்தையாக இருந்தபோது உபயோகப்படுத்தியதன் நினைவாக அம்மா பத்திரப்படுத்தி வைத்திருந்த வெள்ளிக் கொலுசு. தன் முதல் குழந்தைக்கு தாய்வீட்டுச் சீதனமாய் அம்மாவுக்கு வந்த பரிசு அது. அண்ணனுக்குக் குழந்தை பிறந்ததும் அதைப் புதுப்பித்து அணிவிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் அவளின் கடைசரக்குப் பெட்டியில் ஒளித்து வைத்திருந்தாள். இந்தக் கதை வீட்டிலிருக்கும் அனைவருக்கும் தெரியும். ஆனால் அண்ணனுக்குத் திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகியும் அதை புதுப்பிப்பதற்கானச் சந்தர்ப்பமே வாய்க்கவில்லை. 

அதைத்தான் அப்பாவின் கையில் புத்தம் புதிதாகப் பார்த்தேன். 

அண்ணனிடம் சொன்னால் அடிக்க வருவான். அம்மாவும் அண்ணியும் சீரியல் பார்த்துக் கொண்டிருந்த போது அவர்கள் கவனம் கலைந்திருந்த ஒரு விளம்பர இடைவெளியின் போது அந்தக் கனவைப் பற்றிக் கூறினேன். 

நான் சொல்லி முடிக்கவும், அண்ணி கதறி அழ ஆரம்பித்தாள். அவள் ஏங்கி ஏங்கி அழுவதைப் பார்க்கப் பாவமாக இருந்தது. இதை அவளிருக்கும் போது சொல்லியிருக்கக் கூடாதோ என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதுதான் அவள் அழுது குழறியபடி பேசியது கேட்டது. 

“அத்தே.. தள்ளிப் போயிருக்கு” 

இதைக் கேட்டதும் அம்மாவும் அழுதாள். அவளை வாரியணைத்து அவளது நெற்றியில் முத்தமிட்டாள். அப்பாவின் மாலையிடப்பட்டிருந்த புகைப்படத்தின் முன் நின்று கண்ணீர் சொரிய வணங்கினாள். அங்கே வைக்கப்பட்டிருந்த விபூதியை எடுத்துவந்து அண்ணியின் நெற்றி முழுவதும் நிறைத்துப் பூசினாள். “ எஞ்சாமி… எஞ்சாமி” என்று முணுமுணுத்துக் கொண்டே எனக்கும் பூசிவிட்டாள். 

குறிப்பு 7 

அப்பா என்னிடம் கனவில் எல்லோருக்குமாகப் பேசினார். ஆனால் எனக்காக ஒரே ஒரு வார்த்தை கூடப்பேசவில்லை. என்னைப் பேச அனுமதிக்கவும் இல்லை. என் மீதான அவரின் புறக்கணிப்பு மிகுந்த வேதனையைத் தந்தது. 

அவர் அந்தச் சம்பவத்தை மறக்கவே இல்லை என்பதை நான் உணர்ந்திருந்தேன். அன்று அப்படி அவரின் சட்டையைப் பிடித்திருக்கக் கூடாதுதான். இப்போது தவறாகத் தோன்றும் அந்தச் செய்கை அவர் உயிருடன் இருக்கும் போது ஒருமுறைகூட அப்படித் தோன்றியதில்லை. கடைசியாக மன்னிப்புக் கேட்டுக் கதறி அழும் வாய்ப்பைக் காலம் கருணையின்றி மறுத்துவிட்டிருந்தது. இங்கே தானே இருக்கிறார் என்று நானும் இருந்துவிட்டேன். அதற்குள் அவர் இல்லாமற் போய்விட்டார்.

ஒருநாள் இரவில் இது குறித்துப் பேசுகையில் அவர் கண்ணீர்விட்டு அழுததாக அம்மா சொன்னபோதும் கூட எனக்கு அவரிடம் மன்னிப்புக் கேட்கத் தோன்றவேயில்லை. அதிலிருந்து அம்மாவுக்கும் என்மீது கோபம். 

குறிப்பு 8 

டாக்டர் விஜயராகவன் கொடுத்திருந்த மாத்திரைகளைப் போட ஆரம்பித்திருந்த மூன்றாவது நாளிலிருந்து எனக்குக் கனவுகள் வருவது நின்று போயிருந்தது. 

ஒரு பக்கம் நிம்மதியாகவும் மறுபக்கம் அதுவே பெரும் அழுத்தமாகவும் மாறிப்போனது. ஒரே ஒரு முறை அப்பாவைப் பார்த்து மன்னிப்பு கேட்டுவிட்டால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று தோன்றியது. ஆனால் அதற்கு முதலில் கனவு வரவேண்டும். 

அன்றிலிருந்து மாத்திரைகள் எடுப்பதை நிறுத்தினேன். ஆனாலும் கனவு வரவேயில்லை. அப்பாவின் புகைப்படத்தை பார்த்தபடியே தூங்கிப் பார்த்தேன். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தூக்கம் வந்தது. ஆனால் கனவு வரவில்லை. கனவை எப்படி வரவைப்பது என்பதும் புரியவில்லை. 

முதன் முதலாக அப்பா வந்த கனவு என்னை எவ்வளவு அலைக்கழித்ததோ அதைவிட அதிகமாகக் கனவுகளற்ற உறக்கம் படுத்தியது. அவரைப் பற்றிய நினைவுகளை ஒவ்வொன்றாய் எடுத்து மீட்டிக்கொண்டே தூங்கிப் பார்த்தேன். அவரின் வேட்டியினை எடுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கினே. ஆனால், என்னால் இனி கனவுகளே காணமுடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தேன் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்தேன். கனவுகளற்ற நிச்சலனம் என்னுள் பெரும் பிரளயத்தைக் கிளப்பியது.

கனவுகள் வருவதையும், அதில் அப்பா வந்து பேசியதையும் மற்றவர்களிடம் போய்ச் சொல்வதில் தயக்கமே இல்லாத எனக்கு, கனவுகள் முற்றிலுமாக நின்று போனதைப் பற்றி யாரிடமும் பேச முடியவில்லை. தலை சுற்றுவது போல இருந்தது. ஓராயிரம் காக்கைகள் சேர்ந்து என் தலையைக் கொத்துவது போல வலித்தது. இரவு பகல் என்று கால நேரம் பார்க்காமல் தூங்கிப் பார்த்தேன். எப்போது எழுகிறேன், எப்போது தூங்குகிறேன் என்று எனக்கேப் புரியவில்லை. காலம் கொஞ்சம் கொஞ்சமாய் என் கால்களிலிருந்து நழுவிச் செல்வதைக் கண்டேன். 

மின்தடையால் தூக்கம் தடைபெற்று விழித்த நாள் ஒன்றில், மாத்திரைகள் கொண்ட புட்டியின் அடியில் படபடத்த காகிதம் ஒன்று என் கவனத்தை ஈர்த்தது. 

காற்று வருவதற்கான எந்த முகாந்திரமும் இல்லாத அந்த அறையில், மழைக்கால  தட்டான்பூச்சியின் சிறகுகளைப் போல அந்தக் காகிதம் படபடத்தது. 

அருகில் போய் அதை எடுத்துப் பார்த்தேன். “ என் பக்கத்தில் வா. மன்னிக்கிறேன் “ என்று எழுதப்பட்டிருந்தது. அது அப்பாவின் கையெழுத்துதான். வெளியூரில் இருந்த அத்தைக்கு அப்பா இன்லாண்ட் லெட்டரில் கடிதம் எழுதுவதைப் பக்கத்தில் இருந்து எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். அவர் மெய்யெழுத்துக்களுக்கு புள்ளிக்குப் பதிலாக வட்டம் போடுவதைக் கவனித்திருக்கிறேன். அதே போல வட்டமிட்டு இருந்தது. அது அவரின் கையெழுத்தேதான். 


O

Comments

  1. சுவையான கதை! ஆற்றொழுக்கு போன்ற நடை. சுவாரசியம்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம்

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம் -- குள்ளச்சித்திரன் சரித்திரம், வெளியேற்றம் நாவல்களை முன்வைத்து -- “சொல்லித் தீர்ந்துவிட்டன எல்லாக் கதைகளும். மறு கூறலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் புனைவு, சொல்லலின் நூதனத்தில் மட்டுமே  தன் உயிரை வைத்திருக்கிறது” – பகடையாட்டம் பின்னுரையில். இங்கே உள்ள கதைகள் அத்தனையும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன; புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை, சொல்லும் விதத்தில் மட்டுமே இனி புதிதாக ஏதேனும் ஒன்றைச் செய்ய முடியும் என்பதை யுவன் தீவிரமாக நம்புகிறார் என்பதை அவரின் புனைவுகளை தொடர்ந்து வாசிப்பதன் வழியே புரிந்துகொள்ள முடிகிறது. அப்படிப் புதிதாக தன் கதைகளைச் சொல்வதற்கான ஓர் உத்தியாக மாற்றுமெய்மையைக் கையாள்கிறார். அவரின் முதல் நாவலான குள்ளச்சித்திரன் சரித்திரமும், வெளியேற்றமும் அத்தளத்தில் எழுதப்பட்ட  அவரின் முக்கியமான படைப்புகள் எனலாம்.  எது மாற்றுமெய்மை? முதலில் எது மெய்மை? மெய்மை என்பதை எளிமையான புரிதலுக்காக யதார்த்தம் என்று கொள்வோம். பெளதீக ரீதியாக, அறிவியலின் தர்க்கத்திற்கு உட்பட்டு நிகழும் யாதொன்றையும் யதார்த்தம் அல்லது மெய்மை என்று வரைய

ரயில் புழு

வெளியிலிருந்து, கட்டை மேல் சுத்தியலால் அடிக்க வரும் ‘டொப் டொப்’பென்ற சத்தம் கேட்டே எழுந்தேன். அலாரம் எழுப்ப இன்னும் அரை மணி நேரம் இருந்தது. கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றால் சத்தம் வருவது நிற்கவில்லை. பொங்கல் விடுமுறை முடிந்து அன்றுதான் அலுவலகம் திரும்ப வேண்டும். நான்கு நாட்கள் தொடர் விடுமுறை. வெளியில் எங்கும் செல்லவில்லை. சோபாவிலிருந்து படுக்கைதான் நான் இந்த நாட்களில் அதிகம் நடந்த தொலைவு. சுகமாய்ச் சோம்பிக் கிடந்தேன். நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் என்றே மூன்று நாட்களைக் கடத்திவிட்டேன். ஊருக்குப் போக முடியாது. இங்கே நண்பர்களைப் பார்த்தாலும் அவர்களுடைய கேள்வி என்னவாக இருக்கும் என்பதை அறிவேன். இன்றும்கூட அலுவலகம் போனதும் எல்லோரும் விசாரிப்பார்கள். பொய் சொல்ல வேண்டும். சலிப்பாக இருந்தது. மொபைலை எடுத்தேன். பார்ப்பதற்கு எதுவுமிருக்கவில்லை. பேஸ்புக், இன்ஸ்டா என அனைத்துச் சமூக ஊடகங்களிலிருந்து வெளியேறிவிட்டேன். படுக்கையிலிருந்து எழுந்து கையில் பிரஷை எடுப்பதற்கு என்னை நானே பிடித்துத் தள்ள வேண்டியதாக இருந்தது. முந்தைய நாள் இரவு வரவேற்பறையின் ஜன்னல்களைச் சாத்தாமலேயே உறங்கிப் போய்விட்டேன். சாப்பிட்டுவிட்ட

கேண்மை

  தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் கலை இலக்கிய மாத இதழ் ஒன்றுக்காக நேர்காணல் வேண்டுமென்று அழைத்திருந்தார்கள். அழைத்தவர் தமிழின் முக்கியமான கவி. பக்கத்து மாநிலம் ஒன்றில் வசிக்கிறார். நேர்காணலுக்காக மாநிலம் விட்டு மாநிலம் வரவேண்டும். சிரமப்பட வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் விடாப்பிடியாக வருவதாகக் கூறிவிட்டார். முந்தைய சந்திப்பில் அவர் குறிப்பிட்டுப் பேசிய புத்தகம் ஒன்றை அவருக்குப் பரிசாக அளிப்பதற்காகப் புத்தக அடுக்கில் தேடிக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் தடித் தடியான புத்தகங்களை எடுத்துத் தூக்கவும் அவற்றை இடம் மாற்றி வைப்பதுமே அயர்ச்சியாக இருக்கிறது. கவனமாகக் கையாள வேண்டியிருக்கிறது. மூப்பின் காரணமாக விரல்களில் வலுவில்லை. அப்போதுதான் புத்தக அலமாரியில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் படத்துக்குப் பின்னாலிருந்த அந்தக் கடிதம் கண்ணில் பட்டது.   அப்பாவின் ஸ்நேகிதரும் என்னுடைய பழைய முதலாளியுமான வரதராஜன் சாரிடமிருந்து வந்த கடிதம் அது. நேரடியாக என் பெயர் போட்டே வந்திருந்தது. அப்பாவுக்கும் அவருக்கும் ஒரே பூர்விகம். மாயவரம் பக்கத்தில் சிறு கிராமம். பால்யகால ஸ்நேகிதம். இருவரும் பிற்கால